Read in : English
துர்கா மெக்கானிக்கல் என்ஜினியர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தற்போது சென்னை மாநகராட்சித் தேர்தலில் 124வது வார்டில் பாஜக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டிலும் தனது தடத்தைப் பதிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிரம்பிய தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வைக்கும் முயற்சியாக, உள்ளாட்சித் தேர்தல்களிலும் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்தாலும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாஜக, பொதுவெளியில் அறிமுகமில்லாத புதிய முகங்கள் தாமரையின் அடையாளமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். அதுபோன்ற புதுமுகம்தான் துர்கா.
மயிலாப்பூரில் உள்ள 124 வார்டு உள்ள பகுதியில் பிரபலமான ஏழு சிவன் கோயில்களும் 3 விஷ்ணு கோயில்களும் உள்ளன.
சென்னை மயிலாப்பூரில் காரணீசுவரர், தீர்த்தபாலீசுவரர், வெள்ளீசுவரர், விருபாக்சீசுவரர், வாலீசுவரர், மல்லீசுவரர், கபாலீசுவரர் உள்ளிட்ட சிவாலயங்களும், ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆதிகேசவப் பெருமாள், மாதவப் பெருமாள் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் 70 சதவீதம் பிராமணர்கள். 30 சதவீதம் பிற பிரிவினர். பிராமண வாக்குகளை ஈர்க்கும் வகையில் பெண் வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது. பாஜகவுக்கு புதிய முகம். அதேசமயம் தொகுதிக்கும் புதிய முகம். அவரது வாக்கு ஆழ்வார் பேட்டையில் உள்ளது. அங்கு வாக்களித்து விட்டு முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் இருக்கும் பி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளி வாக்குச்சாவடி அருகே அவரை சந்தித்தோம். அப்போது மாலை 4.30 மணி. வாக்களிக்கும் நேரம் நிறைவு பெற இன்னும் 30 நிமிடங்களே இருந்ததால் அவசர அவசரமாக கடைசி நேரத்தில் சிலர் வந்து வாக்களித்தனர். அதனால் அந்தப் பகுதியே பிசியாக இருந்தது.
பள்ளிக்கு வந்த துர்கா ஒவ்வொரு பூத்திற்கும் சென்று அதுவரை எவ்வளவு வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பதை சிறிய நோட்டில் குறித்து கொண்டார். அவருடன் கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஒரு பெண் வழக்கறிஞரும் தனது டாக்டர் மகளும் உடனிருந்தனர். கணவர் வேறொரு இடத்தில் இருந்தார். ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பதிவான வாக்குகளை குறித்து கொண்ட துர்கா, கட்சி உறுப்பினர்களுடன் அங்கேயே புகைப்படமும் எடுத்து கொண்டார். அவர் பூத்திற்கு சென்று வாக்குப்பதிவு விவரம் சேகரிக்கும் போது வாக்களித்து விட்டு வெளியே வந்த வயதான பிராமணப் பெண் தன்னுடன் வந்த மற்றொரு இளம் பெண்ணிடம் தாமரை மலரும் என ஆர்வமாக கூறி கொண்டே சென்றார். அதே நேரம் அவருக்கு பின்னால் ஹிஜாப் அணிந்த இரு பெண்கள் வாக்களிக்கக் காத்திருந்தனர்.
பாஜக சார்பில் துர்கா போட்டியிட்டாலும் அதற்கான எந்த ஒரு அடையாளங்களையும் அவரிடமோ, அவருடன் வந்தவர்களிடமோ பார்க்க முடியவில்லை. தேர்தல் விதிமுறைப்படி, பாஜகவை பிரநிதித்துவப்படுத்தும் காவி துண்டையோ அல்லது தாமரை சின்னத்தையோ அங்கு அவர்கள் அடையாளப்படுத்தவில்லை. பின்னர் துர்க்கா நம்மிடம் பேசத் தொடங்கினார்:
வேட்பு மனு தாக்கல் செய்தாலும், பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்த தருணங்கள் அரசியல் ஆர்வத்தை மெல்ல மெல்ல அதிகரித்தது என்றார் துர்கா.
“திருமணமானதில் இருந்து வீட்டில் சாதாரண பெண்ணாக இருந்த எனக்கு அரசியலில் ஆர்வம் இருந்ததில்லை. 2017ஆம் ஆண்டில் இருந்து எனது கணவர் பாஜகவில் இருந்து வருகிறார். மந்தவெளி மண்டல தலைவராகவும் உள்ளார். கொரோனா காலத்தில் உணவு, தண்ணீர், ஆடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மக்களுக்கு வழங்கி வந்தோம். பின்னர் 2019ஆம் ஆண்டு பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். எனினும், கட்சியில் என்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை. கணவர் தான் முழு ஈடுபாட்டோடு இருந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. என்னை தேர்தலில் போட்டியிடும்படி கூறினர். வேட்பு மனு தாக்கல் செய்தாலும், பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்த தருணங்கள் அரசியல் ஆர்வத்தை மெல்ல மெல்ல அதிகரித்தது” என்றார் துர்கா.“மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதியாக மயிலாப்பூர் உள்ளது. தண்ணீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, கால்வாய்களை தூய்மைப்படுத்தி சீரமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. அனைத்துக் குழந்தைகளும் நன்றாக படிக்க வேண்டும். அதனால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளேன். மயிலாப்பூரில் உள்ள கோயில்களை சீரமைக்கும் பணியை செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.பொதுவாகவே உள்ளாட்சிகளில் மனைவி ஊராட்சி மன்ற தலைவராகவோ, கவுன்சிலராகவோ இருந்தாலும் முழு அதிகாரமும் அவர்களது கணவர் வசமே இருக்கும். மனைவி பதவியில் இருந்தாலும் கணவரே உடனிருந்து முடிவெடுப்பவராக இருப்பார். ஆனால், துர்கா மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். டாக்டர், ஆர்க்கிடெக்ட் படித்த இரு மகள்களைக் கொண்ட ஐம்பது வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவியான துர்கா, தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். அவரது கணவர் பாஜகவில் இருந்தாலும்கூட, இத்தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதன் மூலம் அரசியலில் இரண்டாவது அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பதைப் பொருததிருந்துதான் பார்க்க வேண்டும்.
Read in : English