Read in : English

Share the Article

மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகிலேயே திமுக தலைவர் கருணாநிதியையும் அடக்கம் செய்து அங்கு நினைவிடம் எழுப்ப நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், கருணா நிதி மரணமடைந்து சில நேரங்களில் கூறியிருந்தார். ஆனால், உடனடியாக, தமிழக அரசு தரப்பில், மெரினாவில் நினைவிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்கள் நிலுவையில் உள்ளதால்,  மறைந்த தலைவரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கப்படாது என அறிக்கை விடப்பட்டது. அதனால், அரசு கிண்டி, சர்தார் வல்லபாய் படேல் சாலையில், காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தை வழங்கத் தாயாராக இருப்பதாக அறிவித்தது. இதனிடையே, திமுக தரப்பில் அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது.

இன்று காலை, இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், திமுக தரப்பில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகில் ஜெயலலிதா நினைவு மண்டபம் எழுப்புவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தரப்பில் பொது சுகாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறி அதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியதையும், அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவு மண்டபம் எழுப்பப்படுவதையும் சுட்டிக்காட்டியது. அதே போன்ற ஏற்பாட்டை அண்ணா நினைவிடத்துக்கு அருகில் மறைந்த  திமுக தலைவர் கருணாநிதிக்கும் உருவாக்கித் தர திமுக தரப்பில் கோரப்படுகிறது. திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்து, அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்கித் தர கோரியிருந்தார். அதன் பின்னர், திமுக தரப்பில் அனுமதிக் கேட்டு கடிதம் ஒன்றை அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் மூலம் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டது. இருப்பினும் அரசுத் தரப்பில் எவ்வித பதிலும் இல்லாமலிருந்தது.

அதனைத் தொடர்ந்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சட்ட சிக்கல்கள் மற்றும் வழக்குகள் இருப்பதால் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க முடியாது எனவும் அதற்கு பதில் காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, திமுக தொண்டர்கள்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் முன்பு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிமுக தலைவர் வைகோ அரசின் இத்தகைய செயல் தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது எனவும் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கூறி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது போன்றே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி,  மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகர் ரஜினி காந்த் ஆகியோரும் மெரினாவில் இடம் ஒதுக்க அரசிடம் கோரியுள்ளனர்.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day