Read in : English
இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலர் (1860-1946). 1923ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகே கடற்கரையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் அவர் மே தினக்கூட்டங்களை நடத்தினார். சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் பிரச்சினைகள் இந்தக் கூட்டத்தின் பேசுபொருளாக இருந்தது. ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, லேபர் கிஷான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான் என்ற உழவர் உழைப்பாளர் கட்சியைத் தொடங்கப்பட்டதாக அவர் அறிவித்தார். இந்தியத் தொழிலாளர்களின் குறிக்கோள் தொழிலாளர் சுயராஜ்யமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது சென்னையில்தான்.இந்த ஆண்டு நூறாவது ஆண்டு.
ஆண்டுதோறும் மே முதல் நாளை பாட்டாளி வர்க்கத்தின் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வேண்டுகோள் வி.பி. சிங் ஆட்சிக்காலத்தில் 1990இல் நிறைவேறியது
இந்த கூட்டம் நடைபெற்றது குறித்த செய்தி அந்த நாளில் இந்து, சுதேசமித்திரன் நாளிதழ்களில் வெளியானது. எம்.என். ராய் நடத்திய ஜெர்மனியில் இருந்து நடத்திய வேன்கார்டு இதழிலும் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே முதல் நாளை பாட்டாளி வர்க்கத்தின் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் சிங்காரவேலர் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வேண்டுகோள் வி.பி. சிங் ஆட்சிக்காலத்தில் 1990இல் நிறைவேறியது. அவர்தான் மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தவர்.
மே தினத்தின் பெருமையைப் போற்றும் வகையில் 1956இல் சென்னையில் அந்தக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் தேவிப்பிரசாத் ராய் சௌத்ரி உருவாக்கிய உழைப்பாளர் சிலையை நிறுவினார் காமராஜர். 1990இல் சென்னையில் நேப்பியார் பூங்காவை, மே தின பூங்காவாக அறிவித்தவர் கருணாநிதி.
1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் உள்ள அயோத்தி குப்பத்தில் சிங்காரவேலர் பிறந்தார். சென்னைக் கடற்கரைச் சாலையில் 22 ஆம் எண்ணுள்ள வீடு (இப்பொழுது வெல்லிங்டன் சீமாட்டி பயிற்சிக்கல்லூரி இருக்கும் இடம்) அவரது வீடு. அவர் மீது வழக்குத் தொடரப்பட்டபோது அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு, இந்த வீட்டைக் கைப்பற்றி அங்கு தனது மனைவியின் பெயரில் கல்வி நிலையத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.
மீனவ சமூகத்தைச் சேர்ந்த அவர், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பைப் படித்து முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞரானார். அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் சார்பாக வழக்குகளில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் வாதாடியதில்லை. 1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.
அவருக்கு தமிழ் ஆங்கிலம் தவிர, உருது, பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளும் தெரியும். வ.உ.சி., சுப்பிரமணிய பாரதி, சர்க்ரைச் செட்டியார், திருவிக, பெரியார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
1922இல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் சென்றவர் அவர். அங்கு எஸ்.ஏ. டாங்கேயைச் சந்தித்தார். எம்.என். ராயுடனும் சிங்காரவேலர் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். 1925இல் கான்பூரில் நடைபெற்ற முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். 1934இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பிறகும்கூட, தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இதர கம்யூனிஸ்ட் ஆதரவு சங்கங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான 1918இல் தொடங்கப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கத்தில் திருவிகவுடன் இணைந்து முக்கியப் பங்கு வகித்தவர். 1926ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றார். சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
1928இல் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திய தலைவர்கள் மீது தொடரப்பட்ட சதி வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு 1930இல் விடுதலை செய்யப்பட்டார்.
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி என்றார் கவிஞர் பாரதிதாசன். வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப்புலியை மறந்தார் என்றார் அண்ணா.
”சமதர்ம சமூகத்தில், நிலத் தீர்வை வாங்கும் நிலச்சுவானும் குடிக்கூலி வாங்கும் சொந்தக்காரனும் இருக்கமாட்டார்கள். லாபம் சம்பாதிக்கும் வர்த்தகனும், வட்டி வாங்கும் வணிகனும் இருக்க மாட்டார்கள். அவசியமாக வாங்கவேண்டிய நிலத்தீர்வையும், குடிக்கூலியும், வீட்டு வாடகையையும் வர்த்தக லாபமும், கடனுக்கு வட்டியும், சகலவித லாபங்களும், பொதுமக்களுக்கே உரித்தாகி, பொதுமக்களுக்கே அவர்கள் உண்ண உணவு, தங்க வீடு வாசல், அணியும் ஆடை, கற்கும் கல்வி முதலிய வாழ்விற்கு வேண்டிய அத்தியாவசியங்களுக்கு உபயோகப்படுத்தப்படும்” என்று கூறியவர் சிங்காரவேலர்.
“எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை” என்று 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசினார். அதுதான் அவரது கடைசிப் பேச்சு. 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி காலமானார். தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான புத்தக சேகரிப்பை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்கொடையாக வழங்கிச் சென்றவர் அவர். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி” என்றார் கவிஞர் பாரதிதாசன். “வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப்புலியை மறந்தார்” என்றார் அண்ணா.
Read in : English