Read in : English
inmathi.com தளத்தைத் தொடங்கும் போது சில கேள்விகள் இருந்தன. செய்தி என்றால் என்ன? செய்தியை உருவாக்குபவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தெரியும் என்று கூற முடியாது, ஆனால் inmathi.com தளத்தில் எவை செய்தியாக இருக்கக் கூடாது என்பது குறித்து சில தெளிவான முடிவுகள் உள்ளன.
செய்தி ஊடகத்தில் எவை ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்த வலுவான கருத்தை அமெரிக்காவின் வலதுசாரி சிந்தனையாளரான டேனியல் பூர்ஸ்டின் வழங்குகிறார். செய்திகள் என்பவை நிகழ்வுகளின் அறிக்கைகள் அல்லது நிகழ்வுகளை ரிப்போர்ட் செய்வது என்று நாம் கூறலாம். ஆனால், இந்த நிகழ்வுகள் இயற்கையாக நடந்ததா அல்லது ஒரு குறிப்பிட்ட விளைவை உண்டாக்க அவை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்று டேனியல் பூர்ஸ்டின் கேள்வி எழுப்புகிறார்.
பூர்ஸ்டின் காலத்தில் இப்போது இருப்பது போல டிஜிட்டல் மீடியா இல்லை. செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவனமாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள்தான் என்பதை அவர் கண்டறிந்தார். தொழில்முறையில் கைதேர்ந்த சிலர், திட்டமிட்டு சில நிகழ்வுகளை அரங்கேற்றி, அவற்றைப் பத்திரிகையாளர்களுக்குச் செய்திகளாக வழங்கினர். எனவே, ஒட்டுமொத்தமாக ஊடகம் என்பது சக்திவாய்ந்த நபர்கள் மற்றும் அமைப்புகளால் கவனமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்களின் மாபெரும் நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார். இதனை அவர் போலி நிகழ்வுகள் என்று அழைத்தார். இந்த போலி நிகழ்வுகள் இயல்பாக அல்லது நிஜமாக நடப்பதில்லை, மாறாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. எனவே செய்தி ஊடகங்களில் நாம் பார்ப்பது பெரும்பாலும் உண்மை அல்ல. ஆனால், பெரிய நிறுவனங்களால் வழங்கப்படும் உண்மையின் ஒரு குறிப்பிட்ட பதிப்பு மட்டுமே.
செய்தி ஊடகங்களில் நாம் பார்ப்பது பெரும்பாலும் உண்மை அல்ல. ஆனால், பெரிய நிறுவனங்களால் வழங்கப்படும் உண்மையின் ஒரு குறிப்பிட்ட பதிப்பு மட்டுமே.
இந்தியாவில் மத்திய பட்ஜெட் என்பது ஒரு பெரிய போலியான நிகழ்வு. இது அரங்கேற்றப்படுவதன் முன்பும் சரி, நிகழும் போதும் சரி, அதன் பின்னரும் சரி மிகப் பெரியளவில் ஊடகங்களில் கவரேஜ் கிடைக்கிறது. செய்தி ஊடகங்கள் நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்து பட்ஜெட் தொடர்பான செய்திகளை வெளியிடத் தொடங்குகின்றன.
ஆனால் உண்மையில் பட்ஜெட் உரையும் பட்ஜெட்டும் இரு வேறு விஷயங்கள். பட்ஜெட் அல்லது வரவு செலவுத் திட்டம் என்பது வருமானம் மற்றும் செலவினங்களின் உண்மையான எண்கள் தான். அதேநேரம் அரசியல் மற்றும் மக்கள் தொடர்புக்கான விளம்பர யுக்தி தான் பட்ஜெட் உரையாகும். நிதியமைச்சர் வெளியிடும் ஒவ்வொரு சிறு அறிவிப்பு குறித்தும் ஊடகங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றன. உதாரணமாக, இந்த ஆண்டு, “புதுமையான நிதி திரட்டுதல்” மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டு, அவை சாலைகளுக்காகச் செலவிடப்படும் என்றார். இதில் புதுமையான நிதியுதவி என்ற வார்த்தை முக்கியமானது. அதாவது, உண்மையில் இந்தத் திட்டத்திற்கு அரசு பெரியளவில் செலவு செய்யாது.
உதாரணமாக, 1 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்க அரசு முடிவு செய்யலாம். ஆனால் பட்ஜெட் உரையில் அவை அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. பட்ஜெட் உரையில் விவசாயத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளிக்கிறோம் என்ற ரீதியில் நிதியமைச்சர் பேசுவார். ஆனால், உண்மையில் இதற்கான கடன்களை வங்கிகள் தான் அளிக்கும் என்பதை அவர் சொல்வதில்லை. பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு இருக்காது. அதற்கு பதிலாக வங்கிகள் விவசாயிகளுக்கு வழங்கும் விவசாயக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும்.
விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை செலுத்த முடியாதபோது அதை வாராக்கடன் என்று வங்கிகள் அறிவித்தால், அந்தத் தொகையை அரசுத் திருப்பித்தரும் என்று உறுதி அளிக்கும். வாரா கடன் என்று அறிவிப்பதற்கு முன், எதன் அடிப்படையில் கடன் வழங்கப்பட்டது என்பதையும் அதற்கான நியாயமான காரணங்களையும் கடன் வழங்கிய அதிகாரிகள் சொல்ல வேண்டும். இந்த நடைமுறைகளையெல்லாம் கருத்தில் கொண்டே பல நேரங்களில் வங்கி அதிகாரிகள் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்க முன்வருவதில்லை.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சரின் பெரும்பாலான அறிவிப்புகள், செலவழிக்கிறோம் என்ற அறிவிப்பாக இருக்காமல், செலவழிக்க அரசு தயாராக உள்ளது (statements of intent) என்ற ரீதியிலேயே உள்ளது. வருமான வரியில் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வரி செலுத்துவோருக்கு எந்தவிதமான சலுகைகள் இல்லாதது இந்த ஆண்டு பட்ஜெட்டில் பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இப்போது ஜிஎஸ்டி நடைமுறையில் தான் அனைத்து மறைமுக வரிகளும் வருகின்றன. எனவே, பட்ஜெட் உரைக்கும் உண்மையான பட்ஜெட்டுக்கும் இடையேயான தொடர்பு மேலும் குறைகிறது.
கடந்த கால பட்ஜெட்களில், சிறிய மற்றும் பெரிய சலுகை அறிவிப்புகள், மறைமுக வரிகள் அதிகரிப்பு ஆகியவை பெரிய செய்திகளாக மாறும். ஆனால் இப்போது அவை இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் இப்போது ஜிஎஸ்டி நடைமுறையில் தான் அனைத்து மறைமுக வரிகளும் வருகின்றன. எனவே, பட்ஜெட் உரைக்கும் உண்மையான பட்ஜெட்டுக்கும் இடையேயான தொடர்பு மேலும் குறைகிறது.
அனைத்து அரசியல் ரீதியான பேச்சு, கதி சக்தி (வேகமான வளர்ச்சி), அம்ரித் கால் (நல்ல காலத்திற்கான தொடக்கம்) போன்ற விளம்பர யுக்தி சொற்கள் இருந்தாலும்கூட பட்ஜெட் கணக்கில் சில முக்கிய அறிவிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. 2021-22இல் ரூ.5.54 லட்சம் கோடியாக இருந்த மூலதனச் செலவுகள் 2022-23ல் ரூ.7.5 லட்சம் கோடியாக, அதாவது 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். அத்துடன் மாநில அரசுகளுக்குச் வழங்கப்படும் உதவித்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் சேர்த்து ரூ.10.5 லட்சம் கோடி. அமிர்த கால் திட்டத்தில் உறுதியளித்த அனைத்து வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இது அடிப்படையாக அமையும் என்றும் கூறினார். முன்னதாக அவர் தனது உரையில், போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பற்றியும் பேசினார்.
Ðபட்ஜெட் ஆவணங்களைப் பார்த்தால் சாலைகள் மற்றும் பாலங்களை ஏற்படுத்த சுமார் ரூ.66,000 கோடியும், ரயில்வே செலவுகளுக்கு ரூ.20,000 கோடியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவரும். இவை இரண்டும் தான் மூலதனச் செலவு அதிகரிப்பில் முக்கியமானவை. மாநில அரசுகளுக்கான உதவித் தொகை ரூ.1.18 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தப்படும். மத்திய அரசின் மொத்த பட்ஜெட் செலவினம் ரூ.40 லட்சம் கோடி இந்த நிதி அதிகரிப்பு என்பது மொத்த்தில் பார்த்தால் குறைந்த அளவு சதவீதம்தான்.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பிற நாடுகளில் அரசுகள் அறிவித்துள்ள மிகப் பெரிய மூலதனச் செலவுத் திட்டங்கள் அளவுக்கு நமது அரசின் திட்டங்கள் பெரிதாக இல்லை.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பிற நாடுகளில் அரசுகள் அறிவித்துள்ள மிகப் பெரிய மூலதனச் செலவுத் திட்டங்கள் அளவுக்கு நமது அரசின் திட்டங்கள் பெரிதாக இல்லை. உதாரணமாக. அமெரிக்காவின் மொத்த பட்ஜெட் $6 டிரில்லியன் ஆக உள்ள நிலையில், ஊக்கத்தொகைக்காக அந்நாடு $1.8 டிரில்லியன் ஒதுக்கியுள்ளது. இவை அனைத்தும் அரசினால் நேரடியாகச் செலவழிக்கப்படாது என்ற போதிலும், இவை பொருளாதாரத்தை உந்தித்தள்ள அந்த அரசு எவ்வளவு தூரம் முயல்கிறது என்பதையே காட்டுகிறது.
நமது செலவினங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கடனுக்கு வட்டி செலுத்துதல், மாநிலங்களுக்கு நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு, மாநிலங்களின் வரிகளின் பங்கு, பாதுகாப்பு, மானியங்கள், ஓய்வூதியம், மத்திய அரசின் துறை திட்டங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தான் செல்கிறது. எந்த பட்ஜெட் என்றாலும் இவை நிலையானவை. இதற்கும் பட்ஜெட் திட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மீதமுள்ள 10 சதவீதம்தான் பட்ஜெட் உரையில் உள்ளது.
இதற்கிடையில், ஊடகங்கள் ஒரு போலி நிகழ்வு கட்டமைப்பை உருவாக்குகின்றன. ஆனாலும்கூட, தமிழ்நாட்டுக்கு கவலையளிக்கும் சில விஷயங்களும் இருக்கின்றன. ஒன்றுபட்ட,
மையப்படுத்தப்பட்ட மற்றும் வலிமையான இந்தியா என்ற குறிப்பிட்ட சித்தாந்தத்தை பாஜக கொண்டுள்ளது. பாஜக ஒரு தேசியவாதக் கட்சி, இந்தியா என்றால் என்ன, அது பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கக் கூடாது, இந்தியா ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அது நினைக்கிறது. மேலும், இரண்டு முறை மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதால், மாநில உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் தனக்கு இஷ்டப்பட்ட பாணியில் செயல்படும் அதிகாரம் தனக்கு இருப்பதாக மோடி அரசு தொடர்ந்து நம்புவதாகவே தெரிகிறது.
தேசம் எங்கே இருக்கிறது, தேசத்தை எங்குக் கொண்டு செல்ல நினைக்கிறார்கள் என்பதை அரசின் திட்டங்களுக்கு இவர்கள் பயன்படுத்தும் இந்தி வார்த்தைகளே ஓர் எடுத்துக்காட்டு. இவை பிராண்டிங் நோக்கங்களுக்காகச் செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும் கூட, மத்திய அரசையும் பாஜகவையும் தமிழர்களுடனான தொடர்பை மேலும் அந்நியப்படுத்துவதாகவே உள்ளது.
அம்ரித் காலா? அப்படின்னா?
Read in : English