Read in : English
நாம் மோசமான காலகட்டத்தில் வாழ்கிறோம். கொரோனா தொற்றுப்பரவல் குறைந்தவுடன், பொருள் வழங்கு சங்கிலித்தொடர் மீட்டெடுக்கப்பட்டது. அதனால் உலகப்பொருளாதார மீட்சி இனி வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி அடிப்படைவாதமும், சிக்கனமும் நிலவும் சூழலில் உயருகின்ற பணவீக்கமும், பணவாட்ட நடவடிக்கைகளும் அந்த மீட்சியைத் தள்ளாட வைத்துவிட்டன.
மேலும் ரஷ்யா- உக்ரைன் போர், நிலைமையை «ñ½‹ மோசமாக்கிவிட்டது. இந்த உலகளாவிய பொருளாதார நிலை, வரவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு ஊக்கம் தருவதாக இல்லை. நம்பமுடியாத அளவில் இருந்த ஒன்றிய அரசு பட்ஜெட் தரவுகள் ஒன்றரை மாதம் கழித்து இப்போது சீரழிந்து கிடக்கின்றன. தேவையின் உந்துசக்தியில் எழும் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு நிதி ஊக்கம் தரவில்லை. போர் தொடர்பான தடைகளாலும், கச்சாப்பொருள்களின் விலையேற்றத்தாலும் இப்போது பொருள் வழங்கு துறைக் காரணிகள் மந்தமாகக் காட்சியளிக்கின்றன. ஆகையால் இந்தச் சூழலில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்கொள்ளும் சவால் சிக்கலானதுதான்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு சமூக நோக்கங்கள் உண்டு என்பதால், அவற்றை வெறும் வணிக லாபக் கோணத்தில் மதிப்பீடு செய்யமுடியாது. இந்தப் புரிதலும், ஒரு நிறுவன லாபத்தின் பகுதியை நஷ்டத்தில் இயங்கும் இன்னொரு நிறுவனத்திற்கு மானியமாகக் கொடுக்கும் சித்தாந்தமும் மாநில அரசின் மனதில் இருக்க வேண்டும்.[/perfectpullquote
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுகளில் உயர்ந்துகொண்டே போகும் வருமானப் பற்றாக்குறைகள் பற்றி 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 9ஆம் தேதி பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட மாநில நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை தெளிவாக எடுத்துரைத்தது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய்ப் பற்றாக்குறை 2013-14இ–ல் 0.18 சதவீதமாக இருந்து, 2019-20இல் 1.95 சதவீதமாக உயர்ந்து பின்பு 2021-22இல் 3.16 சதவீதத்தைத் தொட்டது. இதைத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு நிலைமை என்று கூறினார் பழனிவேல் தியாகராஜன். நிதிப் பற்றாக்குறையையும், வருவாய்ப் பற்றாக்குறையையும் குறைப்பதற்குப் பெரிய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் பேசினார்.
எனினும் 2021-22 நிதியாண்டின் மிச்சமிருக்கும் காலகட்டத்திற்காக வழங்கப்பட்ட அவரது முதல் பட்ஜெட்டில் பெரும் சீர்திருத்தங்கள் என்று அவர் எதையும் செய்யவில்லை. ஒருவேளை அவற்றைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் விட்டிருக்கலாம். சமீபத்தில் ஓர் ஊடக நேர்காணலில் அவர் வருவாய்ப் பற்றாக்குறை விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசினார். வருவாயைப் பெரிதும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைப் பற்றி அவர் சூசகமாகப் பேசினார். வணிக வரி வருமானம், கலால் வரி வருமானம், கனிம வள விற்பனை வருமானம் ஆகியவற்றில் ஏற்படும் ’கசிவு’களால்”அரசுக்கு உண்டாகும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-லிருந்து 3 வரையிலான சதவீதத்தில் இருக்கும்” என்று அவர் சொல்லியுள்ளார். பலமான நிர்வாகத்தின் மூலம் வரி மற்றும் வரியல்லாத வருவாய் திரட்சியை மேம்படுத்துவது அவசியம்தான். ஆனாலும் அதீத ஆர்வம்கொண்ட அதிகாரிகள் சிறிய வணிகர்களை இம்சிப்பதைக் கவனமாகத் தவிர்க்கவும் வேண்டும்
அவர் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையின் ஆழத்தில், நிதி அடிப்படைவாதத்தன்மை இழையோடுகிறது. நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச் சட்டத்தின் தர்க்க அடிப்படையை அந்த அறிக்கை எங்கேயும் கேள்வி கேட்கவில்லை. பழனிவேல் தியாகராஜனும் மௌனமாகவே இருந்துவிட்டார். மாநில அரசுகளின் நிதி அதிகாரங்களைக் கட்டுப்படுத்த விழையும் ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை வெள்ளை அறிக்கை கடுமையாக விமர்சிக்கவில்லை.
இந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மாற்றுவதன் மூலம் மாநில அரசின் நிதிநிலையை மேம்படுத்தலாம். அதற்கு, ஒத்தமனம் கொண்ட பிற மாநில அரசுகளோடு கைகோர்த்துச் செயல்படக்கூடிய சாத்தியத்திற்கு, சந்தர்ப்பத்திற்கு வெள்ளை அறிக்கை களம் அமைத்துக் கொடுக்கவில்லை. பெருந்தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் வழங்குகின்ற எண்ணற்ற சலுகைகளை மதிப்பீடு செய்வதற்கான பொறுப்பை வெள்ளை அறிக்கை கேட்கவில்லை. அல்லது பெரிய தொழில் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்குக் கொடுக்கப்படும் ஊக்கத்தொகைகளின் அளவு என்ன, பலன்கள் என்ன என்பதைப் பற்றி புனைந்து சொல்லப்பட்ட தரவுகளையும், உண்மையான தரவுகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வெள்ளை அறிக்கையைத் தயார்செய்ய வேண்டும் என்பதுகூட முன்வைக்கப்படவில்லை. இந்தச் சலுகைகள் நிச்சயமாக மாநில நிதி நிலையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; ஏற்படுத்தும். இவையெல்லாம் பழனிவேல் தியாகராஜனின் கவனத்திற்குத் தகுதியான கருத்துகள்தான்.
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தமிழ்நாட்டில் பொது நிறுவனங்களின் அமைப்பை மீளுருவாக்கம் செய்து பலப்படுத்துவதைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் கேரளாவின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். மாநில பொதுத்துறையில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை, ஊழலை ஒழித்து நல்ல சுத்தமான நிர்வாகத்தின் மூலமும், போதுமான தொழில்நுட்ப, சந்தை ஆதரவு மூலமாகவும், காப்பாற்றி கரைசேர்க்க முடிகின்ற சாத்தியத்தை கேரள இடதுசாரி ஜனநாயக அரசாங்கம் நிரூபித்திருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு சமூக நோக்கங்கள் உண்டு என்பதால், அவற்றை வெறும் வணிக லாபக் கோணத்தில் மதிப்பீடு செய்யமுடியாது. இந்தப் புரிதலும், ஒரு நிறுவன லாபத்தின் பகுதியை நஷ்டத்தில் இயங்கும் இன்னொரு நிறுவனத்திற்கு மானியமாகக் கொடுக்கும் சித்தாந்தமும் மாநில அரசின் மனதில் இருக்க வேண்டும்.
வெள்ளை அறிக்கையில் சொல்லப்பட்ட பிரச்சினைகளை கையாளும்போது அரசு இவற்றை நினைவில் கொள்வது நல்லது. அண்மையில் முதல்வர் சுட்டிக்காட்டிய திராவிட மாடல் என்றழைக்கப்படும் சித்தாந்தத்திற்கும், புதிய தாராளமய சித்தாந்தத்திற்கும் இடையே முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பழனிவேல் தியாகராஜன் இதையெல்லாம் கவனத்தில் கொள்வார் என்று நம்புவோமாக!
இதுசம்பந்தமான பிரச்சினையைத் தீர்க்க அரசு எடுக்கும் முயற்சி, ஒன்றிய அரசின் அணுகுமுறையால், நிதிமறுப்பு செயலால், முடிவெடுக்கும் அதிகாரத்தை அதீதமாக தன்கையிலே குவித்து வைத்திருக்கும் அதன் செயல்பாட்டால் தடைப்பட்டிருக்கிறது.
சித்தாந்த சிந்தனைகள் தவிர்த்து, பட்ஜெட் கவனத்தில் கொள்ள வேண்டிய சில உடனடிப் பணிகளும் உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கோவிட் பெருந்தொற்றுப் பரவலால், பெருமளவில் வாழ்வாதாரங்களையும், ஏராளமான உயிர்களையும் இழந்துவிட்டு மக்கள் கொடுமையான காலத்தை அனுபவித்திருக்கிறார்கள். இதை திமுக அரசு நிச்சயமாக உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுசம்பந்தமான பிரச்சினையைத் தீர்க்க அரசு எடுக்கும் முயற்சி, ஒன்றிய அரசின் அணுகுமுறையால், நிதிமறுப்பு செயலால், முடிவெடுக்கும் அதிகாரத்தை அதீதமாக தன்கையிலே குவித்து வைத்திருக்கும் அதன் செயல்பாட்டால் தடைப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பரவலாக்குதல் உட்பட வேலைவாய்ப்பு பிரச்சினைகளில் பட்ஜெட் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக, கச்சாப்பொருள் விலையேற்றத்தை இறக்குதல், செயல்படு மூலதனம், குறைந்தவட்டிக் கடன், சந்தைப்படுத்தல் ஆதரவு, கூலி மானியம் மற்றும் உட்கட்டமைப்பு உதவி ஆகியவற்றை பட்ஜெட் பரிசீலனை செய்யவேண்டும்.
வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உட்கட்டமைப்புக்கான (நீர்ப்பாசன வசதிகள், சாலைகள், விளைச்சல் சேமிப்புக்கிடங்கு) முதலீடுகள், வேளாண் விளைபொருள் நேரடி கொள்முதல் விரிவாக்கம், வேளாண்மை ஆராய்ச்சி சேவைகள், விரிவாக்கம் போன்றவற்றைப் பலப்படுத்துதல் என்று பட்ஜெட் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன.
இந்த நிஜங்கள் புரிந்துகொள்ளப் படவேண்டும்; ஆனால், அந்த நிஜங்களிடம் சரணடைய வேண்டிய அவசியமில்லை. அநீதியான, ஏற்றதாழ்வு நிறைந்த அரசியல் பொருளாதார அமைப்பை எதிர்த்து மக்களைத் திரட்டும் பணியையும் மறந்துவிடக்கூடாது
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்குதல், முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்துதல் என்று சில கோரிக்கைகளும் இருக்கின்றன.
இறுதியாக அரசின் கடனையும், வருவாய்ப் பற்றாக்குறையையும் பெரியதொரு கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டும். வெள்ளை அறிக்கையில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் 2020-21 நிதி ஆண்டுக்கானவை (ஓரளவு 2019-20 நிதியாண்டுக்கானவையும் கூட). ஆனால் அவை முந்தைய ஆண்டுகளின் தரவுகளோடு ஒத்துப்போகாது. கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதத்தை தனித்துப் பார்க்கமுடியாது; நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச் சட்டப் பிரிவுகளின்படியும் ஆராய முடியாது.
பணக்காரர்களிடமிருந்து நிதிதிரட்டி பொதுமக்களுக்காக செலவழிப்பது பொருத்தமான அணுகுமுறை. தேசத்தின் செல்வவளத்தைப் படைத்து அதற்குக் குறைவான ஊதியமும் கூலியும் பெற்று மறைமுகமான வரிகள் கட்டும் உழைப்பாளர்களின் தேவைகளை அப்படித்தான் பூர்த்தி செய்யமுடியும். எனினும் ஒன்றிய அரசு-, மாநில அரசு நிதியுறவின் இயல்பாலும், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகளாலும் மாநில அரசுகள் பெரிதும் தடைகளுக்கு ஆளாகின்றன.
இந்த நிஜங்கள் புரிந்துகொள்ளப் படவேண்டும்; ஆனால், அந்த நிஜங்களிடம் சரணடைய வேண்டிய அவசியமில்லை. அநீதியான, ஏற்றதாழ்வு நிறைந்த அரசியல் பொருளாதார அமைப்பை எதிர்த்து மக்களைத் திரட்டும் பணியையும் மறந்துவிடக்கூடாது.
Read in : English