Read in : English
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா இரட்டை இலக்க விகிதத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது (10% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதம்). இந்தத் துறையில் உலக வளர்ச்சி விகிதம் வெறும் 4 %. ஆனாலும் விண்வெளித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களில் 80% உலக நாடுகளிலிருந்துதான் இந்தியா இன்னும் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.
சமீபகாலமாக இந்தப் போக்கை மாற்றியமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உள்நாட்டு தொழில்களின் திறன்களைப் பயன்படுத்தி மேம்படுத்துவதின் மூலம் இறக்குமதியைக் குறைக்க முயற்சி செய்யப்படுகிறது. ஆத்மநிர்பார் பாரத் அபியன் திட்டம் தொடங்கப்பட்டு, விண்வெளித் தொழில் மூலப்பொருட்களைத் தயாரிப்பதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக்கு உத்வேகம் கொடுக்கப்பட்டிருக்கிறது,. ஆனாலும் பெரிய அளவிலான மாற்றம் இன்னும் நிகழவில்லை.
அரசுக் கொள்கைகளில் சமீபகாலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக் கையகப்படுத்தல் விதிமுறை 2020 என்பது அவற்றில் ஒன்று. மூலதன விசயத்தில், பாதுகாப்புத்துறை தனது நவீனப்படுத்தல் நிதியில் (ரூ.71,000 கோடி) 64%-ஐ உள்நாட்டுத் தொழில்களிலிருந்து மூலப்பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கி வைத்திருக்கிறது. புதிய முதலீடுகளுக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் 74%-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை இந்தியா பாதுகாப்புத்துறைக் கருவிகளையும், உபகரணங்களையும் பொதுத்துறையிடமே கொடுத்து வந்தது. ஆனால் இப்போது தனியார்த் துறைக்கு 100 சதவீதப் பங்களிப்பைத் தந்துவிட்டது. மொத்தம் 333 தனியார் நிறுவனங்களுக்கு 539 தொழில் உரிமங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 110 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன.
மேலும் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத்துறை எடுத்திருக்கிறது. ‘ஆக்கப்பூர்வமான உள்ளூர்மயமாக்கல் பட்டியல்கள்’ இரண்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 209 மூலப்பொருட்கள் குறிப்பிடப்பட்டு அவற்றின் இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன; இந்திய பாதுகாப்புத்துறைத் தொழில்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், உத்தரபிரதேசத்தில் ஒன்றும், தமிழ்நாட்டில் ஒன்றுமாக மொத்தம் இரண்டு பாதுகாப்புத் தொழில் பாதைகள் (டிஃபென்ஸ் காரிடர்கள்) தொடங்கப்பட்டிருக்கின்றன. 2024-25-க்குள் மொத்தம் ரூ.20,000 கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
தொழில் அமைச்சர் சொல்லியிருக்கிறார், ரூ.1,150 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று. ஆனால் எப்போது செய்யப்பட்டது; யார் அந்த தனியார் முதலீட்டாளர்கள் என்ற தரவுகளைத் தரவில்லை அவர்
பாதுகாப்புக் காரிடரை தமிழ்நாட்டில் நிறுவியதற்குக் காரணம் ஒன்று உண்டு. 1973-லிருந்து தேசத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கு கருவிகளையும், எந்திரங்களையும் தயாரித்து வழங்கும் தனியார்த்துறை நிறுவனங்கள் பல தமிழ்நாட்டில் இருக்கின்றன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உண்டு. அவையெல்லாம் போக, பல்வேறு தேசிய பொதுத்துறை நிறுவனங்களும் இங்கே இருக்கின்றன (ஹெவிஎஃப், ஓசிஎஃப், ஈஎஃபே, ஓஎஃப்டி, எச்ஏபிபி மற்றும் சீஎஃப்ஏ).
தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளும் நிறுவனங்களும் இருப்பதாலும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (ஆர் அண்ட் டி) துறையில் பலவருட அனுபவம் அந்த மாநிலத்திற்கு இருப்பதாலும், உள்ளார்ந்த அந்தத் திறன்களை ஒன்றிணைத்துப் பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையை முன்னேடுத்துச் செல்வதற்கு தமிழ்நாட்டில் ஒரு புதிய கொள்கை (2019) உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டிற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை மூலப்பொருட்களை வழங்குகின்ற நிறுவனங்கள் 60-க்கும் மேலாக தமிழ்நாட்டில் இருக்கின்றன. அடுத்த பத்தாண்டிற்குள், “இந்திய விண்வெளித் துறை உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை’ வழங்கும் இலக்கை விதித்திருக்கிறது தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் பாதுகாப்புக் காரிடர் திட்டத்தின் வளர்ச்சியைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இது 2019 ஜனவரியில் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர் போன்ற மாநகரங்களை ஒன்றிணைக்கும் இந்த ’டிஃபென்ஸ் காரிடர்’ மூன்றாண்டுகள் ஆகியும் இன்னும் விறுவிறுப்பாகச் செயல்படத் தொடங்கவில்லை. கடந்த ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும், இப்போதைய ஆட்சியில் ஓராண்டும் கழிந்துவிட்டன. ஆனால் இந்தத் திட்டத்திற்கு அரசு முன்னுரிமை கொடுத்தது போலத் தெரியவில்லை. தற்போதைய அரசு ஒன்றிய அரசோடும், துறைகளோடும் கொண்டிருக்கும் கசப்பான உறவு அதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
தமிழ்நாட்டில் இந்த பாதுகாப்புக் காரிடர் திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஐஐடி-மெட்ராஸ் அறிவுப் பங்காளியாக கொண்டுவரப்பட்டது, திட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல. ஆனால் ஐஐடி இதில் ஆற்றிய பங்கு என்ன, அதன் பணிகள் என்ன என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை. மிகவும் வினோதமாக இருக்கிறது. ஓர் உயிர்த்துடிப்பான தொழில் சூழலை உருவாக்கும் பொருட்டு மாநில அரசு ஐஐடி-யைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. அதன் விளைவாக, உத்தர பிரதேசத்தில் இதே திட்டம் செயல்படுத்தப்படும் அளவுக்குத் தமிழ்நாட்டில் செயல்படவில்லை.
![](https://inmathi.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-06-at-10.49.10-AM-300x200.jpeg)
Photo Credit: (Carles Cunliff- FLickr)
இந்த வருடம் மார்ச் 21-ஆம் தேதி நிலவரப்படி, உத்தரபிரதேச அரசு, தொழில் நிறுவனங்களோடு 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. ரூ.8,764 கோடி முதலீடுகள் அவை. அவற்றில் 25 ஒப்பந்தங்கள் ரூ.2,527 கோடி முதலீட்டுகளுடன் முடிவு செய்யப்பட்டுவிட்டன. அவை சம்பந்தமான பணிகள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. மேலும் கையகப்படுத்திய நிஜ முதலீடுகள் ரூ.1,552 கோடி ஆகும்.
ஆனால் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களோடு எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்று தெரியவில்லை. “39 நிறுவனங்கள் ரூ.11,103 கோடி முதலீடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது; அதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை காரிடரில் நிஜமாகச் செய்யப்பட்டிருக்கும் முதலீடு ரூ.2,217 கோடி,” என்று பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ’ஏற்பாடுகள்’ என்ற வார்த்தை முதலீடு விசயத்தில் வெறும் சந்தேகத்தைத்தான் உண்டாக்குகிறது.
உத்தரபிரதேசத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் உண்டாகியிருக்கும் நிறுவனமயமான கூட்டுறவுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இந்த பாதுகாப்புக் காரிடர் திட்டங்கள் பற்றி வெறும் மர்மங்களே நிலவுகின்றன.
வாஸ்தவம்தான். தொழில் அமைச்சர் சொல்லியிருக்கிறார், ரூ.1,150 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று. ஆனால் எப்போது செய்யப்பட்டது; யார் அந்த தனியார் முதலீட்டாளர்கள் என்ற தரவுகளைத் தரவில்லை தமிழக அமைச்சர். வெளிப்படைத்தன்மை என்பது எந்தத் தொழில் விசயத்திலும் கிடையாது தமிழகத்தில். அதனால் பாதுகாப்புக் காரிடர் விசயத்தில் சொல்லப்படும் தகவல்களும் தரவுகளும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன
“39 நிறுவனங்கள் ரூ.11,103 கோடி முதலீடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது; அதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன,” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ’ஏற்பாடுகள்’ என்ற வார்த்தை வெறும் சந்தேகத்தைத்தான் உண்டாக்குகிறது
2019-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, ரூ.3,123 கோடி முதலீடுகளை அது ஈர்த்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் நிஜ களநிலவரம் என்பது வேறு. அறிவிக்கப்பட்ட முதலீடுகள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இந்த லட்சணத்தில், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் ஐந்துவருட காலாத்திற்குள் ரூ.10,000 கோடி முதலீடுகளைச் சாதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு இலக்கு வைத்திருக்கிறது. மேலும் அடுத்த பத்தாண்டிற்குள் கூடுதல் மதிப்புப் பொருட்களின் உற்பத்தியை 10 பில்லியன் டாலர் அளவுக்கு முன்னெடுத்துச் செல்லவும் அது இலக்கு நிர்ணயித்திருக்கிறது.,
மூன்று ஆண்டுகள் கழிந்தபின்பு, பாதுகாப்புக் காரிடர் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ, “திட்டத்தின் மேலாண்மைக்காக, ஆலோசனை சேவைக்காக, உத்திகளை உருவாக்குவதற்காக ஒரு தொழில்ரீதியான நிறுவனம் நியமிக்கப்படும்,” என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இறுதி நிறுவனங்கள் பட்டியல் இந்த மாதம் முடிவுக்குள் அறிவிக்கப்படவிருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு தொழில் காரிடர்கள் இருக்கின்றன. அவற்றில் பல கடந்தகாலத்தில் நடைமுறையில் இயங்கவில்லை. காரணம் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பல பெரிய தொழில் திட்டங்களை அரசியல் ரீதியாக நிதியளிக்கப்பட்டவை என்று சொல்லி வேறுபல பிரச்சினைகளோடு சம்பந்தப்படுத்தி தனது சுய அரசியல் லாபத்திற்காக எதிர்த்தது. இப்போது ஆளும் கட்சியாகிவிட்ட திமுக தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க கடும் பிரயத்தனம் செய்து போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பெரிய திட்டங்கள் சந்திக்கும் ஆகப்பெரிய பிரச்சினை நிலம் கையகப்படுத்தல்தான்.
மோடி அரசின் திட்டங்களை, பெரிய தொழில் முதலீட்டுத் திட்டங்களைத் தமிழகத்தில் நல்ல முறையில் நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அதற்கான பெருமையைத் தட்டிக்கொண்டு பாஜக தனக்கான வாக்குவங்கியைக் கடத்திக் கொண்டு போய்விடும் என்ற அச்சம் இன்றைய திமுக அரசுக்கு இருக்கிறது; முந்தைய அஇஅதிமுக அரசுக்கும் இருந்தது.
பெரிய தொழில் திட்டங்களை, குறிப்பாக புதிய திட்டங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற, முதலில் மாநில அரசு மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கள நிஜங்கள் எப்படி இருந்தாலும் ஒன்றிய அரசை சதா விமர்சனம் செய்துகொண்டிருக்கும் மாநில அரசு, தொடர்ந்து குற்றஞ்சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக்கொள்கை விற்பன்னர்).
Read in : English