Read in : English

நியூட்ரினோ குறித்த செய்திகள் மீண்டும் தலையெடுத்துள்ளன. மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு தலைமையிலான குழு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட கூடாது என வலியுறுத்தினர். தமிழ முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து முன்னர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த திட்டம் குறித்து பல்வேறு புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மைக்கு புறம்பான இது போன்ற கருத்துக்கள் மக்களின் பகுத்தறிவுக்கே சவாலாக உள்ளதாக இருக்கின்றன.

உண்மையை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இரண்டு பாகங்களாக வரும் இந்த கட்டுரையின் முதல் பாகம் இது.

நியூட்ரினோ நோக்குகூடம் குறித்து சுழலும் புரளிகளில் இரண்டு கிழே:

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொட்டிப்புரம் பகுதியில் அமையவிருக்கும் இந்திய நியூட்ரினோ நோக்குகூடம் ஏற்படுத்தும்போது வெடிக்கப்படும் வெடிகளால் சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள முலைப்பெரியார் உட்பட அணைகளுக்கு ஆபத்து

பெர்மி லேப் எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் எடுபிடி ஆய்வுதான் இது; அங்கிருந்து அனுப்பபடும் நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்வதற்கு தான் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது. எனவே தான் பெர்மி லேப் உள்ள இடத்திலிருந்து சரியாக 180 டிகிரி கோணத்தில் உள்ள பொட்டிபுரத்தை தெரிவு செய்துளார்கள். இந்த ஆய்வே அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டாக மேற்கொள்ளும் ரகசிய குண்டு தயாரிக்கும் திட்டம் தான்.

இப்படி எல்லாம் ஹாலிவுட் திகில் திரைப்படம் போல கற்பனையை கலந்து சிலர் போலி அறிவியல் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். என்ன தான் இதன் பின்னே உள்ள உண்மை.

நம்மை சுற்றி எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் துகள் தான் நியூட்ரினோ.ஒளியின் துகள் போட்டானுக்கு அடுத்தபடியாக பிரஞ்சத்தில் கூடுதல் எண்ணிகையில் இருப்பது இந்தத் துகள்களே ஆகும். தொலைவில் உள்ள விண்மீன்கள், சூரியன், காஸ்மிக் கதிர்கள் வினை புரிவதால் நம்மை சுற்றி இருக்கும் வளிமண்டலம் முதலிய இடங்களில் நியூட்ரினோ உருவாக்கி கதிர் போல பரவும். கைவிரல் நக அளவு இடம் வழி ஒவ்வொரு நொடியும் சுமார் நானுறு கோடி நியுட்ரினோக்கள் இரவு பகல் என்ற வித்தியாசம் இன்றிப் பாய்ந்துக்கொண்டே இருக்கின்றன. அதன் தன்மை குணம் முதலியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உலகெங்கும் விஞ்ஞானிகள் நோக்குக்கூடத்தை அமைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.

தாமும் இதுபோன்ற முன்னணி அறிவியல் ஆய்வில் ஈடுபடவேண்டும் எனும் நோக்கில் குறிப்பாக வளிமண்டல நியுட்ரினோக்களை ஆராயும் படியான ஒரு திட்டத்தை சில இளம் இந்திய விஞ்ஞானிகள் 2000இல் முன்வைத்தனர். அரசின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்து இறுதியில் 2015-இல் இந்த்த் திட்டத்துக்கு அரசு நிதி ஒப்புதல் அளித்தது.

நகரங்களில் வானத்தை ஆராய தொலைநோக்கிகளை அமைப்பதில்லை. நகர்ப்பகுதியில் தரையின் மீது அந்தத் தொலைநோக்கியை வைத்தால் வீடு தெரு முதலியவற்றில் பளீர் என எரியும் விளக்கின் ஒளியில் மங்கலான விண்மீன்கள் புலப்படாது. எனவே தொலைவில் உள்ள கோள்கள், விண்மீன்கள் முதலியவற்றிலிருந்து வரும் போட்டான் துகள்களைச் சேகரித்து வானவியல் தொலைநோக்கியை உயர்ந்த மலைகளின் முகட்டில் தான் நிறுவுவார்கள்.

அதே போல நியுட்ரினோ கருவியைத் தரை மீது வைத்தால் அதில் வெறும் நியுட்ரினோ மட்டுமல்ல காஸ்மிக் கதிர்களும் வந்து படும். காஸ்மிக் கதிர்கள் ஏற்படுத்தும் இரைச்சலில் நியுட்ரினோவைக் காணுதல் முடியாது போகும். எனவே காஸ்மிக் கதிர்கள் அண்டாதபடி மலையை குடைந்து குகை ரயில்பாதை போல அமைத்து அந்த சுரங்கத்தில் நியுட்ரினோ உணர்வியை வைத்து ஆய்வு செய்வார்கள்.

போதிய அளவு காஸ்மிக் கதிர்களை வடிகட்ட அடர்த்தியான பாறைகளால் ஆன சுமார் ஒன்றரை கிலோமீட்டர் உயரம் கொண்ட மலையின் கீழே மலைப்பாதை போல குகைப்பாதை தோண்டி, மலையின் உட்பகுதியில் குகை ஏற்படுத்தி நியுட்ரினோ உணர்விக் கருவியை வைக்கவேண்டும். வளிமண்ட நியுட்ரினோ ஆய்வு என்பதால் நிலநடுக்கோட்டுக்கு அருகே அமைதல் ஆய்வுக்கு வலுச்சேர்க்கும்.

மேலும் இந்த்த் திட்டம் செயல்படுத்த விவசாய நிலம் கையகப்படுத்தக் கூடாது, வனப்ப் பகுதிகளை அழிக்கக் கூடாது எனக்கருதி அதற்கு ஏற்ற பகுதியைத் தேடினர் ஆய்வு விஞ்ஞானிகள். புவியியல் அறிஞர்கள் உதவியோடு தேனி மாவட்டத்தில் பொட்டிப்புரத்தில் எல்லாம் பொருந்துமாறு ஏற்ற இடத்தைத் தெரிவு செய்தனர். அங்கே அந்த நோக்குக்கூடத்தை அமைக்கத் திட்டம் தீட்டினர்.

தன் மீது விழும் மழையின் அளவை மழைமானி அளப்பது போல இந்த உணர்வுக்கருவி மீது விழும் நியுட்ரினோக்களை அளவிடும். எந்தெந்த திசையில் எவ்வளவு நியுட்ரினோக்கள் வருகிறது என்பதை எண் தொகை செய்து நியுட்ரினோக்களின் பல தன்மைகளை அறிந்துக்கொள்ளலாம்.

சூழல் மாசு என்ற போர்வையில் இந்த திட்டத்தை சிலர் “ஆபத்து” என்று கூக்குரல் எழுப்புகின்றனர். “எங்கோ செல்லும் நியுட்ரினோக்களை இந்தப் பெரிய காந்தம் பிடித்து இழுக்கும்…. மின்வெட்டு ஏதேனும் ஏற்பட்டால் நியுட்ரினோகள் எல்லாம் சுற்றும் முற்றும் உள்ள நூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்ந்து நிலத்தடி நீரை மாசுபடுத்திவிடும்”என்று கதை கட்டி விட்டனர். மேலும் தற்போது நடைபெற்றுவரும் புனலூர் மலைக்குகை ரயில் பாதைபோலதான் இந்த ஆய்வு குகையும் அமையும். ஆயினும் இந்த ஆய்வுக் குகையைத் தோண்டும்போது பயன்படுத்தப்படும் வெடி அதிர்வுகள் முப்பது கிலோமீட்டர் சென்று முல்லைபெரியார் அணையை உடைத்துவிடும் எனப் போலியாக வாதம் செய்தனர். ஆபத்து ஏதுமற்ற, சாதுவான, மாசு எதுவும் வெளியே உமிழாத அடிப்படை ஆய்வை எதோ பூதாகரமான ஆபத்துச் சோதனை என இந்தப் போலி வாதம் சித்தரிக்க, அந்தப் பகுதி மக்கள் மனதில் கலக்கம் எழுவது ஒன்றும் வியப்பில்லை தானே.

“பிள்ளையார் பால் குடித்தார்”, “ஆறாயிரம் ஆண்டுகள் முன்னால் புஷ்பக விமானம் ஓடியது”, “ஆண் மயிலை கூடாமல், அதுசிந்தும் கண்ணீரைப் பருகி பெண் மயில் கருத்தரிகிறது” “ ஆக்சிஜனை சுவாசம் செய்து அதே ஆக்சிஜனை திரும்ப வெளியிடுவது பசு என்ற விலங்கு மட்டுமே”போன்ற போலி அறிவியல் வாதம் போன்றதே இவைகள் எல்லாம்.

மின்சுமையற்ற நியுட்ரினோ காந்தத்தால் கவரப்படும் என்பதும். ஐந்து அல்லது பத்து கிலோ வெடிமருந்தை வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் பல கிலோமீட்டர் சென்று அணையைப் பாதிக்கும் என்று கூறுவது “வீட்டுக்கு வீடு பதினாறு துளசிச் செடியை நட்டால் வளிமண்டலம் சுத்தம் ஆகி, காலநிலை ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்”, “யாகம் செய்யும் புகை காற்றைச் சுத்தம் செய்யும்”போன்ற அபத்தங்களுக்கு சமமானதே ஆகும்.

போபால் விஷ வாயு விபத்து முதல் பெரும்பாலான சம்பவங்களில் சாதாரண மக்கள் பாதிப்பு அடையும்போது அரசமைப்பு வாளாவிருந்தது என்பதே பொதுமக்களின் அனுபவம். பொருளாதார வளர்ச்சியின் பயன் பெரும்பாலும் ஒருசிலருக்கு மட்டுமே சென்று சேர்ந்து, ஏழை-பணக்காரன் இடைவெளி மென்மேலும் அதிகரிக்கும் நடைமுறை அனுபவப் பின்னணியில் எங்கள் பகுதியில் இவ்வளவு ஆபத்தான ஆய்வு அவசியமா என்ற பீதி கவலை எழுந்தது இயல்பே.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்றும் எப்போதும் பூமியின் எல்லா பகுதியிலும் பல கோடி கோடி நியுட்ரினோக்கள் விழுந்துகொண்டே தான் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியைத் துளைத்து உள்ளே சென்று நிலத்தடி நீர் மீது விழுந்துகொண்டே தான் இருக்கின்றன. மேலும் பள்ளி இடைநிலை அறிவியல் சரியாக புரிந்து இருந்தால் நியுட்ரினோ போன்ற மின்சுமையற்ற துகள்களைக் (neutral particles) காந்தம் கவர முடியாது என்பது சட்டேன்று புரிந்து போலி வாதத்தின் முகமூடி கிழிந்து போயிருக்க வேண்டும். எந்த அதிர்வும் தொலைவு செல்லச்செல்ல வீரியம் குறையும். எனவே எவ்வளவு தொலைவு வெடியின் அதிர்வு செல்லும் என்பதைச் சாதாரண எஞ்சினியர் கணக்கிட முடியும். ஆனால் ஏட்டுச்சுரைக்காய் மனப்பாடக் கல்விமுறையே அறிவியல் கல்வியாகத் திகழும் நிலையில் சாதாரண மக்களால் போலி வாதத்தைத் தோலுரித்துப் பார்ப்பது எளிதாக இருக்கவில்லை. கவலை கொண்ட பொதுமக்களுக்கு அறிவியல் விளக்கங்களை அளிக்காமல் ‘போராளிகள்’என்ற போர்வையில் போலி புனைவுகளை பரப்புவது பகுத்தறிவுக்கு வேட்டுவைக்கும் செயல் ஆகும்.

தொடர்ந்து போலியான பொய்யான வாடஹ்ங்களின் அடிப்பைடயில் திசை திருப்பும் பதிவுகள் செய்யப்படும் சூழலில் நியூட்ரினோ அடிப்படை அறிவியல் ஆய்வு திட்டம் குறித்து சமூக வலைதளத்தில் மற்றும் ஊடகங்களில் வெளிப்படும் சில கேள்விகளுக்கு என் கருத்தை தர விரும்புகிறேன்.

1) தேனியை விட்டால் இந்த ஆய்வை செய்ய வேறு இடமே இந்தியாவில் இல்லையா? ஆபத்தே இல்லை என்றால் குஜராத்துக்கு போகவேண்டியது தானே…இல்லையென்றால் கேரளவில் மேலும் பழமை வாய்ந்த பொன்முடி மலையில் அமைக்கவேண்டியது தானே?

ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் ஏற்ற இட அமைப்பு உள்ளது. ஏனோதானோ என எங்கு வேண்டுமென்றாலும் அமைக்க முடியாது. எடுத்துகாட்டாக தொலைநோக்கிகள் அமைக்கும்போது பொதுவே உயரமான மலைகளின் மேலே தான் அமைப்பார்கள். அதுபோல இந்த ஆய்வு மேற்கொள்ள சில நிலவியல் கூறுகள் அவசியம்.காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் போதாது. ஆய்வுக்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது பல அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த ஆய்வு செய்ய மலையின் அடிவாரத்தில் பாளை ரயில்குகை பாதை போல அந்த பகுதியில் உள்ள தரையோடு தரையாக குகை பாதை அமைத்து மலையின் உச்சி முடிக்கு கிழே நியுட்ரினோ உணர்வீ கருவியை வைக்க வேண்டும்.

காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும் என்பது என் எனில் அந்த மலைகள் பொதுவே கடின பாறைகள் கொண்டு இருக்கும். குகை ரயில் பாதைபோல அமைக்கும்போது கட்டுமான உறுதி வேண்டும். இந்த இடம் இந்தியாவிலுள்ள குறைந்த நில அதிர்வு பகுதியில் (Zone – II) அமைந்திருக்கிறது. எனவே சுரங்கம் அமைப்பது எளிதாகிறது. இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல.. இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை.

தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதாவது, இமயமலையைப்போல சிறு சிறு பாறைகளின் தொகுப்பாக இல்லாமல், ஒரே பாறையிலான மலைகளாக இங்குள்ள மலைகள் உள்ளன.

அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். எடுத்துகாட்டாக ஓரிடத்தில் உள்ள பாறைகள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய பொருத்தமாக இருந்தாலும்

Neutrino Observatory site at Pottipuram

தேனியின் பொட்டிபுரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தின் தளம். மேற்பரப்பில் மலையின் உள்ளே ஒரு சுரங்கப்பாதை அமைத்து கண்காணிப்பு கருவி மலையின் உச்சியின் நேர் கீழே அமைக்கப்படும்

அந்தப்பகுதி விவசாய நிலமாகவோ அல்லது அடர்ந்த காடுகளாக அமைந்து மரங்களை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இடத்தைத் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது.

அவ்வாறு விவசாய நிலமற்ற மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடி தேடி தான் இந்த மலை இறுதி படுத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்துக்காக விவசாய நிலம் ஏதும் எடுக்கப்படவில்லை அதுபோல பாறையால் ஆன மலை என்பதால் காடுகளை வெட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் வளிமண்டல நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்யும்போது அது நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அமைந்தால் நலம். காஸ்மிக் கதிர்களை போதுமான அளவு வடிகட்டி வெறும் நியுட்ரினோக்களை மட்டும் வடிகட்டவும் பழமை பாறைகள் உதவும். உணர்வீயின் எல்லா திசையிலும் சுமார் ஒரு கிலோமீட்டர் மாரை அமையும் படி இருக்கவேண்டும். எனவே சுமார் ஒன்று அல்லது ஒன்றரை கிலோமீட்டர் உயரம் உள்ள மலை தேவை.

அதற்காக கூடுதல் உயரம் உள்ள மலையை தேர்வு செய்தால் கட்டப்படும் குகையின் மீது அதன் மேலே உள்ள பாறைகளின் அழுத்தம் கூடுதலாக இருக்கும். குகை உடையும் ஆபத்து உண்டு. இதுபோல பல அம்சங்களை கொண்டு பார்க்கும்போது தான் இந்த இடம் பொருத்தம் என முடிவுக்கு வரமுடியும்.

2) பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளை கொண்டு மலையை தகர்க்கும் போது பல லட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி அகற்றும்போது சூழலில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் தானே. பூமிக்குள் சுரங்கம் செய்யும்போது நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாதா?

பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளை கொண்டு மலையை தகர்க்கும் போது பல லட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி அகற்றும்போது சூழலில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் தானே. பூமிக்குள் சுரங்கம் செய்யும்போது நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாதாஎன்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுவது வேடிக்கை.

முதலில் யாரும் மலையை உடைத்து சுக்குநூறாக ஆக்கப் போவது இல்லை. கல்குவாரியில் வெடித்து பாறைகளை அகற்றுவது போலவும் அழிக்கப் போவது இல்லை. பூமிக்குள் கிணறு போல நேராக கிழே செல்லவும் போவது இல்லை. நிலத்துக்கு அடியில் ஆழ்துளை கிணறு போல போகப்போவதும் இல்லை. மெட்ரோ பாதாள ரயில் போல, மலை குகைக்குள் ரயில் பாதை அல்லது ரோடு செல்வது போல இரண்டு டிரக் லாரி செல்லும் அகலத்தில் சுமார் ஏழு மீட்டர் உயரத்தில் மலையை குடைந்து, தரையோடு தரையாக, பாதை அமைப்பார்கள். சரியாக மலையின் உச்ச்சிக்கு கிழே அந்த பாதை சென்றதும் கட்டுமானத்தை நிறுத்திவிடுவார்கள். மலைப்பாதை என்றால் மலையின் அடுத்த பக்கம் வெளியே ரோடு வரும். அவ்வளவு தான் வேறுபாடு.

அந்த பாதையின் இறுதி முனையில் ஆய்வகம் அமையும். அதில் நியூட்ரினோ உணர்வீ அமைக்கப்படும். மழை மானி மழையின் அளவை அளவிடுவது போல இந்த உணர்வீ வளிமண்டல நியூட்ரினோக்களை அளவிடும்.

அடுத்து பயன்படுத்தப்போவது வெறும் 450 டன் வெடிமருந்து; ஐந்து வருடங்களில். பாதை போடுவதற்கு தான் இந்த வெடி என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறைக்கு மேல் வெடிக்கமாட்டார்கள். மேலும் மாலையில் விரிசல் விழாத அளவுக்கு தான் குறைவாக ஆற்றலுடன் வெடிப்பார்கள். மேலும் இர்னடுமாதங்களில் சுமார் 300 மீட்டார் குகை அமைந்து விடும். அதன் பின்னர் உள்ளே கட்டுமானம் நப்டப்பது கூட வெளியே புலப்படாத அளவு தான் விளைவுகள் இருக்கும்.

தற்போது பல மாநகரங்களில் தரைக்கு கிழே மெட்ரோ ரயில் ஏற்படுத்துவதற்கு சுரங்க பாதை அமைக்கிறார்கள். கல்கத்தாவில் தற்போது ஆற்றுக்கு அடியில் செல்லும்படியான சுரங்கம் அமைக்கப்படுகிறது. எனவே இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ள நுட்பம் தாம். இந்த பகுதிக்கு அருகே புனலூர் ரயில் குகை பாதை போலதான் இதுவும்.

அடுத்து குறிப்பிட்ட ஆற்றலுடன் வெடி வெடித்தால் அந்த வெடியிலிருந்து உருவாகும் அதிர்வு அலைகள் எந்த விகிதத்தில் எந்த தொலைவில் எந்த ஆற்றலுடன் இருக்கும் என்பதை கணக்கிட சூத்திரங்கள் உள்ளன. எந்த ஒரு அதிர்வும் தொலைவு செல்ல செல்ல மங்கும் என நாம் அறிவோம். அவற்றை கொண்டு எளிதில் இவ்வாறு வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வு எவ்வளவு இருக்கும் என கணிதம் செய்துவிடலாம். Wt என்ற அளவு வெடிமருந்தை வெடித்தால், “Dist”என்ற தொலைவில் ஒருநொடியில் அதிரும் உயர்ந்த பட்ச அளவு எவ்வளவு என்பதை கிழ்கண்ட சூத்திரம் தரும்.

PPV = H x (Dist / Wt0.5)-1.6

இதில்H என்பது அதிர்வு கடத்தும் தன்மை. கடினமான தரையில் கூடுதல் தொலைவும், மணல் போன்ற பாங்கு உள்ள பகுதியில் குறைவான தொலைவும் தான் அதிர்வு செல்லும் என நாம் அறிவோம். அந்த பகுதி நிலஅமைப்பு மிககூடுதல் தன்மை கொண்டுள்ளது என்று வைத்துக் கொண்டாலும் கூட ஐநூறு மீட்டர் தாண்டி அதிர்வு உணரக் கூடிய நிலையில் கூட இருக்காது.

இந்த குகைப்பாதை அமைக்கும்போது உருவாகும் அதிர்வலைகள் 500 மீ தொலைவிற்கப்பால் 1 மி மீ / செகண்ட் க்கும் குறைவாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிகின்றன. இந்த அளவு நுணுக்க அதிர்வை உணரக்கூட முடியாது. வைகை மற்றும் முல்லைப்பெரியாறு போன்ற நீரணைகள் 30 கீ மீ தொலைவிலுருப்பதால் எந்த ஒரு விளைவும் அவைகளுக்கு அறவே இருக்காது. இந்த அதிர்வலைகளை அருகிலுள்ள கிராமங்களிலும் உணர முடியாதென்பதுவே உண்மையாகும்.

இரண்டாம் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

த. வி. வெங்கடேஸ்வரன், புதுதில்லியில் உள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி.
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival