Read in : English

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை என்ற கேள்வியை கள்ளக்குறிச்சி வழக்கு எழுப்பியுள்ளது. நான் நன்றாகப் படிப்பேன். ஆனால், வேதியியல் ஆசிரியர் எனக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தார். வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் இருக்கும். அவற்றை என்னால் படிக்க முடியவில்லை. நான் படிப்பில் மிகவும் மோசமாக இருப்பதாக வேதியியல், கணித ஆசிரியர்கள் மற்றவர்களிடம் கூறினார்கள்” என்று கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஸ்ரீமதி, சாகும் முன்பு தான் எழுதிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அந்த மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வேதியியல், கணித ஆசிரியைகளைக் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் நாட்களில் அந்த மாணவி பட்ட கஷ்டங்களை அந்தக் கடிதம் காட்டுகிறது. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்குக் கல்வியாளர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

ஒரு காலத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்கள், பள்ளி பொதுத் தேர்வில் முன்னிலையில் இருந்தன. பின்னர், இந்த இடம் கோழிப்பண்ணைத் தொழில் கொழிக்கும் பகுதியான நாமக்கல் மாவட்டத்துக்கு மாறியது.

ஒரு காலத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்கள், பள்ளி பொதுத் தேர்வில் முன்னிலையில் இருந்தன. பின்னர், இந்த இடம் கோழிப்பண்ணைத் தொழில் கொழிக்கும் பகுதியான நாமக்கல் மாவட்டத்துக்கு மாறியது. இந்த மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் இருந்த இடத்தில் பள்ளி வகுப்பறைகள் வந்து விட்டதாக சிலர் கிண்டலாகக் கூறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருகிவிட்டன.

“கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக நன்றாக உள்ளனர். ஆனால் படிப்பு அறிவு பெறுவதில் அவர்கள் பலவீனமாக இருந்தனர்” என்றார். அரசுப் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பி.கே. வெங்கடாசலம். “நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கவுண்டர் சமூகத்தினர் முன்னேறிய சாதியினராக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதனால், இந்த இனத்தைச் சேர்ந்த பலர் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற முடியாமல் இருந்தனர். கலைஞர் ஆட்சிக் காலத்தில் கவுண்டர் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அடுத்து, அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உயர்கல்வி படிக்கத் தொடங்கினார்கள்” என்பதை நினைவுகூர்கிறார் வெங்கடாசலம்.

மேலும் படிக்க:

கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்?

தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

 

“அந்தக் காலக்கட்டத்தில் சில கோழிப்பண்ணை நடத்திய விவசாயிகள் தங்களது சாதியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காக தங்களது நிலங்களில் பள்ளிகளைத் தொடங்கினர். அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால், மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்” என்கிறார் வெங்கடாசலம். “இதைப் பார்த்த மற்றவர்களும், இந்த மாவட்டத்தில் பள்ளிகளைத் தொடங்க ஆரம்பித்தனர்” என்றார் அவர்.

“தனியார் பள்ளிகளிடையே போட்டி ஏற்பட்டதால், தங்களிடம் படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அதனால்தான் இந்த மாவட்டத்தில் கல்வி வியாபாரமாகிவிட்டது. மாநிலத்தில் உள்ள மற்ற தனியார் பள்ளிகளும் இந்த முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன” என்றார் வெங்கடாசலம்.

சேலத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோரான இ. பாரதி, தனது மகள் அரசுப் பள்ளியில் படித்து வருவதாகக் குறிப்பிட்டார். நீட் தேர்வு எழுதுவற்காக கணிதம், உயிரியல் பாடப்பிரிவை எடுத்திருப்பதால், வகுப்பு ஆசிரியர்கள், அவளுக்கும் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்கிறார்.

பொதுத்தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பள்ளிகளை, குறிப்பாகத் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்காக விதிமுறைகளை அரசு கொண்டு வர வேண்டும்.

“பொதுத்தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பள்ளிகளை, குறிப்பாகத் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்காக விதிமுறைகளை அரசு கொண்டு வர வேண்டும்” என்கிறார் கல்வியாளர் பி.இளையராஜா. “ஆசிரியர்களை மதிப்பீடு செய்வதற்காகத்தான் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக அல்ல” என்கிறார் அவர்.

“வகுப்பறைகளில் ஆசிரியர்கள் எப்படிக் கற்பிக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்பிப்பது மாணவர்களுக்கு எந்த அளவுக்குப் புரிகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் பல ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் அவர்களுக்கு போதிய அனுபவமும் இருப்பதில்லை” என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்அவர்.

கடந்த திங்கட்கிழமையன்று சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக அந்த மாணவி இத்தைகைய முடிவை மேற்கொண்டதாக மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவத்தை அடுத்து, கல்வித் துறை மூலம் வளரிளம் பருவ மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்களும் மாணவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தங்களது எதிர்பார்ப்புகளை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்ட இளையராஜா, மாநிலத்தில் மேலும் மாணவர் தற்கொலை சாவுகள் ஏற்படாமல் தடுக்க உளவியல் ரீதியிலான ஆலோசனை வகுப்புளை மாநில அரசு நடத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதே பள்ளிகளின் நோக்கம். தற்கொலை செய்வதான இடம் அது இல்லை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival