Read in : English

முத்துவேல் கருணாநிதி (ஜூன் 3, 1924) முத்துவேல், அஞ்சுகம் தம்பதியின் தட்சிணாமூர்த்தியாக பிறந்தார். தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் முக்கிய சக்தியாக விளங்கினார். தமிழில் முன்னோடி எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய கருணாநிதியை மக்கள் ‘கலைஞர்’ என அன்புடன் அழைக்கின்றனர்; 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். 1957ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர் கருணாநிதி. இந்தியா கண்டிராத பன்முகத்தன்மையுடைய தலைவர் அவர். எழுத்தாளார், பாடலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர், கார்ட்டூனிஸ்ட், அரசியல்வாதி, நிர்வாகத் தலைவர் என தமிழ் மொழிக்காகவும் அதன் கலாச்சாரத்துக்காகவும் தன் பதின்ம வயதுகளில் இருந்து தொண்டாற்றியவர்.

அவர் தனது மனைவியர் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் மற்றும் மகன்கள் மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி என  பெரியகுடும்பமாக வாழ்ந்தவர். அவருடைய முதல் மனைவி பத்மாவதி, கர்நாடக இசை மேதை மற்றும் இசையமைப்பாளர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி. அவர் இளம் வயதிலேயேகாலமானார். அவருடைய மகன் தான் மு.க.முத்து. அடுத்து தயாளு அம்மாவை மணம் முடித்தார். அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.செல்வி மற்றும் மு.க. தமிழரசு என நான்கு பிள்ளைகள். மூன்றாவது மனைவி ராசாத்தி  அம்மாவுக்கு  ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி ஒரே மகள்.

தந்தை ஈவெரா பெரியாரின் திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் ஒருவர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரையின்  மறைவுக்கு பிறகு கருணாநிதி திமுகவின் தலைவர் ஆனார். 1971-ல் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். கருணாநிதியின் திரையுலக நண்பரான எம்ஜிஆர் திமுகவின் பொருளாளராகவும் இருந்தார். அவர்கட்சியிலிருந்து வெளியேறி, அண்ணா திமுக என்ற புதுக்கட்சியை ஆரம்பித்தார்.எம்ஜிஆர் கருணாநிதியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 1975-ல் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி.  அதன் விளைவாக அவரது ஆட்சி 1976ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு சர்க்காரியா கமிட்டியை அமைத்து கருணாநிதியின் மீதான ஊழல்  புகார்களை விசாரித்தது. அதன்பிறகு 1977-ல் நடந்த பொதுத்தேர்தலில் எம்ஜிஆரின்அதிமுக வென்றது.  தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கருணாநிதி 1989ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு 1991-ல் ராஜிவ் காந்தி மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. ஜெயலலிதா முதல்வரானார். 2011 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் 2016ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

பெரும் சகாப்தத்தின் ஒற்றை தலைவர்…. குடும்பத்தின் மூத்த தலைவர்!

கருணாநிதியின் ஆட்சியின் போது தமிழகத்தில் மேம்பாலங்கள், சாலைகள் என உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின. குடிசைமாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி,  சத்துணவு திட்ட விரிவாக்கம்  என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

மதுக் கடைகளை திறந்து   கருணாநிதி தமிழகத்தில் அமலாக்கியபோது   அதனை ராஜாஜி, காமாரசர், எம்.ஜிஆ.ஆர் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் விமர்சனம் செய்தனர். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ’தமிழகம் ஒரு கற்பூரம். அதனைச் சுற்றி எரிசக்தியென தென்னக மாநிலங்கள் உள்ளன’ என பதில் அளித்தார். பிறகு அவரே மீண்டும் மது ஒழிப்பை அமல்படுத்தினார். ஆனால் அதற்குள் மது வெள்ளம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்றது.

கருணாநிதி மாநில சுயாட்சிக்காக பெரிதும் போராடினார். அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக அவரது போராட்டம் உலகம் அறிந்தது. அதற்கு பலனாக இந்திராகாந்தி அவரது ஆட்சியை கலைத்தார்.  அவரின் தமிழ் மொழி புலமையும் ஆளுமையும் வியக்கத்தகுந்தது. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதினார். கருணாநிதியின் அரசியல் ஆளுமைக்கு நிகராக தமிழ்சினிமாவுக்கு அவர் எழுதிய வசனங்கள், திரைக்கதைகள் அவருக்கு பெரிய புகழைத் தேடித் தந்தன.

சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டரில் வசனகர்த்தாவாக உயர்ந்து புகழின் உச்சிக்கு சென்றார். அவருடைய நகைச்சுவை கலந்த பேச்சுத்திறன் அவரை மிகச் சிறந்தஅரசியல்வாதியாக அடையாளாம் காட்டியது.அவருடைய வலிமையான வசனங்கள் எம்ஜிஆர், சிவாஜி (குறிப்பாக பராசக்தி திரைப்படம்) மற்றும் எச்.எஸ்.ராஜேந்திரன் ஆகியநடிகர்களுக்கு புகழைத் தந்தது. அவரது மேடை நாடகங்கள் பகுத்தறிவு கொள்கையையும் சமூக சீர்திருத்தம்,  விதவை திருமணம், சுயமரியாதை, கலப்பு மணம் ஆகியவற்றுக்கானபிரச்சார களமாக பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தீண்டாமை, பார்ப்பனிய எதிர்ப்பு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் எழுதிய நாடகங்கள் இன்றளவும் புகழ் பெற்றவை.

கருணாநிதி தன் ஆட்சி காலத்தில் தான் வள்ளுவர் கோட்டம் (சென்னை) 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலை (கன்யாகுமரி) என அமைத்து வள்ளுவருக்கு புகழ் சேர்த்தார். அதேபோல் தமிழ்மொழி, செம்மொழி அடையாளத்தை பெற அரும்பாடுபட்டார். செம்மொழி அந்தஸ்து கிடைத்ததும் கோயமுத்தூரில் இரண்டு நாள் மாநாடு நடத்தி கொண்டாடினார். சர்வதேசகருத்தரங்கும் நடத்தினார்.

கருணாநிதியின் எதிரிகள் கூட அவரது ஆளுமைத் திறன, தமிழ்மொழி புலமை, கட்சியை கட்டிக் காப்பாற்றிய விதம்,  தலைமை செயலகத்தில்  ஆட்சியை கோலோச்சியது கண்டுவியப்படைந்தார்கள். அவருடைய ஒரு நாள் என்பது அறிவாலயத்தில் அதிகாலையில் தன் நடைபயணத்தை தொடங்குவதில் ஆரம்பிக்கும். இதை அவர் முதல்வராக கடினமான பணிகளைமேற்கொண்டிருந்தபோதும் இடைவெளிவிடாமல்  செய்து வந்தார். இரவு நேரங்களில் முரசொலி அலுவலகம் சென்று தன் உடன்பிறப்புகளுக்கு கடிதம் மூலம் செய்தியை சொல்வதை   வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் உடல் நலம் இல்லாமல் இருந்த காலகட்டத்தை தவிர நெடுங்காலமாக கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் முரசொலியில் எழுதுவதை நிறுத்தவில்லை. இதனை இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனத்தின் போதும் தவறாமல்ச் செய்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

1970களில் இருந்து ஈழத் தமிழர்களின் முடிசூடா தலைவராகவே கருணாநிதி இருந்தார். ஆனால், 1980களின் மத்தியில் எம்ஜிஆர் விடுதலை புலிகளின் இயக்கத்தை வளர்த்தார். மற்ற இயக்கங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க விடுதலைபுலிகளும் கருணாநிதியின் உதவியை நாடினார்கள்.   2009-ல் இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது அதனை தடுக்கமுடியாமல் தவித்தார். போரை நிறுத்துவதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய இந்த செயல் பலரால் கடுமையாக விமர்சிக்கபப்ட்டது. மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.  ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அவ்வப்போது கருணாநிதி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. காரணம் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி ஒருங்கிணைந்த இலங்கையை விரும்பியது. அதனை அடைவதற்கான ஆதரவை  மட்டுமே கருணாநிதியிடம் கோரியது. இதனைவைத்தே அவரை விமர்சிக்கவும் தொடங்கியது.

கருணாநிதியின் குடும்பத்தில் எழுந்த ‘குருப்பிஸம்’ குடும்ப  உறுப்பினர்களிடையே குறிப்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியது. அப்போது தன் மகள் கனிமொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ராசாத்தி அம்மாள் புகார் தெரிவித்தார். இதனை சரிகட்டும் வகையில் கட்சியில் அவர்களுக்கு சமமான  இடத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தார். அதற்காக குடும்ப -வாரிசு அரசியலை உருவாக்குகிறார் என கடும் விமர்சனத்துக்குள்ளானார். இன்னொருபுறம் முரசொலி மாறனின் மகன்கள் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனின் அதீத வளர்ச்சி, சொத்துக்குவிப்பு, சன் டிவியின் பறந்துபட்ட  நெட்வொர்க் வளர்ச்சி அனைத்துமே கட்சி நிர்வாகிகளாலும்   ஊடகங்களாலும் மக்களாலும் விமர்சனத்துக்குள்ளானது.

குடுமபத்தினரின் மீதிருந்த பிணைப்பு அவரை சரியான நேரத்தில்  நடுநிலைமையுடன் முடிவெடுக்க தடுமாற வைத்தது. கட்சியை விட்டு மு.க.அழகிரியை நீக்கினார்.  தொலைதொடர்பில் 2ஜி குற்றச்சாட்டு, கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான வழக்குகள், மாறன் சகோதரர்களின் வழக்குகள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து 2014-ல் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை படுதோல்வி அடைய வைத்தது.

பேச்சுத் திறமையால் வளர்ந்த கருணாநிதி இறுதி காலத்தில் பேசமுடியாமல்  இருந்தது அவரது துன்பத்தை இரட்டிப்பாக்கியிருக்கும். அதேவேளையில் குடும்பத்தில் உண்டான பிளவுகள்அவரை நிம்மதியின்றி உலாவரச் செய்தது. இறுதியில் அவை  அனைத்தும் அவரது உடல்நிலையை பாதித்தது.

தமிழகத்தின் சுயாட்சிக்காகவும் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்காவும் ஒற்றுமைக்காகவும் ஓங்கி குரல் கொடுத்த ஓய்வறியா பெரும் குரல் இன்று மௌனமானது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival