Read in : English

சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலும் உரிய காலத்தில் நடத்தப்படுவது போல, உள்ளாட்சித் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சி நினைத்தால் மட்டுமே தேர்தல் நடக்கும். அல்லது நீதிமன்ற உத்தரவு காரணமாக தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படும் நிலை உள்ளது. தற்போது ஒரு வழியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றுவிட்டன. இந்தக் காலகட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது ஆறுதலான விஷயம். இந்தத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொற்று அதிகரித்துவிடக் கூடாது என்பது பலரது எதிர்ப்பார்ப்பு.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. 21 மாநகராட்சிகளுக்கு மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள். ஆனால், மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளுக்கு நேரடியாக வாக்காளர்களின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை தற்போது இல்லை. அதற்கு பதிலாக, மாநகராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், மேயரைத் தேர்வு செய்வார்கள்.

ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை உள்ள இடங்களில் பிரச்சினை இல்லை. ஆனால், பெரும்பான்மை இல்லாமல் இழுபறி சூழ்நிலை ஏற்பட்டால், மேயர் பதவியைப் பிடிக்க விரும்பும் கட்சிகள் அல்லது அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்க குதிரைபேரம் பேசுவார்கள். நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறினால் பதவி இழக்க வேண்டியது வரும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விதி பொருந்தாது. இது குதிரை பேரத்துக்குச் சாதகமானது. இந்தத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, மேயர் தேர்தல் நடக்கும்போது இதைவிட சுவாரசியமான காட்சிகளைப் பார்க்கலாம்.  அதைப்போல, மக்களவைத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிற்கும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசியாகக் கீழே இருக்கும் நோட்டா பட்டனை அழுத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம்.

49 ஓ விதிமுறையை அடையாளப்படுத்தும் நோட்டாவை (None of the Above – NOTA) இந்த உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்த முடியாது. அதனால், சில நேரங்களில் கவுன்சிலர் பதவிக்கு நிற்கும் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு கிடைத்ததைவிட குறைவான வாக்குகள் கிடைக்கும்போது வெட்கித் தலைகுனிய வைத்து விடலாம். அதனால், நோட்டா இல்லை என்பதால் பல கவுன்சிலர்களுக்கு அதிலும் குறிப்பாக பல சுயேச்சைகளுக்கு நிம்மதி. எந்த வேட்பாளரும் சரியில்லை என்று கருத்தும் பலருக்கு நோட்டா பயனுள்ளதாக இருந்தது. அதனால், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத சில வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வராமல் இருந்திருக்கக்கூடும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்கும் தேர்தல்களில் உள்ளூர் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறும். ஆனால், மற்ற தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் காசு, பணம் விளையாடுவதைத் தடுத்துவிட முடியாது. எனினும், மக்களாட்சி மாண்பைப் பாதுகாக்கத் தேர்தல்கள் நடப்பது தவிர்க்க முடியாது.

மத்திய அரசிடமிருந்து மாநிலத்துக்கு உரிமை கேட்கும் மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தாராளமாக உரிமைகளைத் தந்துவிடுவதில்லை. இது தனியே விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால், இந்தத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் ஏதாவது நன்மை செய்வார்களா என்றே மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நோட்டா மீம்ஸ்

 

நோட்டா மீம்ஸ்

 

 

நோட்டா மீம்ஸ்

 

 

 

 

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival