Read in : English

Share the Article

ராஜா, தூத்துக்குடி துறைமுக ஊழியர், மே 22, செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ பற்றுவதையும், காவல்துறையினர் தங்கள் உடுப்புகளிலும், சாதாரண உடைகளிலும் நின்று கொண்டிருப்பதயும் கண்டார். பேரணியாக நடந்து சென்றவர்களில் ஒருவரான ராஜாவுக்கு அருகில்தான் அந்த செஞ்சட்டை மனிதர் தனது உரத்த குரலில் , ஸ்டெர்லைட் டை நிரந்தரமாக மூடும்படியும், தோழர்களை விழித்தெழும்படியும் அறைகூவல் விடுத்தப்படி இருந்தார். கலெக்டர் அலுவலகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்த போது எங்கிருந்தோ ஒரு குண்டு அந்த மனிதரின் செஞ்சட்டையை துளைத்தது. “எங்களில் சிலர் அவரை மருத்துவமனைக்கு முடிந்தஅழைத்து சென்றோம். பின்னர்தான் இறந்து போன அந்த நபர் தூத்துகுடி குறுக்கு சாலையை சேர்ந்த தமிழரசன் என்று தெரிந்து கொண்டோம்” என்கிறார் ராஜா.

தமிழரசன், புரட்சிகர இளைஞர் முன்னணி(பு.இ.மு) என்ற அமைப்பை சார்ந்தவர். அந்த அமைப்பு தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி (TNMLP) என்ற 1960களில் சிபிஎம்-ல் பிரிந்து உருவான தீவிர இடதுசாரி வழிவந்த கட்சியின் மக்கள் திரள் அமைப்பாகும். அதேபோல, கொல்லப்பட்ட உசிலப்பட்டி ஜெயராமன், மக்கள் அதிகாரம் என்னும் மக்கள் திரள் அமைப்பை சார்ந்தவர், அந்த அமைப்பு இ.க.க. மா.லெ.மாநில அமைப்பு கமிட்டி (SOC)யின் முன்னணி அமைப்புகளில் ஒன்று. இதனுடைய வேர்களும் சிபிஐ(எம்.எல்) உருவாக்கத்தில்தான் இருக்கிறது
காவல்துறை தரப்பில் பு.இ.மு மற்றும் மக்கள் அதிகாரம் போன்ற குறுங்குழுக்களின் ஊடுறுவல்தான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை வன்முறை பாதைக்கு இட்டு சென்றதோடு, துப்பாக்கி சூட்டை நிர்பந்தித்தாக வாதம் முன்வைக்கப்படுகிறது. ”ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கோபமும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கையும் இந்த பகுதி மக்களின் உணர்வோடு ஆழமாக கலந்தது. இந்த இடதுசாரி தோழர்கள் மக்களை அந்த கோரிக்கையின் கீழ் அணி திரட்ட கை கோர்த்தார்கள் அவ்வளவுதான். ” என்கிறார் காவல்துறையால் அச்சுறுத்தல் நேருமோ என்று தன் அடையாளத்தை மறைக்க கோரிய அந்த தன்னார்வலர்.

காவல்துறையினர் வேனில் மேற்புறத்தில் நிலைகொண்டு குறிபார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அவை, ஸ்னிப்பர் மூலமாக தன்னார்வலர்களை குறிவைத்து திட்டமிட்டு தாக்கியிருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை பரவலாக்கியிருக்கிறது. ஆனால், இந்த கருத்தை அப்படியே ஏற்காத மக்கள் அதிகாரத்தின் ஊடக பொறுப்பாளர் மருது பாண்டியன், “ இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை என்றாலும், வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்த நியாம்கிரி பழங்குடிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பசுமை வேட்டை போன்ற தாக்குதலாகவே இதை நினைக்க தோன்றுகிறது.” என்றவர், “ கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் என்ன குற்றம் செய்தாள்” என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

இயக்கங்களின் ஊழியர்களாக அல்லாதவர்களும் கொலை செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்டு பேசிய அவர், ”ஊடுறுவல் என்று அரசு தரப்பில் செய்யப்படும் பிரச்சாரமே பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது. இந்தியாவில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும் அதை தட்டி கேட்கும் ஜனநாயக உரிமை இருப்பதாக சொல்லப்படுகிறதுதானே. பெரியார் என்ன வைக்கம் போராட்டத்தில் ஊடுருவினாரா என்ன?” என்று கூறுகிறார்.

போராட்ட சக்திகளிடையே பிளவு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு 15 ஆண்டுகால வரலாறு உண்டென்றாலும், அது தற்போதுதான் தீவிரமடைந்திருக்கிறது என்கிறார் தூத்துகுடியை சார்ந்த 40 வயது டாக்ஸி ஓட்டுனர் கிஷோர் குமார். நிறுவனம் தனது விரிவாக்க பணிகளை மேற்கொண்டது அதற்கு முக்கிய காரணம் என்று கூறுபவர், ” நிலத்தடி நீர் மாசுபட்டு மஞ்சள் நிறத்திற்கு மாறி, தாங்கள் சுவாசிக்கும் காற்று அசுத்தமானதாக இருப்பதை உணர்ந்திருந்த மக்கள் மத்தியில் ஏற்கனவே கோபம் இருந்தது.” என்கிறார். மேலும், ஆலைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும் தொடர்பிருப்பதாக கூறுவதில் ஆதாரமில்லை என்று சுகாதார துறை அலுவலர்கள் கூறுவதை நிராகரிக்கிறார்.

தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதத்தில் புற்றுநோய் மரணங்கள், சில இளம்பெண்கள் கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய நிலை போன்றவை போராட்டத்திற்கு உந்துதலாக மாறியது என்று கூறும் ஜோசப், நேர்மையான அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டால், மக்களின் அச்சம் என்பது சரியானதே என்று நிறுவிட முடியும் என்று நம்புகிறார். மூன்று பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 16 கிராமங்களில் இந்த உடல் சுகவீனங்களே போராட்டத்தின் தீவிரத்தன்மையை அதிகரித்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடுவது போராட்ட தீயை பரவாமல் தடுக்க முடியவில்லை. அதற்கு காரணம், ”கடந்த காலங்களிலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆலையை இழுத்து மூடியிருக்கிறது. ஆனால், மீண்டும் இயங்க தொடங்கிற்று. அதேபோன்று மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.” என்கிறார் தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் தலைவர்களில் ஒருவரான கனகராஜ்.

போராட்டம் 100வது நாளை எட்டுவதையொட்டி போராட்ட கமிட்டி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணிக்கு அறைகூவல் விடுத்தது. அந்த அறிவிப்பு வெளியானதும் போராட்டத்தில் பங்கெடுத்த பலருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மே 21ம் தேதி நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. ”எனக்கும் அழைப்பு வந்ததால், நானும் சந்திப்பிற்கு சென்றேன்.

காவல்துறையினரோடு துணை-கலெக்டரும் இருந்தார். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டால் தடியடி நடத்தப்படும் என்றனர். ஆகையால், தொடர்ச்சியாக போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அந்த எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் ஆர்பாட்டம் நடத்தி கொள்வது என்று முடிவானது.” என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு ஓட்டுனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் போராட்டத்தின் தலைவராகவே அறியப்பட்ட சூழலியல் ஆர்வலர் பாத்திமா பாபுவும் கலந்து கொண்டார். “ சந்திப்பு முடிந்தவுடன், பாத்திமா பாபு தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்று அடையாளம் குறிப்பிடாமல் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.” என்று கிஷோர் குமார் குறிப்பிடுவதை ஆமோதித்து தலைமையில் இருந்த பிளவை மறைமுகமாக ஒத்துக் கொள்ளும் மக்கள் அதிகாரத்தின் மருது பாண்டியன், மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்க விரும்பியதன் வெளிப்பாடு அது என்கிறார். ஆனால், கிஷோர் குமார், ”எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் கூடுவது என்ற முடிவை பற்றி அறிவிக்கப்படாத நிலையில்தான் மக்கள் எஸ்.ஏ.வி பள்ளி வளாகத்தில் கூடாமல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட தொடங்கினர்” என்கிறார்.

மே 9 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட தொடங்கினர். கிஷோரும் அவரது நண்பர்களும் எஸ்.ஏ.வி மைதானத்தில் கூடியிருந்தனர். “10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சினை என்பதை தெரிந்து கொண்டு, அங்கே போனால் இரு சக்கர வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன. காயங்களோடு போராட்டகாரர்கள் கலெக்டர் அலுவலகத்தை விட்டு ஓடிக் கொண்டிருந்தனர்.” என்கிறார் கிஷோர்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles