Read in : English
நீச்சல் போட்டியில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு பதக்கங்களை வாங்கிக் குவித்த ஈழத்தமிழ் அகதி மாணவி தனுஜா (15வயது) தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.
இலங்கை அகதி என்றும் இந்தியக் குடியுரிமை இல்லை என்றும் காரணம் கூறி அவருக்கு தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்கிறார் தனுஜா.
இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அருள்ஜோதி தம்பதிகள் குடும்பம் மகள் தனுஜாவுடன் 2007ஆம் ஆண்டு திருச்சிக்கு அகதிகளாக வந்து சேர்ந்தது. திருச்சி கே.கே. நகரில் வசித்து வரும் தனுஜா, தற்போது ஆல்பா விஸ்டம் வித்யாஸ்ரமம் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.
புனேவில் நடைபெற்ற இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தேன். இதனால் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதியும் பெற்றேன். ஆனால், நான் இலங்கை அகதி என்ற ஒரே காரணத்திற்காக அந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
“2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசோ அல்லது இரண்டாவது பரிசோ பெற்றிருக்கிறேன். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்க இலங்கை அகதி என்ற காரணத்தால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின்னர், 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற இந்திய அளவிலான Biathle, Triathlc நீச்சல் போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தேன். இதனால் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதியும் பெற்றேன். ஆனால், நான் இலங்கை அகதி என்ற ஒரே காரணத்திற்காக அந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இலங்கை அகதியான எனக்கு பாஸ்போர்ட் கிடையாது. அதனால் திறமை இருந்தும் என்னால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார் தனுஜா.
“இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் வசித்தபோது எனது தொழில் மீன்பிடித்தல். போரின் உச்சக்கட்டத்தால் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த நான், பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்து வருகிறேன். சிறுவயதில் இருந்தே கடலுக்கு சென்று நீந்திய எனக்கு, எனது மகள் தனுஜாவுக்கும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமென விரும்பினேன். அதனால் 5 வயதாக இருக்கும் போதே அருகில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்று அவளுக்கு நீச்சல் கற்று கொடுத்தேன். எனது மகளும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக நீச்சலில் ஆர்வம் செலுத்தினாள் என்கிறார் தனுஜாவின் தந்தை ஜெயக்குமார்.
ஆனால், 2016ஆம் ஆண்டு 10 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தனுஜா பங்கேற்க முயன்றார். அப்பொழுது அவருக்கு வயது 10. ஆனால் தனுஜாவுக்கு வயது 14 என கூறி அவரை போட்டியில் பங்கேற்க முடியாது என்று உடற்தகுதி வல்லுநர்கள் நிராகரித்தனர். எனது மகளுக்கு வயது 10 தான் ஆகிறது என வாதிட்டும் அதைக் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. தனுஜாவை பரிசோதித்த பல் மருத்துவர் எனது மகளுக்கு 10 வயது என்றும், எலும்பு மருத்துவர் 14 வயது என்றும் மாறுபட்ட சான்றிதழைக் கொடுத்தனர். இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜான்சன் மூலம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை ஓராண்டிற்கு மேலாக நடைபெற்று 2017ஆம் ஆண்டு தனுஜாவை மருத்துவ சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் 2006ஆம் ஆண்டு எனது மகள் தனுஜா பிறந்த சான்றிதழையும் நாங்கள் கொடுத்தோம். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2018ஆம் ஆண்டு தனுஜா உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்க முயன்ற போது அகதி என்பதை காரணம் காட்டி எனது மகள் மீண்டும் நிராகரிக்கப்பட்டாள்“ என்கிறார் அவர்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் என்னையும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தனுஜா.
பிறகு மீண்டும் உரையாடலை தொடர்ந்த ஜெயக்குமார், “ இலங்கை போரால் சொந்த நாடு, வீடு, மக்கள் என எல்லாவற்றையும் விட்டு தமிழகத்தில் குடியேறி 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். தமிழீழப் போர் உச்சக்கட்டத்தை அடைந்த சூழ்நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த நாங்கள் வெளிப்பதிவு அகதிகளாக அடையாளப்படுத்தப்பட்டோம். அதனால் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் சலுகைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. வெளிப்பதிவு அகதிகளாக கிட்டத்தட்ட 300 பேர் வசித்து வருகிறோம். அனைவரது நிலைமையும் இதுதான். நாங்கள் அகதிகளாக இருந்து விட்டோம், எங்களுக்கு பின் வரும் தலைமுறையும் அகதிகளாக இருக்க கூடாது என்பதற்காகவே எனது மகளை நீச்சல் போட்டியில் சாதிக்கத் தயார்படுத்தி வருகிறேன். அதிலும் பல கட்ட போராட்டங்களை சந்தித்து வருகிறோம். சமீபத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் எங்களுக்கு வந்த கடிதத்தில் அகதி என்பதால் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் தனுஜா பங்கேற்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் ஜெயக்குமார்.
அகதிகளாக வந்த நாங்கள் வாழ்வில் மேம்பட வேண்டுமென எங்கள் திறமைகளை வெளிப்படுத்தினாலும், குடியுரிமை இல்லை, நீங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்ற காரணங்களை கூறி எங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரிடமும் முறையிட்டுள்ளோம். தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் சர்வதேச போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியும். தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த அகதியாக வந்த நான் சர்வதேச அளவில் சாதித்தால், உலகம் முழுவதும் அகதிகளாக வாழும் மக்களுக்கு அது உற்சாகமாக இருக்கும். நான் மட்டுமின்றி எங்களுடன் வசிக்கும் வேறு சில அகதி குழந்தைகளும் விளையாட்டுத்துறையில் சாதித்து வருகின்றனர். அவர்களும் அகதிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். 15 ஆண்டுகளாக தமிழகமே எங்களது வாழ்விடம் என வாழ்ந்து வரும் எங்கள் மீதும் தமிழக அரசு கவனம் செலுத்தி எங்களுக்கான கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்புகளில் உதவ வேண்டும். இந்த ஆண்டு நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் என்னையும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தனுஜா.
Read in : English