Read in : English
தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு மகத்தான அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அது செங்கோல். தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவ மாநிலமாக இருந்தாலும், அதுவும் இந்தத் தேசத்தில் ஓரங்கம்தான் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக அடித்துச் சொல்வதற்கு மோடிக்குக் கிடைத்திருக்கிறது இந்தச் செங்கோல்.
வரும் ஞாயிறு அன்று (28.05.23) புதிய நாடாளுமன்றக் கட்டடத்திறப்பு விழாவில் செங்கோலை நிறுவ நடத்தப்படும் சடங்கில் பிராமணரல்லாத ஆதீனங்கள் பங்குபெறப் போகின்றன. இந்த மத அடிப்படையிலான தேசியத்தை, பிராமணத் திட்டம் என்று திராவிட இயக்கம் விமர்சிக்க நேர்ந்தால் அந்த விமர்சனத்தை உடைத்தெறியவே பிராமணரல்லாத ஆதீனங்களை இந்தச் சடங்கில் ஈடுபட வைக்கிறார் மோடி.
ஒன்றிய அரசுக்கும் செங்கோலுக்கும் இடையிலான தொடர்பிற்கு வினோதமானதொரு வரலாறு இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை அடையும் பொருட்டு, உயிர்தந்த தந்தையையும் உடன்பிறந்தோனையும் கருவறுக்கும் மொகலாய இளவரசர்களின் ரத்தக்கறைகள் படிந்த கைகளைப் பேசும் சரித்திரம் மட்டுமே தில்லியை மையமாகக் கொண்டு செயல்பட்ட, கடவுளைப் பற்றிக் கவலைப்படாத நேருவுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்திறப்பு விழாவில் செங்கோலை நிறுவ நடத்தப்படும் சடங்கில் பிராமணரல்லாத ஆதீனங்கள் பங்குபெறப் போகின்றன. இந்த மத அடிப்படையிலான தேசியத்தை, பிராமணத் திட்டம் என்று திராவிட இயக்கம் விமர்சிக்க நேர்ந்தால் அந்த விமர்சனத்தை உடைத்தெறியவே பிராமணரல்லாத ஆதீனங்களை இந்தச் சடங்கில் ஈடுபட வைக்கிறார் மோடி
அதிகார மாற்றத்தைக் குறிக்கக்கூடிய சரியானதொரு சடங்கு இந்தியா போன்ற பழம்பெரும் நாகரிகத்தில் இருக்க வேண்டுமே என்று ஆச்சரியமாக மவுண்ட்பேட்டன் சொன்னபோது, அதற்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாத நேருவினால் மொகலாய மரபை மட்டுமே ஞாபகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் மரபுகளில் ஆழங்காற்பட்ட விற்பன்னரும், சொந்தமண் ஞானத்தையும் அறிவையும் தூக்கிப்பிடித்த ராஜாஜியிடம் மவுண்ட்பேட்டன் கேட்ட கேள்வியை நேரு முன்வைத்தார்.
வினாவுக்கு விடைதேடும் முகாந்திரத்தில் தமிழ் மரபுகளில் ஆழ்ந்து ஆராய்ந்த ராஜாஜி அழகான சரியான விடையைக் கண்டறிந்தார். அது செங்கோல். ஆதலால் விதியுடன் ஓர் ஒப்பந்தம் என்ற புகழ்பெற்ற தனது உரையை நிகழ்த்த மைய அரங்கிற்குச் செல்லும் முன்பு, அவருக்குச் செங்கோல் வழங்கப்பட்டது. நேரு அதிகார மாற்றத்தினால் ’சோழப் பேரரசர்’ போலானார். போதாக்குறைக்கு நாதஸ்வரக் கீதங்கள் ஒலிக்க தலைமை அதிகார மாற்றம் தமிழ்மயமானது.
மேலும் படிக்க: பாஜகவின் தேசியவாத வளர்ச்சியை திராவிட மாடல் சித்தாந்தம் ஜெயிக்குமா?
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் பேச ஆரம்பித்த நேரு இந்திய நாகரிக அம்சங்களை வியந்து விதந்தோதினார். ஆனால் அந்த நாகரிகம் தன்னைப் புதிதாகக் கண்டெடுத்துப் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறும் முன்பு, பல நூற்றாண்டுகளாக கீழ்மைப்பட்டுக் கிடந்த விசயத்திற்கு அவர் தாவினார். அந்தக் காலகட்டத்து தேவைகளைப் பற்றியும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றியும் எடுத்துரைப்பதில் படுவேகமாகக் கவனம் செலுத்தியது விதியுடன் ஓர் ஒப்பந்தம் என்ற அவரது சொற்பொழிவு. இந்த நாகரிகப் பெருமை விசயங்கள் எல்லாம் இருக்கட்டும்; இனி லட்சக்கணக்கான வயிறுகளுக்கு உணவூட்டும் பணியில் இறங்குவோம் என்பது போல நேரு சிந்தித்தார்.
இப்போது செங்கோல் மீண்டும் கண்டெக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தனித்துவமாக இருக்கலாம்; தனிச்சிறப்போடு இருக்கலாம்; வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இந்திய, இந்து நாகரிகத்தின், கருத்தியல்களில் அதுவும் ஓரங்கம்தான்; இதுதான் சங்கிகளின் தேசியவாத கொள்கையின் மைய இழை.
மொகலாய ஆட்சியால், மரபுகளால், கலாசாரத்தால் சற்றும் பாதிக்கப்படாத, மாசுபடாத ஓர் அசல் இந்து நாகரிகத்தின் பெரும்பகுதி செழித்தோங்கி வளர்ந்த இடம் தமிழ்நாடு; அதற்குப் பாதி காரணம் அதன் புவியியல் அமைப்பு. இதுதான் பாஜகவின் கருத்து. மொகலாய ஆட்சியில் இந்திய நாகரிகத்திற்கும் அதன் பொக்கிஷங்களுக்கும் பாதுகாப்புக் களஞ்சியமாக இருந்தது திபத் என்று ராபர் துர்மன் போன்ற திபத் அறிஞர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதைப்போல பாஜகவைப் பொருத்தவரை தமிழ்நாடு மாசுபடாத, அசலான (இந்து) நாகரிகத்தின் பாதுகாப்புக் களஞ்சியம்.
செங்கோலும் அதைச் சுற்றி நிகழ்ந்த சடங்குகளும் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கலாம். ஏனென்றால் நேருவே அந்த மாதிரி விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் அல்ல. ஆனால் மோடி அரசு செங்கோலை மீட்டெடுத்து அதன் மூலம் இந்தியா என்றால் என்ன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
என்றாலும், தினமலர் நிருபர் டில்லியில் அமித் ஷாவிடம் பூடகமாகச் சொல்லியிருப்பது போல, தென்னிந்தியாவிலிருந்து பாஜக ஓரங்கட்டப்பட்டது என்பதால் இந்தச் செங்கோல் பாஜகவின் தென்னிந்திய சார்பிற்கு ஒரு குறியீடாக இருக்க வாய்ப்பில்லை. சமீபத்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் எதிர்க்கட்சி முகாமிற்கு புத்துயிர் தந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் ஆளுங்கட்சியை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அங்கே உருவாகி விட்டது.
செங்கோலும் அதைச் சுற்றி நிகழ்ந்த சடங்குகளும் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கலாம். ஆனால் மோடி அரசு செங்கோலை மீட்டெடுத்து அதன் மூலம் இந்தியா என்றால் என்ன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது
ஒருவேளை அடுத்த தேர்தலில் பாஜகவின் நிலை தமிழ்நாட்டில் மேம்பட்டால் அதுவொரு முரண்பாடாகத்தான் இருக்கும். அவசரநிலைக் காலகட்டத்திற்குப் பின்பு, 1977-இல் இந்தியா முழுவதும் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸை ஆதரித்தது.
திருக்குறள் ஓர் இந்து-இந்திய படைப்பு என்று பாஜக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகிறது. சமீபத்தில் பபுவா நியூ கினி தேசத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை மோடி வெளியிட்டார். உலகத்திலே முதுபெரும் மொழியாக ஜீவித்திருக்கும் தமிழைக் கொண்டிருப்பதினால் இந்தியா உயர்ந்ததொரு தேசம் என்று மோடி சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலையின் தலைமையில் பாஜக திமுகவின் எதிர்க்கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. கடந்த விஜயத்தின் போதுகூட, மோடி தமிழர்களோடு இணக்கமாக சென்றது போலத் தெரிந்தது.
மேலும் படிக்க: கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?
2019-இல் இந்தியா முழுவதும் மோடி அலை அடித்தபோது தமிழர்கள் பாராமுகமாக இருந்தனர்; பகையுணர்வோடும் இருந்தனர்.இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்தும் பாஜகவை விட்டு விலகும்போது தமிழ்நாடு அந்தக் கட்சிக்குச் சாதகமாக மாறலாம். முரண்பாடுகள் மலிந்த தமிழின் மரபுகளுக்கும் அதன் தனித்துவத்திற்கும் அது பொருத்தமாகக்கூட இருக்கக் கூடும்.
Read in : English