Read in : English
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதுபோன்ற திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் போது, பல்வேறு துறைகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த அனுமதிகளைப் பெற்று முன் எச்சரிக்கையாக இருந்திருந்தால் இதுபோன்ற விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள்.
தேரை நிறுத்துவது மற்றும் தேரைத் திருப்புதவற்காகக் கட்டை போடும் பணியில் அனுபவமில்லாதவர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தேரோட்டத்தில் முக்கியமானது தேர் இழுப்பவர்கள் மட்டுமல்ல,. தேரை நிறுத்துவதும் தேரை வேண்டிய திசையில் திருப்புவதற்கும் கட்டைப்போடும் பணியை மேற்கொள்பவர்கள் முக்கியமானவர்கள். தேர் வேகமாக செல்லும் போது கட்டைப் போட்டு அதன் வேகத்தைக் குறைப்பதும், தெருக்களில் திரும்பும்போது, கட்டையைத் தகுந்த மாதிரி போடு எதன் மீதும் மோதாமல் திருப்ப வேண்டியதும் கட்டை போடுவர்களின் கையிலேயே உள்ளது. இதில் அனுபவஸ்தர்கள்தான் கட்டைபோடும் பணியில் இருப்பார்கள்.
களிமேடு கிராமத்து தேரைப் பொருத்தவரை, திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஊர்களில் உள்ள பெரிய தேர்கள் அல்ல. இங்குள்ளது சிறிய தேர். ஆனால் இந்த சிறிய தேரையும் கொண்டு செல்வதற்கு கட்டை போடுவது முக்கியமானது. ஆனால் இந்தத் தேரை நிறுத்துவதற்கும் தேரைத் திருப்புவதற்கும் கட்டைப் போடும் பணியில் அனுபவமில்லாத சிறுவர்கள் ஆர்வத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால், சற்று உயரமான சாலையில் திரும்பும் போது தேரின் மேற்பகுதி, உயர் அழுத்த மின் கம்பி இருப்பது அவர்களது கண்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கக்கூடும். அல்லது அவர்கள் கவனத்திற்கு வந்தபோது தேர் கட்டுக்குள் இல்லாமல் நகர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.
தேரில் உயரமாக இருந்த அலங்காரமும், தேரில் இருந்த அலங்கார மின் விளக்குகளும். தேருக்கு மின்வசதி செய்து தருவதற்கான ஜெனரேட்டரும் இருந்திருக்கிறது. எனவே, உயர் அழுத்த மின் கம்பி மீது தேர் உரசியதும் மின்சாரம் பாய்வதற்குக் காரணமாகி இருக்கிறது. எனவே, தேரோட்டம் நடத்துவதில் இருக்கும் ஆர்வம், தேர் பாதுகாப்பாக செல்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்த விபத்து குறித்து வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் இந்த ஒரு நபர் விசாணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“இதுதேர் அல்ல. சப்பரம்தான். உரிய அனுமதி பெறாமல் தேரோட்டம் நடைபெற்றதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் இந்த ஒரு நபர் விசாணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விசாரணையில், இந்த விபத்துக்கான முழுக்காரணமும் தெரியவரும்.
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி மடம் அமைந்துள்ளது. அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறும். இதையொட்டி செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்கு பின் தேரோட்டம் தொடங்கியது. தேர் என்னவோ சிறியதுதான். ஆனால், அதன் அலங்காரம் உயரமாக இருந்துள்ளது. சாலையைக் கடக்கும்போது அது மின் கம்பிகளைத் தொடாமல் போகுமா என்பது குறித்து திருவிழா நிர்வாகிகள் முன் எச்சரிக்கையாக இருந்ததாகத் தெரியவில்லை.
பூதலூர் சாலையில் இந்தத் தேர் திரும்பும்போது தேரின் அலங்காரப் பகுதி சாலையோரம் இருந்த உயர்மின் அழுத்த கம்பி மீது உரசியதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. முன்பக்கம் தேரைத் தொட்டபடி இருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் மின்சாரம் தாக்கியதும் தூக்கி வீசப்பட்டு பலியாகி உள்ளனர்.
தேர் புறப்பட்ட இடமானது மிகவும் குறுகிய தெருவாகும். அங்கிருந்து வந்து பிரதான சாலையில் இணையும் இடத்தில்தான் இந்த மின் விபத்து நடந்துள்ளது. அத்துடன், தேரின் அலங்காரம் குறித்து அக்கறை கொள்ளும் நேரத்தில், அதன் உயரம் பாதுகாப்புக்கு பாதகமாக இருக்குமா என்பது குறித்து அக்கறை செலுத்தாததும் இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தேரின் மேல் பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் அலங்கார பொருட்களில் உடனே தீப்பற்றி, அடுத்த விநாடி தேரின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஒரு சிலர் சுதாரித்துக்கொண்டு தேரில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் காயங்களுடன் தப்பினர் என்றும் அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்த 5 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும்கூட, ஆனால் அதற்கு முன்னதாகவே 10 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டனர்.
விபத்து நடந்த இடம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி இருந்ததால், 50க்கும் மேற்பட்டவர்கள் தேரை இழுக்காமல் ஒதுங்கி இருந்தனர். இதனால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர். அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருந்திருந்தால் உயிர்ச் சேதம் மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார்கள் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள்.
எந்தத் திருவிழா நடைபெறுவதாக இருந்தாலும், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின் துறை அனுமதி பெற வேண்டும். இந்தத் தேர் திருவிழா குறித்து கோவில் நிர்வாகமும் திருவிழாக் குழுவும் முறையான அனுமதி வாங்கியதா என்பது தெரியவில்லை
தேர்த்திருவிழாவை முன்னிட்டு அந்தப் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் உயர்அழுத்த மின்சாரம் நிறுத்தப்படாமல் இருந்துள்ளது என்கிறார்கள்.
எந்தத் திருவிழா நடைபெறுவதாக இருந்தாலும், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின் துறை அனுமதி பெற வேண்டும். இந்தத் தேர் திருவிழா குறித்து கோவில் நிர்வாகமும் திருவிழாக் குழுவும் முறையான அனுமதி வாங்கியதா என்பது தெரியவில்லை. அதுபோன்ற அனுமதி பெற்றிருந்தால், மின்சார வயர்கள் செல்லும் பாதையில் தேரோட்டம் நடந்து முடியும் வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறைகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அதுபோன்று நடந்திருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்கள்.
நாமக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போதும் இதே போல உயரழுத்த மின் கம்பியில் தேர் உரசி தேர் சேதமானதாகவும், மின் ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும் அண்மையில் செய்தி வெளியானது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைலாசநாதர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்திலும் குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்ப்பேட்டையில் கருப்புலீஸ்வரர்) கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் இதுபோல விபத்துகள் ஏற்பட்டு சிலர் பலியானார்கள்.
இதையடுத்து, தேரோட்டம் நடத்துவதற்கு அரசு சில விதிமுறைகளை அறிவித்தது. அதாவது, தேரோட்டத்துக்கு முன்னதாக பொதுப்பணித்துறையை சேர்ந்தவர்கள் தேரின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து சான்றளிக்கவேண்டும் என்பது உள்ளிட்டவை அந்த விதிமுறைகள். ஆனால் களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது இந்த விதிமுறைகள் கடைப்படிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.
இதுபோன்று மக்கள் அதிமாகக் கூடும் திருவிழாக்களில் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வகையில் தகுந்த விதிமுறைகளை உருவாக்கினால் மட்டும்போதாது அது கடைப்பிடிக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
Read in : English