Read in : English
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை விடவும் நாவலைவிடவும் அதை மையமாக வைத்து மன்னன் இராஜராஜ சோழனை இந்து அடையாளமாக மாற்ற பாஜக செய்த முயற்சி தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதமாகிவிட்டது. இதற்கு முன்னர் இடதுசாரிகளும் பெரியாரியல் சிந்தனையாளர்களும் தலித்தியச் சிந்தனையாளர்களும் இராஜராஜ சோழன் மீது வைத்த குற்றச்சாட்டுகளை மறந்து பாஜகவை எதிர்த்துக் களத்தில் ஒன்றுபட்டன. இருந்தாலும், பேரரசன் இராஜராஜன் தமிழ்நாட்டில் பிராமண ஆதிக்கத்தை வளர்த்தவர் என்றும் சாதி முறையை நிலை நிறுத்தியவர் என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அவர் குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவதும் ஒரு பக்கம் நடக்கிறது.
இராஜராஜனை ‘பொன்னியின் செல்வன்’ மூலம் பார்க்க முடியாது. இது வரலாற்றுக் களத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனைக் கதை என்பதை எழுத்தாளர் கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வியாபார நோக்கத்தைக் கொண்டது.
படத்தில் கதாநாயகனாகவும் இளவரசன் அருண்மொழியின் (இராஜராஜன் மன்னனாக முடிசூட்டுவதற்கு முன் அவரது பெயர்) நண்பனாகவும் நாவலில் எழுதப்பட்டுள்ள வந்தியத்தேவன் சோழர்களின் பகைவரான வாணர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தவிர வேறு வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. நந்தினி, மந்தாகினி, ஆழ்வார்க்கடியான் போன்றவர்கள் கற்பனைப் பாத்திரங்களே. இராஜராஜ ன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன் குந்தவை போன்ற பல பாத்திரங்கள் வரலாற்றுப் பாத்திரங்களாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய சம்பவங்கள் கற்பனையாகவே எழுதப்பட்டுள்ளது.
இராஜராஜன் பட்டத்துக்கு வரும் முன்பு சோழ அரசில் பெரும் அதிகார மோதல்கள் இருந்ததையும் குழப்பம் நிலவியதையும் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதையும் வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனைப் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூவர் கொன்றார்கள் என்றும் அவர்களின் நிலத்தைப் பறிமுதல் செய்யுமாறு கிராம நிர்வாகிகளுக்கு இராஜராஜ ன் ஆணையிட்டார் என்றும் கூறுகிறது. ஆனால், தனது நாவலில் ஆதித்த கரிகாலன் கொலையை ஒரு மர்மமாகவே கல்கி முடிக்கின்றார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தையும் நாவலையும் இராஜராஜன் பற்றியும் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் ஆராய்வதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது வெளிச்சமாகிறது
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தையும் நாவலையும் இராஜராஜன் பற்றியும் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் ஆராய்வதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது வெளிச்சமாகிறது.
இராஜராஜன் பிராமணர்களுக்கு இலவசமாகத் தானம் கொடுத்தார் என்றும் தேவதாசி முறையை அறிமுகப்படுத்தினார் என்றும் இடதுசாரி, பெரியாரியல், தலித்தியம் ஆகிய சிந்தனைகளில் தோய்ந்தவர்கள் குற்றம் சாட்டிவந்தனர். ஆனால், இராஜராஜ னை இந்து மன்னர் என்று காட்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்று நான்கு முறை தேசிய விருது வாங்கிய இயக்குநர் வெற்றிமாறன் கூறியதைத் தொடர்ந்து அவரை ஆதரித்து பாஜகவுக்கு எதிராகக் களம் இறங்கினர்.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வனும் வெற்றிமாறன் அரசியலும்
இதற்கு முன்பு இராஜராஜன் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகள் நா, வானமாமலை போன்ற இடதுசாரி சிந்தனையாளர்களிடம் இருந்து வந்துள்ளன. அவருக்குப் பின் வந்த மார்க்சிய ஆய்வாளர்களும் அதே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இராஜராஜ ன் காலத்தில் இருந்த சமூகச் சீர்கேடுகளுக்கு அவரே காரணம் என்று கூறும் வானமாமலை இதற்குச் சான்றாக ‘அபூர்வமாகவே’ கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்.
மன்னர்களை எதிர்த்துக் கல்வெட்டு எதுவும் எளிதில் கிடைக்காது என்று அவர் சொல்லும் காரணம் நியாயமாக இருந்தாலும் ஆதாரம் இல்லாமல் இராஜராஜ ன் குறித்து எப்படிப் பேச முடியும் என்ற கேள்வி எழுகிறது. இது மட்டுமல்லாமல் இராஜராஜ ன் சாதி முறையையும் பிராமண ஆதிக்கத்தையும் ஆதரித்திருந்தால் அது குறித்து மறைக்க வேண்டிய தேவை ஏதாவது அவருக்கு இருந்ததா? அது சரி என்று கருதி மன்னர் செய்யும்போது அதை ஒரு பெருமையாகக் கல்வெட்டில் பொறிக்கத்தானே செய்வார்கள். இதைத் தவறென்றோ வெட்கப்படத்தக்க செயல் என்றோ மறைக்க வேண்டிய செயல் என்றோ இராஜராஜ ன் ஏன் நினைக்க வேண்டும்? ஆதாரங்கள் ‘அபூர்வமாகவே’இருக்கும்போது ஆயிரமாண்டு கடந்து எப்படிக் குற்றச்சாட்டுகளை அடுக்க முடியும்?
ஆய்வாளர் வானமாமலை எடுத்துக்காட்டும் ‘அபூர்வமான’ கல்வெட்டுகளில் ஒன்று புஞ்சைக் கல்வெட்டு. இது கோயில் பணியாளர்களின் நிலம் பறிக்கப்பட்டதாகவும் அதை எதிர்த்துப் பணியாளர் கோபுரத்தில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறுகிறது. இந்தச் செய்தியை அறிந்த மன்னர் நிலங்களைத் திரும்பக் கொடுக்கும்படி கிராம அதிகாரிக்கு ஆணையிட்டதாக வானமாமலையே பதிவுசெய்கிறார். மன்னர் தலையிட்டு நியாயம் வழங்கியதற்குச் சான்றாகவே இது அமைகின்றது.
அரசு ஆணையைப் பறை அறைந்து சொல்பவருக்கு ‘ராசராசப் பெரும்பறையன்’என்று தன்னுடைய பெயரையே பட்டமாகக் கொடுத்திருக்கும் இராஜராஜன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தான் என்று சொல்வதற்கு போதிய ஆதாரங்கள் காட்டுவது மிகவும் தேவையாகிறது
அவர் குறிப்பிடும் ஆடுதுறை உடையாளூர், வாலிகண்டபுரம் கல்வெட்டுகள் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்று அவரே கூறுகிறார். அவர் எடுத்துக்காட்டும் வாலிகண்டபுரம் கல்வெட்டு வலங்கை, இடங்கை ஆகிய சாதித் தொகுப்புகளுக்கு இடையே இருந்த சண்டையே அப்போதிருந்த சோழமன்னர் தீர்த்துவைத்ததாகவும் யாரேனும் சாதிச் சண்டையைத் தொடங்கினால் கடும் தண்டனை தரப்படும் என்று அந்தக் கல்வெட்டு எச்சரிப்பதாகவும் கூறுகிறார். இது இராஜராஜ ன் காலத்துக் கல்வெட்டு அல்ல. மேலும், சாதிச் சண்டையை மன்னர் தீர்த்துவைப்பது சாதிகளை ஊக்கப்படுத்துவற்கு எந்த விதத்தில் ஆதாரமாக இருக்கின்றது என்பதும் தெரியவில்லை.
சாதி என்பது களப்பிரர் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில்தான் இலக்கியங்களில் முதல்முதலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஆசாரக்கோவை’
“எச்சிலார் தீண்டார் – பசு, பார்ப்பார், தீ, தேவர்
உச்சந் தலையோடு இவை என்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்”
என்று தீண்டாமையை அறிமுகப்படுத்துகிறது. பசு, பிராமணர், தீ, தேவர் ஆகியோரை எச்சிலார் (இழிந்தவர்கள்) தீண்டக் கூடாது என்கிறது இந்தப்பாடல்.
இது இராஜராஜ னுக்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே தீண்டாமை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது என்பதையே காட்டுகிறது.
மேலும் படிக்க: சோழர் திரைப்படங்கள் வெற்றிபெறுமா?
இராஜராஜ ன் காலத்தில் இறையிலி (வரியில்லாத) நிலங்கள் அனைத்துச் சாதியினருக்கும் தரப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறுகிறார். பிராமாணருக்குத் தரப்பட்ட நிலங்களுக்குப் பத்தாண்டுக்குப் பின் முழுமையாக வரி விதிக்கப்பட்டது இராஜராஜ ன் காலத்தில்தான் என்றும் அவர் சொல்கிறார். வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி பிராமணர்களுக்கு நிலம் கொடுத்ததாகக் களப்பிர மன்னர் அச்சுதனைப் புலவர்கள் பாடியுள்ளதாகக் கூறுகிறார்.
இராஜராஜ ன் காலத்தில் ‘பறைச்சேரி’என்றும் ‘தீண்டாச்சேரி’ என்றும் இருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாச்சேரியில் வைக்கப்பட்டிருந்தால் ‘பறைச்சேரி’ எதற்காக? அங்கே யார் குடியிருந்தார்கள்? என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. ‘பறைச்சேரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்தால் தீண்டாச்சேரியில் யார் குடியிருந்தார்கள்? மேலும், ‘பார்ப்பனச்சேரி’, ‘கம்மாளச் சேரி’ என்றும் பெயர்கள் இருப்பதால் எல்லாச் சாதியினருக்கும் தனித்தனிக் குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும் என்று கருதலாம். ஒரே தொழில் செய்பவர்கள் வசதிக்காக ஒரே இடத்தில் இருந்தார்களா அப்படி ஒரு கட்டாயம் இருந்ததா என்றும் தெரியவில்லை.
‘சேரி’ என்பது இன்றைய அர்த்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் இடம் என்றால் ‘பார்ப்பனச்சேரி’என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த ஊர்ப்பெயர்களை வைத்து சோழர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேரியில் வைத்தார்கள் என்று எப்படிச் சொல்வது? சங்க இலக்கியத்தில் முல்லை நிலம் ‘சேரி’ என்று குறிக்கப்படுகிறது என்பதும் நினைவுக்கு வருகிறது. ‘தீண்டாச் சேரியில் குற்றம் செய்தவர்கள் தனியாக வைக்கப்பட்டனர் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர், ஆனால், இதற்கு ஆதாரம் எதையும் அவர்கள் தரவில்லை.
ஆய்வாளர் டி.எஸ். கிருஷ்ணவேல் திருப்பனந்தால், வேலூர், ஆகிய கல்வெட்டுகளை சுட்டிக்காட்டி குற்றச்செயல்களில் ஈடுபடும் பிராமணர் உள்ளிட்ட அனைத்துச் சாதியினருக்கும் ஒரே தண்டனை வழங்கப்பட்டது என்று கூறுகிறார், இதனால், மனுநீதி பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.
தஞ்சாவூர் பெரிய கோயில் நிர்வாகம் பல சமூகங்களைச் சேர்ந்த 118 கிராமத்தினரிடம் தரப்பட்டது என்று கூறுகிறார். இராஜராஜ ன் கோயில்களில் தமிழ் வழிபாட்டை அறிமுகம் செய்ததுடன் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சர்களாக நியமனம் செய்திருக்கிறார். தஞ்சைக் கோயிலின் தலைமை அர்ச்சராக பவண பிடாரர் என்ற பிராமணல்லாதாரை மன்னர் நியமித்துள்ளார். மேலும், மன்னரின் தலைமைக் குருவாக கருவூர் தேவர் என்பவரே இருந்துள்ளார். இவர் பிராமணர் அல்ல என்பது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய செய்தியாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் இழிவான பெயர்களையே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருபதாம் நூற்றாண்டில்கூட இருந்திருக்கிறது. ஆனால், அரசு ஆணையைப் பறை அறைந்து சொல்பவருக்கு ‘ராசராசப் பெரும்பறையன்’ என்று தன்னுடைய பெயரையே பட்டமாகக் கொடுத்திருக்கும் இராஜராஜன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தான் என்று சொல்வதற்கு போதிய ஆதாரங்கள் காட்டுவது மிகவும் தேவையாகிறது. கோயிலில் முடிதிருத்தும் தொழிலாளிக்கு ‘ராசராசப் பெருநாவிதன்’ என்ற பட்டத்தையும் மன்னரே அளித்துள்ளார் என்பதையும் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவிக்கிறார்.
சோழ மன்னர்கள் உள்ளிட்ட தமிழ் மன்னர்களைத் தாங்கிப் பிடித்துத் தமிழ் தேசியத்தை முன்வைத்து திராவிட இயக்கத் தலைவர்கள் மக்கள் ஆதரவைத் திரட்டி வெற்றிபெற்றதால் இதை முறியடிக்கும் எதிர் பிரச்சாரத்தில் இராஜராஜன் மீது குற்றச்சாட்டுகள் புனையப்பட்டிருக்கவும் இடமுண்டு. திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றபோது அவர்கள் முன்வைத்த தமிழ், தமிழர் அடையாளங்கள் மீது இடதுசாரிகள் கடுமையான தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள் என்பதும் நினைவில் நிறுத்த வேண்டியதாக இருக்கிறது.
எவ்வளவு மிகப்பெரிய மனிதராக இருந்தாலும் தனிநபரோ அவர்களின் கருத்துகளோ வரலாற்று மாற்றங்களை உருவாக்குவதில்லை
அடுத்ததாக தேவரடியார் முறையை இராஜராஜன் பின்பற்றினான் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரைக் காஞ்சி
“கடுஞ்சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோடி சாலினி மடுப்ப ஒருசாரார்”
என்று ‘சாலினி’ என்ற கோயிலில் பணிபுரியும் பெண்ணைக் குறிப்பிடுகிறது. இவரே கோயிலில் படைப்புப் பொருள்களைக் கடவுளுக்குச் செலுத்தினார் என்று கூறப்படுவதால் இவர் பெண் பூசாரிக்குச் சமமாக இருந்தது தெளிவாகிறது.
இதே மதுரைக் காஞ்சி.
“பழம்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேஎய
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல் இல்
ஆய்பொன் அவிர்தொடி பாசிழை மகளிர்”
என்று வரைவில் மகளிரைத் தனியாக வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறது. கோயிலில் பணிபுரியும் பெண்களுக்கும் விலைமகளிர் என்று கூறப்படும் வரைவின் மகளிருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இராஜராஜ ன் காலத்திய தேவரடியார் முறையிலும் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களுக்குத் திருமண உரிமையும் சொத்துரிமையும் இருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர் லெஸ்லீ சி.ஓர் எழுதியுள்ளார். இந்தப் பெண்கள் அரச குடும்பத்தில் இருந்தும் நிலவுடைமையாளர் குடும்பங்களில் இருந்தும் கோயிலுக்கு வந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார். சோழ குல சுந்தரி, இரவி குல மாணிக்கம், வீரசோழி, சோழ சூளாமணி, ராஜசூளா மணி, குந்தவை, சோழமாதேவி ஆகியவை தேவரடியார்களின் பெயர்களாகக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
பல கோயில்களுக்கு நிலங்களை அவர்கள் தானம் செய்ததாக அவர் குறிப்பிடுகிறார். சென்ற நூற்றாண்டில்கூடப் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத நிலையே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இராஜராஜன் காலத்துத் தேவரடியார் முறையும் தேவதாசி முறையும் வேறுவேறாக இருக்கிறது.
மேலும், தேவதாசி என்ற சொல்லே முதல்முதலாக கி.பி. 1113ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் அல்லஹலி என்ற இடத்தில்தான் கல்வெட்டுகளில் காணப்படுவதாக ஆய்வாளர் வி.எம்.சுந்தரம் எழுதுகிறார். இந்தக் காலம் இராஜராஜ ன் காலத்துக்கு மிகவும் பிந்தியது.
கார்ல் மார்க்சின் ‘வரலாற்றுப் பொருள்வாதம்’ உற்பத்தி முறைகளில் இருந்தே உற்பத்தி உறவுகள் உருவாகிறது என்கிறது. இதன் அடிப்படையில் உருவாகும் சமூக அமைப்பு அடிப்படையாகவும் இதன் மீது கட்டப்படும் மேற்கட்டுமானமாகத்தான் அரசியல் அமைப்பு, பண்பாடு, மதம், கருத்துகள் ஆகியவற்றை மார்க்ஸ் பார்க்கிறார். வேறுபட்ட சமூக அமைப்புகள் பொருளாதார அடிப்படையில் இயற்கையாகவே உருவாகின்றன, இதன் அடிப்படையில்தான் கருத்துகள் உருவாகின்றன. இயற்கையும் அதன் மாற்றங்களும் கருத்துகளை உருவாக்குகின்றன. கருத்துகள் வரலாற்றை உருவாக்குவதில்லை.
ஒரு மன்னன் எவ்வளவு வலிமைமிக்க பேரரசனாக இருந்தாலும் அவனால் பொருளாதார அடிப்படைகளையும் மேற்கட்டுமானத்தையும் உருவாக்க முடியாது. எவ்வளவு மிகப்பெரிய மனிதராக இருந்தாலும் தனிநபரோ அவர்களின் கருத்துகளோ வரலாற்று மாற்றங்களை உருவாக்குவதில்லை. ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்தால் கட்டுண்டவர்கள். ஆயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மன்னரை அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இருக்கும் சமூக அளவுகோல்களாலும் கருத்துகளாலும் அளக்க முடியாது.
Read in : English