Share the Article

அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் நீண்ட நெடுஞ்சாலை அமைப்பதைத் தாண்டிய சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே, ஏன்? அதிகமான பணத்தை அரசு எங்கு முதலீடு செய்கிறது என்று பார்த்தால், சூப்பர் நெடுஞ்சாலைகளை அமைப்பதிலேயே அதிக பணத்தை செலவிடுகிறது என்பதை ஒவ்வொரு முறையும் கேள்விப்படுகிறேன். நான் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு எதிரானவன் அல்ல; ஆனால், நம் நாட்டில் பொதுத்துறை முதலீட்டுக்காக நிறைய துறைகள் இருக்கின்றன.

பொருளாதார ஊக்கத்துக்கான தொகுப்புத் திட்டத்தை  நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அறிவித்தார். 2022ஆம் ஆண்டுக்குள் 83,677 கி.மீ நீளமுள்ள சாலைகள் அமைக்க 6.92 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார். அத்துடன், வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். வாரா கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு இதர ஆதாரங்கள் தவிர, 1.35 லட்சம் கோடி வங்கிகளுக்கு கொடுக்கப்படும் என்றார்.

நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிதி அமைச்சர் அறிவித்த 6.92 லட்சம் கோடி ரூபாயில், வெறும் ஒரு லட்சம் கோடி ரூபாயை மட்டும் அதற்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள தொகையை நாடு முழுவதும் தானியங்களை சேமிக்கும் கிடங்குகள் அமைக்க செலவிட்டிருந்தால், ஆண்டுதோறும் நம் நாட்டில் முறையான சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் வீணாகும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தானியங்களை பாதுகாத்திருக்க முடியும். சேமிப்பு கிடங்குகளில் தானியங்கள், உணவுப் பொருட்கள் கெட்டுப் போய் இருப்பதையும் மண்டிகளில் உணவு தானிய மூடைகள் தண்ணீரில் கிடப்பதையும் தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். இப்படி உணவு தானியங்கள் வீணாவதை மன்னிக்க முடியாது. இப்படி பெருமளவில் உணவுப் பொருட்கள் வீணாவதைத் தவிர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் தீர்வு காணவோ அல்லது முக்கியத்துவம் கொடுக்கவோ இல்லையே ஏன்?

இந்த ஆண்டில் கோதுமை விளைச்சல் உச்சத்தைத்  தொட்டிருக்கிறது. அதேபோல், அதிக அளவில் கோதுமையை கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது அரசு. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முடியாமல் அவை வெட்ட வெளியில் வைத்திருப்பதிலும் அரசு  முந்தைய சாதனைகளை இந்த ஆண்டில் முறியடிக்க உள்ளது.

பஞ்சாபில் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டில்    126.91 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 87.39 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 72.87 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது. மொத்தமாக இம்மூன்று மாநிலங்களிலும் 287.17 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக கொள்முதல் செய்யப்பட்ட அதிக அளவு கோதுமையை சேமிப்பு  கிடங்குகளில் வைத்து பாதுகாப்பதுதான் மிகப் பெரிய சவால்.

பஞ்சாபில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 70 லட்சம் டன் தானியங்கள் திறந்தவெளியில், நீர் புகாதவகையில் மூடி சேமித்து பாதுகாக்கப்படும். கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமையை வெளியேற்றாத காரணத்தாலும், ஏற்கெனவே அங்கு வெளியேற்றப்படாமல் இருக்கும் 20 லட்சம் டன் உணவுப் பொருட்களாலும் இந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்டவை திறந்தவெளியில் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 90 லட்சம் டன் கோது திறந்த வெளியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள 44 லட்சம் டன் கோதுமை மழை காலத்திலும் தாக்குப்பிடிக்க வேண்டியதிருக்கும். திறந்தவெளியில் சேமித்துவைக்கப்படும் உணவு தானியங்களில் ‘அஃப்லோடாக்ஸின்’ என்ற பூஞ்சை தாக்கி, உண்பதற்கு பயன்படுத்த முடியாமல் வீணாகும் அபாயமும் உள்ளது. ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்திலும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகள்  இல்லாததால் அங்கும் உணவுப் பொருட்கள் திறந்தவெளியில் தான் வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களில் 50 சதவீதம் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்பட்டு வீணாக்கப்படுகிறது. பசுமை புரட்சி நடந்து 52 ஆண்டுகளாகியும் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகிறது என்றால், போதிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அரசு ஏன் முனையவில்லை. இதன் மூலம் உணவுப் பொருட்கள் வீணாக அரசே காரணமாக இருக்கிறது.  அறுவடைக்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை வீணாவதை தவிர்ப்பதில் விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசி வரும் நிலையில்,  தொடர்ந்து உணவு தானியங்களை வீணாக்குவதில் தொடர்ந்து அரசே குற்றவாளியாக உள்ளது. 119 நாடுகள் உள்ள உலக பசி, பட்டினி தரவரிசையில், இந்தியா 100ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் உணவு தானியங்களை வீணாக்குவதற்கு அனுமதிப்பது குற்றம் மட்டுமில்லை; அதற்கும் மேல். .

அண்மை காலத்தில் கோதுமையை அதிக உற்பத்தி செய்து வரும் மத்தியபிரதேசத்திலும் இதேநிலைதான். அங்கும் 50 லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்திலும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகள்  இல்லாததால் அங்கும் உணவுப் பொருட்கள் திறந்தவெளியில் தான் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலை நம் நாட்டில் உணவு மேலாண்மை சட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. கொள்கைகளை உருவாக்கும் அரசு அதிகாரிகள் இவ்விஷயத்தில் ஏன் தங்களது கண்களை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்? சேமிப்புக் கிடங்கைக் கட்டுவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லையே!

பஞ்சாபில் 17.5 லட்சம் டன் தானியத்தை சேமிப்பதற்காக 32 இடங்களில் தானியக் கிடங்குகள் அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.  90 லட்சம் டன் கோதுமை திறந்த வெளியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் பயன் துளி அளவுதான். கடந்த கால ஆட்சியாளர்கள் நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில் வீடுகள் கட்ட முடிகிறபோது, மிகவும் அவசியத் தேவையான கிராமப்புற தானிய சேமிப்புக் கிடங்குகளை ஏன் கட்டவில்லை என்பது எனக்கு புரியவில்லை. முதல் கட்டமாக குறைந்தது 100 கிடங்குகளையாவது கட்ட முடியாதா? சாலைகள் அமைக்க 6.92 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் அரசு, வீணாகும் உணவு தானியங்களைப் பாதுகாப்பது குறித்து அக்கறை செலுத்த முடியாதா என்ன?

அரசுக்கு பணப்பற்றாக்குறை பிரச்சினை இல்லை. உணவு  தானிய சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத கொள்கையின் தோல்வியையே இது காட்டுகிறது.


Share the Article
Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day