Read in : English
கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறதா? மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா ? ஊடரங்குக் கட்டுபாடுகள் இந்த முறை வித்தியாசமாக இருக்குமா? இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா? இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன.
அரசு தரப்பிலும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெ.அமலோற்பாவநாதனுடன் இன்மதி நிகழ்த்திய நேர்காணல்:
கேள்வி: கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறதே!
டாக்டர் ஜெ.அமலோற்பாவநாதன்: நான் இதில் நிபுணர் இல்லை. உங்களை மாதிரி ஒரு கவனிப்பாளர். கடந்த 2, 3 மாதங்களாகத் தொற்று எண்ணிக்கை குறைந்தது. தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. மக்கள் இயல்பான வாழ்வுக்கு திரும்பிவிட்டார்கள். எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது என்று நினைத்த நேரத்தில், கடந்த ஒரு மாத காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் மைல்டான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே குணமாகிவிட்டனர். அனைவரும் இரண்டு தடுப்பூசி போட்டவர்கள். அதனால் ஒரு குடும்பத்தில் வந்த தொற்று வெளியே பரவவில்லை.
நம்மிடம் மூன்று ஆயுதங்கள் இருக்கின்றன. ஒன்று முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற மருத்துவமல்லாத நடவடிக்கைகள். இரண்டாவது, தடுப்பூசி. மூன்றாவது இன்டெர்னல் ஹைஜீன்
கேள்வி: அவர்களுக்குச் சோதனை செய்ததில் கோவிட் என்று தெரிய வந்ததா?
டாக்டர் அமலோற்பாவநாதன்: பெரும்பான்மையானவர்களுக்கு கோவிட் தான் வந்துள்ளது. எனக்குக்கூட கோவிட் அறிகுறிகள் இருந்தது. ஆனால் டெஸ்ட்டில் எனக்கு நெகட்டிவ் என்று வந்தது 2020-21இல் இருந்த முன்எச்சரிக்கைகளைக்கூட நான் பின்பற்றவில்லை. எந்த மருத்துவமனைக்கும் போகவில்லை. என்னிடம் இருந்து யாருக்கும் பரவவில்லை. இந்த வைரஸின் வீரியம் குறைந்துவிட்டது. இதனுடைய பரவும் தன்மையும் குறைந்துவிட்டது. இதுகுறித்து என்னி டம் முழு விவரங்கள் இல்லை. இது என்னுடைய கணிப்பு. 90 சதவீத மக்கள் முதல் தடுப்பூசி போட்டார்கள். 60-70 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுவிட்டார்கள். இதனால் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்துவிட்டது.
இந்த வைரஸின் தாக்கம் வெளிநாடுகளில் வீரியமாக இருந்தது, அனால் இந்தியாவில் அவ்வளவு வீரியம் இல்லை. இந்தியாவில் ஸ்டீராய்ட் போன்ற ஆன்டி வைரஸ் மருந்துகளும் மோனோக்லோனல் போன்ற ஆண்டிபாடி மருந்துகளும் தேவை இருந்ததாக நான் கேள்விப்படவில்லை. பெரும்பாலானவர்களுக்கு ஐ.சி.யூ சிகிச்சையும் அவ்வளவாகத் தேவைப்படவில்லை. வயதானவர்கள் ஒன்றிரண்டு பேர்களுக்கு பாதிப்பு இருந்ததே தவிர, இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இல்லை.
நம்மிடம் மூன்று ஆயுதங்கள் இருக்கின்றன. ஒன்று முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற மருத்துவமல்லாத நடவடிக்கைகள். இரண்டாவது, தடுப்பூசி. மூன்றாவது இன்டெர்னல் ஹைஜீன். இதைத்தான் நாம் திரும்பத் திரும்ப பயன்படுத்த வேண்டும். இதைத்தவிர நம்மிடம் வேறு ஆயுதம் கிடையாது. அதனால் இந்த வீரியம் குறைந்த வைரஸை கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. இரண்டாவது தடுப்பூசி போடாதவர்கள், அதைப் போட்டுக் கொள்ளலாம். வயதானவர்கள் பூஸ்டர் செலுத்திகொள்ளலாம்.
குழந்தைகளிடையே சரியான விழிப்புணர்வு இருக்காது. அரசு விதிகளைப் பின்பற்றி 12-16 வயது குழந்தைகள் தடுப்பூசி போட்டுகொள்ளலாம். இந்த வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நோய்தொற்று குறித்துப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் படிக்க:
தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி
ஊரடங்கினால் உருப்படியான பலன் ஏன் கிடைக்கவில்லை?
கேள்வி: இரண்டாவது தடுபூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவதற்கு நீங்கள் அறிவுறுத்துவீர்களா?
டாக்டர் அமலோற்பாவநாதன்: இரண்டாவது தடுபூசி போட்டு ஆறுமாத காலம் ஆகிவிட்டால், பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுகொள்ளலாம்.
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கக்கூடாது. கொரோனா எவ்வளவு வீரியமாக இருந்தலும்கூட, மீண்டும் ஊரடங்கு என்பது எதற்கும் தீர்வு இல்லை
கேள்வி: தற்போதைய தொற்று பரவலை நான்காவது அலை என்று சொல்வது தவறுதானே? மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா ?
டாக்டர் அமலோற்பாவநாதன்: முதல் அலையைவிட அடுத்த அலை பரவலாக இருந்தால் தான் அதை வீரியம் என்று சொல்ல முடியும். இப்போ வைரஸின் பரவல் கம்மியாக தான் இருக்கிறது. அதனுடைய தாக்கம் குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிடுகிறது. அதற்காக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கக்கூடாது. கொரோனா எவ்வளவு வீரியமாக இருந்தலும்கூட, மீண்டும் ஊரடங்கு என்பது எதற்கும் தீர்வு இல்லை. கொரோனாகிட்ட இருந்து நாம் கற்றுக்கொண்டது இதுதான்.
கேள்வி: கொரோனா தொற்று காரணமாக, பிரபலங்களின் மரணம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற மற்ற காரணிகளால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா ?
டாக்டர் அமலோற்பாவநாதன்: இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய பேஷன்ட் கொரோனா தோற்று ஏற்பட்டு, அத்துடன் நுரையீரல் பிரச்சினை போன்ற மற்ற பிரச்சினைகளும் இருந்து இறந்து போனார். இதற்கு நேர்மாறாக, என்னுடைய நண்பரின் பெற்றோர்கள் 90 வயது முதியவர்கள், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர்கள்.
ஒரு கேஸை வைத்துக் கொண்டு நாம் பயப்படக்கூடாது. கொரோனா தொற்றின் மொத்தப் போக்கையும் கண்காணிக்க வேண்டும், அப்படி பார்த்தால் நாம் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
Read in : English