Read in : English
அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகிய பெரிய நிறுவனங்கள் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள (சுமார் ரூ. 5 இலட்சம் கோடி) சில்லறை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதைத் தடுக்கும் விதமாகவும், சிறிய சில்லறைத் தொழில் வியாபாரிகளும், ஏன் பெட்டிக்கடை உரிமையாளர்களும் கூட இணையதளக் கடைகளை ஆரம்பிக்க உதவும் விதமாகவும், ஒன்றிய அரசு அமைதியாக திறந்தவெளி தேசிய மின்னணு வியாபாரத் தளத்தை (ஓப்பன் நேசனல் டிஜிட்டல் காமர்ஸ் – ஓஎன்டிசி) ஆரம்பித்து வைத்திருக்கிறது. கோயம்புத்தூர் உட்பட ஐந்து மாநகரங்களில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இணையதளச் சில்லறைத் தொழிலில் ஆகப்பெரிய நிறுவனங்கள் அடியெடுத்து வைத்து, பின்பு அளப்பரிய அமெரிக்க முதலீடுகளுடனும் பெரிய தரவு ஆராய்ச்சி உத்திகளுடனும் பெரிதாக விரிவாக்கம் அடைந்தன. அதனால் ’கிராண’ (உள்ளூர்) கடைகள் என்னும் பாஜகவின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டு விட்டது என்ற கவலை வளர்ந்து கொண்டே இருக்கிறது. மளிகை வியாபாரத்தில் இருக்கும் சில கடைகள் தங்களது உள்ளூர் வாடிக்கையாளர்களை வாட்ஸப் மூலமாகவும், தங்கள் இணையதளங்கள் மூலமாகவும் டன்ஷோ நிறுவனம் மூலமாகவும் ஒருங்கிணைத்துக் கொண்டன; ஆனால் பலர் இப்படிச் செய்யாமல் பின்தங்கிவிட்டனர். மேலும், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட உள்ளூர் கடைகளால் விரிவடைய முடியவில்லை. ஏனென்றால் அசுரத்தனமான இணையதள வியாபாரம் அவற்றிற்குப் பொருந்தவில்லை.
சில்லறைத்தொழிலுக்கான யூபிஐ
திறந்தவெளி தேசிய மின்னணு வியாபாரத் தளம் (ஓப்பன் நேசனல் டிஜிட்டல் காமர்ஸ் – ஓஎன்டிசி) என்பது ஒன்றுபட்ட பணம்செலுத்தும் இடைத்தளம் (யூனிஃபைட் பேமண்ட்ஸ் இண்டர்ஃபேஸ் – யூபிஐ) போலத்தான் என்று விவரிக்கப்படுகிறது. இந்த ஓஎன்டிசி உள்ளூர் கடையை இணையத்தில் ஒரு பொதுத்தளத்திற்குக் கொண்டுச் சென்று, எல்லோராலும் எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைத்து தொழில்செய்ய உதவும். இணையத்தில் அந்த உள்ளூர் கடையை தேடிப்பிடிக்கும் வகையில் ஓர் அமைப்பை சரியாக உருவாக்கி வைத்தால், பண்டகசாலை, மற்றும் சேவைகளையும் உபகரணங்களையும் ஏற்பாடு செய்துவைக்கும் வசதி ஆகிய அம்சங்களை உருவாக்கி வைத்தால், உள்ளூர், தொலைதூர வாடிக்கையாளர்களுக்கு இந்த இணையத்தளச் செயற்பாடு நன்றாகச் சேவை செய்யும்.
சிறுதொழில்கள் இணையதளத்தில் இணையாமல் போவதற்குத் தடைகளாக இருப்பவை அறிவுச் சமச்சீர்வின்மை, அதிக விலைகள், வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள உதவும் நம்பிக்கைக்குரிய கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவைதான்.
“இதுவொரு பெரிய முயற்சி. நல்ல பலன் கொடுக்கும் வாய்ப்பு கொண்டது. ஏனென்றால் இப்போது வெறும் பட்டியல்தரும் இணையதளங்கள் மட்டும்தான் இருக்கின்றன; அவற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வியாபாரி சந்திக்கும் இடைஞ்சல்களை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி அந்த இணையதளங்கள் வியாபாரிகளை இணையத்தில் பெரிதாக முன்னிறுத்த அதிகமான கட்டணங்கள் வசூலிக்கின்றன,” என்கிறார் உதயகுமார். அவர் சென்னையின் தெற்குப் புறநகரான ஒட்டியம்பாக்கத்தில் சுபஸ்ரீ இண்டீரியர்ஸ் என்ற பெயரில் வீட்டை வடிவமைக்கும் தொழில் நடத்துகிறார். சிறுதொழில்கள் இணையதளத்தில் இணையாமல் போவதற்குத் தடைகளாக இருப்பவை அறிவுச் சமச்சீர்வின்மை, அதிக விலைகள், வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள உதவும் நம்பிக்கைக்குரிய கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவைதான். இந்தப் பிரச்சினைகளைச் சந்திக்கும் சிறுதொழில் முனைவோர்களுக்குச் சரியான உதாரணம் உதயகுமார். தனக்கான ஓர் இணையதளத்தை உருவாக்கிக் கொள்ள அவருக்கு ஆரவம்தான். ஆனால் அதற்கான விலை அவருக்கு மலைப்பாக இருக்கிறது. அதனால் அவர் இப்போதைக்கு வாட்ஸப் மூலம் தொழில் நடத்துகிறார். ஆனாலும் மக்களின் வாய்வார்த்தைகளையே அவர் பெரிதும் நம்புகிறார்.
டில்லி என்சிஆர், பெங்களூரு, போபால், ஷில்லாங் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட இந்த
ஓஎன்டிசியை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, “உலகத்தை அதிரவைக்கும் ஓர் சில்லறைத்தொழில் புரட்சி” என்று வர்ணித்துள்ளார். இது ”மின்வணிகத்தை ஜனநாயகப்படுத்தும்” என்கிறார் அவர். ஓஎன்டிசியை உருவாக்கிய பெருமையைக் கொண்ட நந்தன் நிலேகனி இதை ஆகப்பெரியவோர் கூட்டு முயற்சி என்று அழைக்கிறார்.
ஏப்ரல் 29 அன்று தொடங்கப்பட்ட ஓஎன்டிசி, அமேசானுக்கும், ஃபிளிப்கார்ட்டுக்கும் ஒரு தேசிய மாற்று ஆகும். ஃபிளிப்கார்ட்டின் பெரும்பங்கு அமெரிக்காவின் சில்லறைத்தொழிலில் பெரிய நிறுவனமான வால்மார்ட்டிடம் இருக்கிறது. இந்தியா போட்டி ஆணையம் (காம்பெட்டிஷன் கமிசன் ஆஃப் இந்தியா – சிசிஏ) இந்தியாவிலிருக்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களைப் பற்றி பலதடவை ஆய்வு செய்திருக்கிறது. மிகச் சமீபமாக மே 2-ஆம் தேதி அமேசான் அதன் சில்லறை வர்த்தகக் கூட்டாளிகளுடன் கொண்டிருக்கும் சிறப்பான உறவைப் பற்றி சிசிஏ ஓர் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறது. அமேசான் தன்னுடைய விற்பனைத் தரவுகளையும், மற்ற விற்பனை நிறுவனங்களின் தரவுகளையும் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து தன்பொருட்களின் விலைகளைப் போட்டியில் ஜெயிக்கும் வண்ணம் நிர்ணயம் செய்தது; மேலும் ஒரேமாதிரியான சரக்குகளை தனது பிராண்டிலே கொண்டுவந்தது. இவ்வாறு அமேசான் சில்லறை வர்த்தகத்தில் மற்ற விற்பானையாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்ததாக கடந்த வருடம் ராய்ட்டர்ஸ் செய்தி சொன்னது.
இந்தப் பின்னணியில் லட்சக்கணக்கான கடைகள் இணையத்தில் திறக்கப்பட்டு எல்லோருக்குமான ஒரு கட்டமைப்பை உருவாகப்போகின்றன என்பது கிளர்ச்சிக்குரிய விசயம்தான். ஆனால் இதில் சவால்களும் இருக்கின்றன. யூபிஐ என்னும் பணம்செலுத்தும் இணையவழியில் பயனார்களின் தவறுகளாலோ அல்லது மோசமான உட்கட்டமைப்பு போன்ற தொழில்நுட்பக் காரணங்களாலோ ஏற்படும் பரிவர்த்தனைத் தோல்விவிகிதம் ஒரு பிரச்சினைதான். என்றாலும் யூபிஐ பலமானதுதான் என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. சிறிய கிராம வங்கிகளின் தொழில்நுட்ப பரிவர்த்தனை தோல்வி விகிதம் 16 சதவீதம்; மையநீரோடை வங்கியான இந்தியன் வங்கியின் பரிவர்த்தனை தோல்வி 2.92 சதவீதம்; சென்ட்ரல் வங்கியின் விகிதம் 2.26 சதவீதம். இவையெல்லாம் மார்ச் 2022-க்கான யூபிஐ பற்றிய அதிகாரப்பூர்வமான சமீபத்திய தரவுகள். பணம் செலுத்துவதற்கு மட்டுமல்ல, பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவும், சரக்குகளையும், சேவைகளை வழங்குவதையும் இணையத்தில் கண்காணிக்கும் விசயம் சம்பந்தமாகவும் சிறிய வர்த்தகர்களுக்கான இணையதளத் தொழில் கட்டமைப்பிற்கு ஒரு பலமான சூழலை உருவாக்க வேண்டும்,
இந்த ஓன்டிசி அமைப்பில் பாரத மாநில வங்கி, இந்திய தரக் கவுன்சில், என்எஸ்டிஎல், நபார்டு, இந்திய சிறுதொழில்கள் வங்கி மற்றும் பல வங்கிகளும் முதலீட்டாளர்களாக இருக்கின்றன.
நம்பிக்கையைக் கட்டமைப்பது
அரசு கொண்டுவந்திருக்கும் ஓஎன்டிசியில் நுகர்வோர் மைய அம்சங்களும், ஏமாற்றுக்கார விற்பனையாளர்களைக் களையெடுக்கும் வசதியும் இருக்க வேண்டும்.
பிற விற்பனையாளர்கள் மீது அளவுக்கு அதிகமான அதிகாரம் கொண்டிருக்கிறது என்றும், தேடுபொறி விளைவுகளில் நுகர்வோர்களை தன் இஷ்டப்படி ஆட்டுவிக்கும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அமேசான் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனாலும் வாங்கிய பொருள்களைத் திருப்பிக் கொடுக்கும் வசதி, சரிபார்க்கப்பட்ட வாங்குபவர்களுக்கு இருக்கும் சேவை மதிப்பீடு செய்யும் வசதி, ஆர்டர்களை இணையத்தில் கண்காணிக்கும் வசதி ஆகிய வசதிகள் அமேசானில் இருக்கின்றன.
மேலும் ஒரு சர்ச்சை இருக்கிறது. அமெரிக்காவின் சிறு நிறுவனங்கள் அறமற்ற ஆனால் கவர்ச்சியான முறைகளில் சரக்குகளின் அல்லது சேவைகளின் மதிப்பீடுகளை உயர்த்த வாடிக்கையாளர்களைப் பயன்படுத்துகின்றன என்பதுதான் அந்தச் சர்ச்சை. ஒரு டில்லி விற்பனை நிறுவனம் இந்த எழுத்தாளரை அணுகி, அலுவலக நாற்காலிக்கான மூன்று நட்சத்திர மதிப்பீட்டை நான்கு நட்சத்திர மதிப்பீடாக உயர்த்தச் சொன்னது. அப்படிச் செய்தால் சரக்கின் வாரண்டியை விரிவாக்குவதாக அந்த நிறுவனம் சொன்னது. இந்த அரக்கர்க் கூட்டத்தில் சமீபத்தில் டாட்டா குழுமமும் இணைந்து கொண்டது. தன் சரக்குகளுக்கான, சேவைகளுக்கான ஓர் ஒன்றுபட்ட செயலியை டாட்டா அறிமுகம் செய்திருக்கிறது. அரசு கொண்டுவந்திருக்கும் ஓஎன்டிசியில் நுகர்வோர் மைய அம்சங்களும், ஏமாற்றுக்கார விற்பனையாளர்களைக் களையெடுக்கும் வசதியும் இருக்க வேண்டும்.
அதீத உள்ளூர் அணுகுமுறை
இணையதள மின்வர்த்தகத்தில் ஓர் அதீத உள்ளூர் அணுகுமுறை இருந்தால் ஓஎன்டிசி வெற்றி பெறும். உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளையும், பொருட்களையும் இணையதளத்திற்கு மாற்றுவதின் மூலமும், நம்பிக்கைக்குரிய கட்டணம் செலுத்தும் அமைப்பை அறிமுகப்படுத்துவதின் மூலமும், ஏராளமான பேர்பெற்ற வர்த்தகர்கள் மேலும் வளரமுடியும். இந்தப் பொருட்களில் கருப்பூர் கலம்கரி ஓவியங்கள், கள்ளக்குறிச்சி மரப்பட்டை ஓவியங்களும் அடங்கும். இவை கடந்த வருடம் புவிசார் குறியீடு பெற்றவை.
கோவிட்-19 போன்ற நிகழ்வுகள் இல்லாத ஒரு சாதாரணமான ஆண்டில் இந்தியர்கள் எந்தப் பொருட்களை வாங்கச் செலவு பண்ணுகிறார்கள்? நகர்ப்ப்புற இந்தியர்கள் போக்குவரத்து சம்பந்தமான பொருட்களுக்கும், சூடுபடுத்தும், குளிராக்கும் கருவிகளுக்கும் (மொத்தம் 53 சதவீதம்), நகைகளுக்கும் (18 சதவீதம்), ஐடி மற்றும் தகவல் கருவிகளுக்கும் (9.91 சதவீதம்) செலவு பண்ணுகிறார்கள். மேலும் பொழுதுபோக்குக் கருவிகளுக்கும், மரச்சாமானகளுக்கும் அவர்கள் செலவு செய்கிறார்கள். சேவைகள் என்று பார்த்தால், அவர்கள் தகவல், டிவி, ரேடியோ, வேலைக்காரர்கள், பொழுதுபோக்கு, ரிப்பேர், தையல், மதச் செயற்பாடுகள் ஆகிய விசயங்களுக்குச் செலவு செய்கிறார்கள். இவையெல்லாம் என்எஸ்எஸ்ஓ (72-ஆவது ரவுண்ட் – 2014-15) சரக்குகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் ஆகும் வீட்டுச்செலவுகள் பற்றி தந்த முக்கிய குறியீடுகள்படி உருவான தரவுகள்.
கட்டிடங்களில் இயங்கும் கடைகளுக்கு ஓஎன்டிசி தரப்போகும் சமவாய்ப்புகளில் அரசியல் லாபங்கள் இருக்கின்றன. கோவிட்டால் பாதிக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஓஎன்டிசி உதவ வேண்டும். சில்லறை வர்த்தகம் 2030-க்குள் இணையத்திலும், நேரிலும் 2.5 கோடி மக்களுக்கு வேலைகொடுக்கும் என்றும், டாலர் 1.4 டிரில்லியன் மதிப்புள்ள வர்த்தகமாக அதன் வடிவம் மாறும் என்றும் கடந்த வருடம், நாஸ்காம் மதிப்பீடு செய்திருக்கிறது.
Read in : English