Read in : English

Share the Article

மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31 இரவு முதல் அனைத்து விசைப்படகு மற்றும் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.

இதன் விளைவாக, மேற்கு கடற்கரை மீன் பிரியர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் மீன் குழம்பும் வறுத்த மீனும் சாப்பிட வாய்பில்லை. இருப்பினும், தடைக்காலத்தில் தங்கள் நாட்டுப் படகுகளுடன் கடலுக்குச் செல்லும் (2 நாட்டிக்கல் மைல்தூரம்) பாரம்பரிய மீனவர்கள் உபயத்தால், கடற்கரையோர வீட்டுச் சமையலறைகளில் மீன்வரத்து இருக்கும்.

இந்தச் சிறிய மீனவர்களுக்கு துணையாக தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள். கர்நாடக ’நாடதோனி’களுடன் (நாட்டுப்படகு) தமிழ்நாட்டுப் பாரம்பரிய மீனவர்களின் வண்ணமயமான 30 அடி படகுகள் மற்றும் வலைகளும் மங்களூரு கடற்கரையில் இணையத் தொடங்கியுள்ளன. சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் கிழக்குக் கடற்கரையில் உள்ள பிற மீனவ நகரங்களில் இருந்து தமிழக மீனவர்கள் தங்கள் படகுகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு சாலை வழியாகச் செல்கின்றனர். முதற்கட்டமாக 12 தமிழக படகுகள், உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து மீன்பிடிக்கத் தயாராகி வருகின்றன.

குறைந்த சக்தி கொண்ட நாட்டுப்படகுகளை பயன்படுத்தும் அண்டை மாநில மீனவர்களை கர்நாடகக் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிப்பது எழுதப்படாத ஒரு மரபு

உள்ளூர் மீனவ சங்கமான கரவாலி மீனுகரரா அபிவ்ராத்தி மண்டலி, கடந்த வாரம் நடந்த கூட்டத்தில், குறிப்பிட்ட வகை படகுகளைப் பயன்படுத்தும் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

”குறைந்த சக்தி கொண்ட நாட்டுப்படகுகளை பயன்படுத்தும் அண்டை மாநில மீனவர்களை நமது கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிப்பது எழுதப்படாத ஒரு மரபு. இதற்கு அடிப்படையிலேயே வாழ்வாதாரப் பிரச்சினைகள்தான் காரணம். கிழக்குக் கடற்கரையில், இந்த மீனவர்களுக்கு பருவமழைக் காலத்தில் வாழ்வாதாரம் இருக்காது,” என்று மூத்த மீனவ தலைவர் சதீஷ் பனம்பூர் கூறினார்.

மேலும் படிக்க: தமிழக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா!

மேலும் தமிழக மீனவர்கள் உள்ளூர்ச் சந்தை நிலவரத்துடன் நன்கு ஒத்துழைத்து உள்ளூர் பொருளாதாரத்திற்கு தங்கள் பங்களிப்பைச் செய்கிறார்கள். ”இந்தச் சீசனில் எங்கள் படகுகளை இங்கு கொண்டு வர நாங்கள் ரூ. 16,000-க்குக் குறையாமல் செலவழிக்கிறோம். தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பயணத்திலும், கடற்கரைப் மீன்பிடி சீசனிலும் படகுகள் தாக்குப் பிடித்து விட்டால், வேலை முடிந்ததும் நாங்கள் படகுகளை வாடகை லாரிகளில் ஏற்றி ஊர் திரும்புவோம்.

வழக்கமாக, ஒரு லாரியில், மூன்று படகுகளை ஏற்றுவோம். வழக்கமான சீசனில், நிறைய மீன்கள் பிடிபட்டால், ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம்,” என நாகப்பட்டினத்தில் இருந்து வந்த துரைசாமி விளக்கினார்.

மங்களூரு மற்றும் மால்பே துறைமுகங்களில் இருக்கும் ஏல முறை நியாயமானதும் மீனவர்களுக்கு ஆதரவானதும் என்பதால் அங்கே மீன்களை ஏலத்தில் விற்கிறோம் என்கிறார்கள் தமிழக மீனவர்கள்

“இந்த கடற்கரையில் எண்ணெய் மத்தி மற்றும் சிறிய கானாங்கெளுத்திகள் கிடைக்கும் பருவமழைக் காலங்களில் அரிதான சந்தர்ப்பங்களில் இறால்களும் அகப்படும். அவற்றை நாங்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கிறோம். மங்களூரு மற்றும் மால்பே துறைமுகங்களில் இருக்கும் ஏல முறை நியாயமானதும் மீனவர்களுக்கு ஆதரவானதும் என்பதால் அங்கே மீன்களை ஏலத்தில் விற்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார். பெங்ரேவில் உள்ள தங்கள் முகாமில் வலைகளைச் சரிசெய்து கொண்டிருந்த அவரது மனைவி ஆண்டாளம்மாள்

”நாங்கள் இங்கு வந்து திரும்பும் போதெல்லாம் கொஞ்சம் சேமித்து வைத்து அதை எடுத்துக் கொண்டு போகிறோம். கர்நாடக மீனவர்கள் அன்பானவர்கள்,” என்றார் அவர்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles