Read in : English
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, கடந்த 70க்கும் மேலான ஆண்டுகளில் முதல் தடவையாக மோசமான பொருளாதார, அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது. உணவு விலைகள் இதுவரை இல்லாத அளவில் 30 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. இது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டுமே. நாட்டின் 2.2 கோடி மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை. மருந்துகள், சமையல் வாயு, எரிபொருள், அடிப்படையான, முக்கியமான பொருட்கள் ஆகியவற்றில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் மின்சார தடங்கல்கள் எல்லாம் சேர்ந்து நாட்டைச் சோகத்தில் தள்ளிவிட்டன.
தீவு முழுக்கப் போராட்டக்காரர்கள் தெருக்களில் ஆயிரக்கணக்கில் குவிந்துவிட்டார்கள். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரும், இந்நாள் பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எங்கும் கேட்கின்றன. வாக்களித்து அவர்களை அதிகாரத்தில் அமரவைத்த 69 லட்சம் வாக்காளர்கள், இப்போது அவர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
பெரும்பாலும் படித்த இளைஞர்கள் அடங்கிய கிளர்ச்சிக்காரர்களின் அறைகூவல்கள் இவைதான்: “வீட்டுக்குப் போ கோத்த” (கோத்த என்பது ஜனாதிபதியின் முதல் பெயரின் சுருக்கம்); மற்றும் “வீட்டுக்குப் போ ராஜபக்சே.” ராஜபக்சே குடும்பம் கொள்ளையடித்த பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை இலங்கை மக்களிடமே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் கோரிக்கை.
அவர்களை மிகவும் கோபப்படுத்திய விஷயம், ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மூன்று முக்கிய அமைச்சர்கள் என்று ராஜபக்சே குடும்பத்தாரிடமே மொத்தமாக அதிகாரம் முழுவதும் குவிந்துகிடப்பதுதான்.
இந்த வார ஆரம்பத்தில் இலங்கையின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் நெருக்கடியைப் பற்றிய விவாதத்தோடு தொடங்கியது. ஆனால் தீர்வு பற்றி எந்தவொரு ஒருமித்த கருத்தும் இதுவரை எட்டப்படவில்லை. தேசத்தில் பற்றியெரியும் பிரச்சினையை எதிர்கொண்டு ஆவன செய்ய அரசும், எதிர்க்கட்சிகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியவில்லை என்பது நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது.
தேசத்தின் பாதுகாப்பைவிட தங்கள் பாதுகாப்பே முக்கியமாகப் போய்விட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. தெருக்களில் ஜனாதிபதி, பிரதம அமைச்சர், மற்றும் அரசு ராஜினாமா செய்யும்படி உரத்த குரல்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் பின்புலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றாக இணைந்து மும்முரமாகப் பணியாற்றி நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய உண்மையான ஆசையைவிட அதிகாரத்தின் மீது இருக்கும் பசி மிக அதிகமாகவே இருக்கிறது.
தேசத்தைப் பிடித்தாட்டும் உடனடி பிரச்சினைகளைத் தீர்க்கும்வண்ணம் உருவாகும் ஓர் இடைக்கால அரசில் வந்துசேரும்படி எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. அவர்கள் விரும்புவது முழுமையான அரசியல் அதிகாரம். ஒன்றாக இணைந்து மும்முரமாகப் பணியாற்றி நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய உண்மையான ஆசையைவிட அதிகாரத்தின் மீது இருக்கும் பசி மிக அதிகமாகவே இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இலங்கையில் இருக்கும் 38 வணிகம் மற்றும் தொழில் சார்ந்த சங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் எழுதி பெரும் அழிவைத் தடுப்பதற்கு, பொருளாதார நெருக்கடியை உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
தற்போதைய நிலைமை நாட்டின் பொருளாதாரத்தை படுவேகமாக அழித்து கொண்டிருக்கிறது என்றும், பொருட்கள் வழங்கும் சங்கிலித் தொடரின் வீழ்ச்சி நிதிச்சந்தைகளையும், வங்கி அமைப்புகளையும் கடுமையாகப் புரட்டிப் போட்டுவிடும் என்றும் நொந்துபோயிருக்கும் தனியார்துறை குரலெழுப்பியுள்ளது.
”எல்லாத் தொழில்களும், ஏற்றுமதித் துறையும், மற்றும் பிற அதிமுக்கியமான பொருளாதாரத் துறைகளும் அப்படியே உறைந்துபோய்விட்டால், அதன் விளைவாக சமூகக் கட்டமைப்பும் சீர்குலைந்துவிடும். குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும்,” என்று தனியார்துறைத் தொழிலதிபர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆதலால், இந்த வார முடிவுக்குள் நடைமுறைக்கு உகந்த ஓர் இடைக்காலத் தீர்வுடன் அரசியல் ஸ்திரத்தன்மையை உடனடியாகக் கொண்டுவரும்படி அவர்கள் அரசியல் கட்சித்தலைவர்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜபக்சே அரசு இதுவரை சர்வதேச நிதியத்தை (ஐஎம்எஃப்) நிதியமைப்பை அணுகாமல் தவிர்த்து வந்தது. ஆனால் நாட்டின் இந்த நெருக்கடி மேலும் தொடர்ந்தால், பெரும் வன்முறை வெடிப்பது நிச்சயம். பின்பு அது மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு அழித்துவிடும். ஆதலால் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு ஓர் இடைக்கால அரசை உருவாக்கி நாட்டைப் நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கும் உடனடி பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
இதற்கிடையில், நேற்று கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நிவார்டு கப்ரால் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று அந்த ஆணை கூறுகிறது. அவரும் நாட்டை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரச் சீரழிவுக்குப் பொறுப்பு என்று கப்ரால் மீது ஓர் அரசியல் செயற்பாட்டாளர் வழக்கு தொடுத்ததின் விளைவாக வந்த ஆணை அது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்கள் முதல் தரமான பொருளாதார அறிஞர்களாகவே இருப்பார்கள் என்பது நீண்டகால மரபு. ஆனால் ’ராஜபக்சேவின் ஆட்சி அதிகாரக் குழுவினர்’ என்று கருதப்படும் கப்ரால் ஒரு பொருளாதார அறிஞர் அல்ல. அவர் ஒரு பட்டய கணக்காளர் (சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்). அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு சாதாரணக் குடும்பத்திற்குச் சொந்தமான உணவகத்தில் கணக்காளராக இருந்தார். பின்பு அமைச்சர் அந்தஸ்துகொண்ட மத்திய வங்கி ஆளுநராக அவர் ராஜபக்சேக்களால் நியமிக்கப்பட்டார்.
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு ஓர் இடைக்கால அரசை உருவாக்கி நாட்டைப் நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கும் உடனடி பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
அளவுக்கு அதிகமாக பணத்தை அச்சடித்து அதன் விளைவாக நாட்டில் அந்நிய செலவாணி நெருக்கடியை ஏற்படுத்தினார் என்று அவர் மீது பொதுவானதொரு குற்றச்சாட்டு உண்டு. பணம் அச்சடித்து இரண்டு ஆண்டுகள் கழித்து நெகிழ்வான பரிவர்த்தனை விகிதம் சரிந்துபோனது. இந்த ஆண்டு பிப்ரவரியில் பணவீக்கம் 15.1 சதவீதமாக உயர்ந்தது. வட்டி விகிதங்களைக் குறைவாக வைத்திருப்பதற்காக, அளவுக்கு அதிகமாகப் பணம் அச்சடித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 13 ஆண்டுகளில் நிகழ்ந்த அதிகபட்ச பணவீக்கம் இதுதான்.
இலங்கையின் நிதி நெருக்கடிக்கிடையில் தொடர்ந்து தள்ளாடும் அரசியல் ஸ்திரமின்மை, முக்கிய வளர்ச்சி பங்குதாரர்களிடமிருந்து புறநிதியுதவி பெறும் முயற்சிகளை முறியடித்துவிடும் என்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் சொல்லியிருக்கிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி வரும் வாரங்களில் இன்னும் மோசமாகின்ற சாத்தியம் உண்டு என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். தற்போது இருக்கும் மருந்து, எரிவாயு, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றோடு உணவிலும் பற்றாக்குறை ஏற்படலாம் என்பது அவர்களின் கணிப்பு.
பெரும்பாலும் புத்த சமயத்தினரும், இந்துக்களும் கொண்டாடும் புத்தாண்டு அடுத்த வாரம் வருகிறது. பொருளாதார அறிஞர்களின் கணிப்பு அவர்களுக்கு நல்ல செய்தி அல்ல.
(சர்மினி செரசிங்கே, மூத்த பத்திரிகையாளர். அச்சு, மற்றும் மின்னணு இதழியலில் செழுமையான 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ”இலங்கை: ஆசியாவின் விலகிப்போகும் அற்புதம்” என்னும் சர்ச்சைக்குரிய புத்தகத்தின் பெண் எழுத்தாளர்.
ஓர் ஒலிபரப்பு ஊடகவியலாளராக, அவர் முன்னாள் ஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதியான ஹமீத் கார்ஸாய், மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியான மௌமூன் அப்துல் கயூம், ஜப்பான் டூம்ஸ்டே கல்ட்டின் தலைவர் ஷோகோ அஸஹாரா உட்பட பல்வேறு உலக ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்திலும், இலங்கை ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனத்திலும் பல்வேறு பணிகள் செய்திருக்கிறார்.
ஃப்ரண்ட்லைன், கொழும்பு டெலிகிராஃப் உள்பட பல்வேறு உலக நாளேடுகளில் அவரது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் வர்சுஸா என்னும் ஐடி நிறுவனத்தில் தகவல் தொடர்பு மேலாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்).
Read in : English