Read in : English
நாடக உலகில் இந்தியா கண்ட ஆளுமைகளுள் முக்கியமானவர்களுள் ஒருவரும், நமது நாட்டில் உள்ள முக்கிய நாடக ஆசிரியர்களின் படைப்புகளை மட்டுமல்லாமல், உலகப் பிரசித்தி பெற்ற நாடகாசிரியர்களின் படைப்புகளை ஒரு செய்நேர்த்தியுடன் நமக்குக் கொடுத்த தேசிய நாடகப் பள்ளியின் பேராசிரியர் கே.எஸ். ராஜேந்திரன் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி இயற்கை எய்தினார். இவர் பிறந்தது 1952வில்.
Improvisational theatre, அதாவது, அந்த நேரத்தில் சமயத்திற்குத் தக்கபடி வடிவமைக்கப்பட்ட நாடகங்களை இயக்குவதில் சிறப்பு பெற்றவர் . இவர், தொடக்கத்தில், 70களில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நண்பர்களை ஒன்று திரட்டி நாடகம் நடத்தியவர். எண்பதுகளில் சென்னை சோழமண்டல் ஓவியர் கிராமத்தில் பாதல் சர்க்கார் நடத்திய வீதி நாடகப் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களில் ராஜேந்திரனும் ஒருவர். நாடக வெளி என்ற நாடக இயக்கத்தின் மூலம் நவீன நாடகங்களை அரங்கேறச் செய்தவர். நாடகத்திற்கு என்றே பரிவர்த்தனா என்ற அமைப்பை அமைத்தவர். தமிழ்நாடு சரித்திர ஆராய்ச்சிக் கழகம் அளித்த பட்டதாரிகள் ஆதாரவூதியத் திட்டத்தின் (fellowship) கீழ் திராவிட இயக்கங்களும் நாடகமும் என்ற பொருளில் ஆராய்ச்சி மேற்கொண்டார். திராவிட இயக்கங்கள் தொடர்ந்து இவரது உள்ளார்ந்த ஆற்றலை முழுமையாக உபயோக்கிக்கத் தவற விட்டனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
எண்பதுகளில் சென்னை சோழமண்டல் ஓவியர் கிராமத்தில் பாதல் சர்க்கார் நடத்திய வீதி நாடகப் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களில் ராஜேந்திரனும் ஒருவர்.
அதே நேரத்தில், தேசிய நாடகப் பள்ளியில் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா) மூலம் இவர் அளித்த படைப்புகளைப் பார்த்தால் மெய்சிலிர்க்கிறது. பெருமையும் கொள்ள வைக்கிறது. இவர் தற்கால நாடகாசிரியர்கள், பாசன், சிவபிரகாஷ், இந்திரா பார்த்தசாரதி, அம்பை போன்றோரின் நாடகங்களை டெல்லியில் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு தில்லி நாடகச் சூழலில், நடகங்களை நடத்தி புகழ் பெற்றவர். தமிழ்நாடு பெறாத பாக்கியத்தை தில்லி பெற்று விட்டது. இது நிற்க ”தமிழகத்திலிருந்து தில்லி சென்று, அங்கே நாடகத்தில் கோலோச்சுவது எளிதான காரியமல்ல. ஆனால் ராஜேந்திரன் தனது தனித்துவமான பயிற்றுமுறை மற்றும் நாடக ஆக்கங்கள் மூலம் தன்னை வட இந்தியாவில் நிலை நிறுத்திக் கொண்டவர்” என்கிறார் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவரும் போதிவனம் பதிப்பகத்தை நடத்தி வரும் நாடகக் கலைஞர் கருணாபிரசாத்.
“நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?” எனும் ஒரு கேள்விக்கு “இருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லை என்பது தான் ஒரு குறை.” என்று கே எஸ் ராஜேந்திரனே பதிலளித்திருக்கிறார். அந்த எண்ணமும் முழு உண்மையல்ல. நந்தனம் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியுள்ளார். பிறகு கூத்துப்பட்டறையுடன் இணைந்து ந. முத்துசாமியின் கட்டியக்காரன் நாடகத்தை நெறியாளராக நடத்தியிருக்கிறார். பின்னர் மாக்ஸ் ம்யுல்லர் பவன் உதவியோடு ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்டின், வெள்ளை வட்டம் (Cacausian Chalk Circle) என்பதற்கான நெறியாளரும் இவரே. நாட்டிய சாஸ்திரம் இவருக்கு அத்துபடி. நாட்டியமும் இசையும் நாடகத்திலிருந்து பிரிக்க முடியாத அம்சங்கள் என்பது இவரின் மேலான கருத்து.
இவர் மற்ற மொழிகள் அதாவது உருது, சம்ஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகளைக் கற்று அவற்றில் கவனத்தை குவித்ததாலோ என்னவோ தமிழின் பால் அவரது கவனம் ஈர்க்கபடவில்லை.
இவரது பேஸ் புக் பதிவொன்று:
மருத்துவரின் கட்டணமோ உயர உயரப் பறக்கிறது
வக்கீல்களின் கட்டணங்களோ அதிகமாத்தான் இருக்கிறது.
ஆனால் நடிகனாகப்பட்டவன் என்ன செய்ய வேண்டும்?
அனைவரையும் சந்தோஷப்படுத்தி பின்பு மரணத்தைத் தழுவ வேண்டும்.
தமிழ் நவீன நாடகத்துக்கு கே.எஸ். ராஜேந்திரன் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய நாடகப் பள்ளியில் பணியாற்றிய அவரது நாடகப் பங்களிப்பு நாடக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.
Read in : English