Read in : English

ஆன்லைன் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை என்றதும் நவீனத் தொழில்நுட்பம் காரணமாக ஏற்கெனவே இருந்த ஒற்றைச்சாளர பொறியியல் மாணவர் சேர்க்கையைவிட (Single window Counselling) எளிதாக இருக்குமா என்று பார்த்தால் அது அப்படி இல்லை என்பதை கடந்த சில ஆண்டு கால அனுபவங்கள் காட்டுகின்றன.

 “கல்லூரிகளில் காலி இட நிலவரங்களைத் தெரிந்து கொண்டு மாணவர்கள் தங்களது விருப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது என்பது கிராமப்புற மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை எளிமையானது. வெளிப்படையானது. மாணவர்கள் நேரடியாக வந்து தங்களது விருப்பப்படி கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்ய உதவும் முறை இது. எனவே, ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கையை (Offline mode) மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் மற்றும் அட்மிஷன் பிரிவின் முன்னாள் இயக்குநர் பி.வி. நவநீதகிருஷ்ணன்.

1997ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மு. ஆனந்தகிருஷ்ணன் முன்முயற்சியால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் `சிங்கிள் விண்டோ அட்மிஷன் சிஸ்டம்’ என்கிற ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நிலை மாறி, ஒரே விண்ணப்பம் போட்டால் போதும், மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இரண்டாம் ஆண்டில் அந்த மாணவர்களுக்கு பாடப்பிரிவை ஒதுக்கீடு செய்வதற்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியே பணம் கேட்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மாணவர்களுக்குக் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்யும்போதே அவர்களது மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் விருப்பப்படி கல்லூரியுடன் பாடப்பிரிவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில் 2018இல் கொண்டுவரப்பட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த வெளிப்படையான, ஒற்றைச்சாளரமுறை பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடிப்படை நோக்கத்தை குலைப்பதாக உள்ளது

பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களும் பெற்றோரும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதைத் தவிர்க்க சென்னையுடன் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை (Disrtibuted counselling) 2001ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டது. அதற்கு ஆகும் செலவையும் நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு அந்த நடைமுறை 2005ஆம் ஆண்டில் கைவிடப்பட்டு, மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வந்தது.

அதிமுக ஆட்சியில் 2018இல் கொண்டுவரப்பட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த வெளிப்படையான, ஒற்றைச்சாளரமுறை பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடிப்படை நோக்கத்தை குலைப்பதாக உள்ளது என்பதை சில கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஐஐடி, என்ஜடி போன்ற மத்திய பொறியியல் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆன்லைன் கவுன்சலிங்கில் கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வதற்கு நகர்ப்புறங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் தடுமாறுகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் தங்களது விருப்பமான கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற, சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் திணறுகிறார்கள். 190க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களில் கணிசமானவர்களுக்கு ஆன்லைன் கவுன்சலிங் மூலம் முதல் விருப்பப்படி விரும்பிய கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைப்பதில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம். ஏனெனில், அவர்கள் விருப்பப் பட்டியலை சரியாக பூர்த்தி செய்ய முடிவதில்லை என்பதுதான் அதற்கு முக்கியக் காரணம். அதனால், குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர் அந்த இடத்தைப் பெற்றுவிட முடிகிறது என்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஒற்றைச்சாளர முறைப்படி நடத்தப்படும் கவுன்சலிங்கிற்காக சென்னைக்கு ஒரு முறை மட்டும் வந்தால் போதும். பெற்றோருடன் மாணவர்கள் வருவதற்கு தமிழக அரசு பஸ்களில் வருவதற்கு 50 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கியது. ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் தங்களது ரேங்க் படி இருக்கிற காலி இடங்களில் கல்லூரியையும் படிப்பையும் தாங்களே தேர்வு செய்து, உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரே நாளில் சில மணி நேரங்களில் இந்த மாணவர் சேர்க்கை நடைமுறை முடிந்துவிடும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால், முக்கியப் பொறியியல் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.

ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் தங்களது ரேங்க் படி இருக்கிற காலி இடங்களில் கல்லூரியையும் படிப்பையும் தாங்களே தேர்வு செய்து, உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.  

ஆனால், வீட்டில் கம்ப்யூட்டரும் இணைய இணைப்பும் இருந்தாலும்கூட பலரால் ஆன்லைன் மூலம் கவுன்சலிங் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது சிரமம். அதனால், ஆன்லைன் கவுன்சலிங்கிற்காக மூன்று முறை உதவி மையங்களுக்கு (TNEA Facilitation Centre – TFC) வர வேண்டியதுள்ளது. வீட்டிலிருந்தே கவுன்சலிங் நடைமுறைகளை நாமே செய்தாலும்கூட, சான்றிதழ் சரிபார்ப்புக்கு உதவி மையங்களுக்கு வந்தே ஆக வேண்டும். சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய, சான்றிதழ்களை ஸ்கேன் செய்வ•தற்கு தனியே பணம் செலவழிக்க வேண்டும். அத்துடன் விருப்பப் பட்டியலைச் சரியாகத் தயாரிப்பதற்கு விவரம் அறிந்தவர்கள் அல்லது கல்வி ஆலோசகர்களின் உதவி தேவைப்படுகிறது. இதில், சிலரது அல்லது சில கல்வி நிறுவனங்களின் தாக்கம் காரணமாக தரமில்லாத கல்லூரிகளையும் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகிறது என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆன்லைன் கவுன்சலிங் மூலம் இடங்களைப் பெற விரும்பும் மாணவர்கள் தங்களது விருப்பப் பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருந்து கம்ப்யூட்டரே இறுதி செய்து முடிவை அறிவிக்கும். Ñமாணவர்களின் விருப்பப் பட்டியல் வரிசை சரியாக இல்லாவிட்டால், தகுதி இருந்தும் உரிய கல்லூரியோ படிப்போ கிடைக்காமல் போகலாம்.

விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொறியியல் படிப்புகளில் இடம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், முதல் கட்ட கவுன்சலிங்கில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற இடம் கிடைக்காத சூழ்நிலையில் அடுத்தடுத்தகட்ட கவுன்சலிங்கில் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ற நல்ல கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

அத்துடன், இந்த ஆன்லைன் கவுன்சலிங், கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றுக் கவுன்சலிங்கும் முடிய குறைந்தது ஒரு வாரம் ஆகிறது. எனவே, ஆன்லைன் கவுன்சலிங்கினால் காலம் மிச்சமாகிறது என்றும் சொல்லிவிட முடியாது.

இந்த நிலையில், ஒற்றைச்சாளர முறையில் உள்ள மாணவர்களுக்குச் சாதகமான அம்சங்களையும் ஆன்லைன் கவுன்சலிங் முறையில் உள்ள பாதகமான அம்சங்களையும் கருத்தில் கொண்டு, பொறியியல் படிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival