Read in : English
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி எதிர்பார்க்கபட்டதே. எதிர்பாராதது நடிகர் விஜய்யின் ”தளபதி விஜய் மக்கள் இயக்கம்” பல்வேறு மாவட்டங்களில் கைப்பற்றிய இடங்கள்.
அரசியலில் தனக்கான இடத்தை கைபற்ற சினிமா கவர்ச்சியை பயன்படுத்தும் மற்றொரு நடிகரின் முயற்சிக்கு தமிழ்நாடு வாக்காளர்கள் ஓரளவிற்க்கு செவி சாய்ப்பார்கள் என்றே தெரிகிறது.
தமிழக கட்சிகள், விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கையை கூர்ந்து கவனித்து, தங்கள் வாக்கு வங்கியில் ஒரு நடிகரின் பிம்ப ஊடுருவல் இருக்குமென்று வரும் காலத்தில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
விஜய்யின் ‘இயக்கம்’ ஏறக்குறைய 60 இடங்களைப் பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டாலும், அவரது சங்கம் குறைந்தது 110 இடங்களில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், அவருடைய அமைப்பு 69 இடங்களில் மட்டுமே போட்டியிட்டதாக தெரியவருகிறது..
விஜய் தன்னுடைய அமைப்பை தொடங்க மிகவும் தயக்கம் காட்டினார். அவரது அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு கட்சியை தொடங்க தனி முயற்சிகளை மேற்கொண்டார்.
சந்திரசேகர் இந்த ஆண்டு தொடக்கத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இருப்பினும், விஜய் இதை மறுத்து அரசியலில் இருந்து தான் விலகி இருப்பேன் என்று அறிவித்தார். மேலும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தனது தந்தை மற்றும் ரசிகர்களை எச்சரித்தார்.
தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த முயற்சியிலும் தனது படங்களையும் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறிய விஜய் தனது தந்தைக்கு எதிராக ஒரு வழக்கையும் பதிவு செய்தார்.
இருப்பினும், இந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தனது ஒப்புதலை வழங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கட்சி சின்னத்தையும் அவரது படங்களையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த முடியும் என்றாலும், அவர் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று விஜய் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
அவரது ரசிகர்கள் பெற்ற வெற்றி, அவர் ஒரு அரசியல் கட்சியைப் பதிவுசெய்து எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்தும்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் தான் தேர்தலில் போட்டியிட்டது என்றும் அவரது தந்தை தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம் அல்ல என்றும் நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் தேர்தலில் 40 இடங்களைப் பெற்றுள்ள்து.
இந்த தேர்தலில் அதிமுக-வின் தோல்வி, பாமக நிறுவனர் எஸ் ராமதாஸின் நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளது. இந்த தேர்தல் அதிமுக-வின் பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
அதன் முண்ணனி தலைவர்கள், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களின் கட்சியையும் கூட்டணியையும் வலுப்படுத்துவதற்குப் பதிலாக தங்களின் அதிகாரச் சண்டையில் தொடர்ந்து ஈடுப்பட்டிருந்தார்கள்.
மறுபுறம், திமுக 140 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடங்களில் 138 இடங்களை கைப்பற்றியது. 1,381 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் இடங்களில் திமுக அணி இதுவரையில் 1007 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக அணி 216 இடங்களும், மற்றவர்கள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அதிமுக முகாமில், 8 வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
அதிமுக-வில் இருந்து பிரிந்த அமுமுக 5 இடங்களிலும் தெ.மு.தி.க ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 30 இடங்களிலும், மதிமுக 14 இடங்களிலும், விசிக 12 இடங்களிலும், சிபிஎம் நான்கு இடங்களிலும், சிபிஐ மூன்றிலும் வெற்றி பெற்றனர்.
Read in : English