Read in : English

பிப்ரவரி 21-ம் தேதி, வீட்டுவசதி வாரியம் தனக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த எளிய வீட்டிலிருந்தபடியே, மதுரையில் நடிகர் கமலஹாசன் துவங்கிய அரசியல் பயணத்தை தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுநர் கேசவன். கொஞ்சமும் தாமதிக்காமல், காங்கிரஸ் கட்சியில் மயிலாப்பூர் பகுதியில் தான் வகித்து வந்த பதவியை விட்டு விலககனார். கேசவன், 90களிலிருந்தே காங்கிரஸ்காரர். மொபைல், இணையம் என தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரியாவிட்டாலும், பக்கத்துவீட்டுக் குழந்தைகளின் துணையுடன், அடுத்த நாளே, மக்கள் நீதி மய்யத்தின் வலைதளத்தில், தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

அலுவலகமாக மாற்றப்பட்ட கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முன்பாக, கேசவனின் ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, இப்போது வழக்கமான காட்சியாகிவிட்டது.கமலஹாசன் சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்டர்கள், மய்யத்தின் உறுப்பினர் பதிவு விவரங்கள், கூடவே ஒலிக்கும்எம்.ஜி.ஆர் பாடல்கள் ஆகியவை சேர்ந்து கேசவனின் ஆட்டோவை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸில், கேசவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதவியில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும், நீண்ட நாட்களாக கமலின் அரசியல் பிரவேசத்துக்காக காத்துக் கொண்டிருந்தவர் கேசவன். விஸ்வரூபம் திரைப்படம் வெளியானபோது எழுந்த சர்ச்சையில், ’நாட்டை விட்டு வெளியேறுவேன்’என கமலஹாசன் கொதித்தபோது, ’இவர் சொந்த கட்சியைத் தொடங்கத்தான் போகிறார்’ என்று தன் நண்பர் ஒருவரிடம் சொல்லியிருந்தார் கேசவன்.

எண்பதுகளில், கேசவனும் அவரது அந்த நண்பரும் டீனேஜில் இருந்தார்கள். விக்ரம் பட ஷூட்டிங் முடித்துவிட்டு, ஆழ்வார்பேட்டை திரும்பிக் கொண்டிருந்த கமலஹாசனின் காரை, ட்ரைசைக்கிள் மிதித்துக்கொண்டே ஆச்சரியமாய் பார்த்தவர்கள். அதற்குப் பிறகு இப்போதுதான். கேசவன் கட்சி உறுப்பினராகவும், கமல் கட்சித் தலைவராகவும் இந்த மார்ச்சில் தான் சந்தித்துக்கொண்டார்கள். ”காங்கிரஸ் தேசிய அளவிலான கட்சிங்கிறதால அதுல இணைஞ்சேன்.

“சின்ன வயசிலேர்ந்தே எம்.ஜி.ஆருக்கும், கமலஹாசனுக்கும் தீவிரமான ரசிகன் நான். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில நான் சேரல. அப்போ பக்குவமில்ல. ஆனா, கமலஹாசன் கட்சி தொடங்க போறார்னு ஒரு சின்ன க்ளூ கெடச்சதும் அவர் கட்சியில தான் நான் சேரப் போறேன்னு முடிவுபண்ணிட்டேன் “என்கிறார் கேசவன்.

“சின்ன வயசிலேர்ந்தே எம்.ஜி.ஆருக்கும், கமலஹாசனுக்கும் தீவிரமான ரசிகன் நான். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில நான் சேரல. அப்போ பக்குவமில்ல. ஆனா, கமலஹாசன் கட்சி தொடங்க போறார்னு ஒரு சின்ன க்ளூ கெடச்சதும் அவர் கட்சியில தான் நான் சேரப் போறேன்னு முடிவுபண்ணிட்டேன் “என்கிறார் கேசவன்.

இயல்பாகவே, திரைப்படக் கதாநாயகர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக பார்க்கும் கேசவன் போன்றவர்கள்தான் கமலஹாசனின் அரசியல் பயணத்திற்கு அடித்தளமானவர்கள். நடிகராக இருந்து அரசியல் தலைவர்களாக மாறிய தனது முன்னோடிகளைப் போலவே, 30 வருடங்களாக தனது நற்பணி மன்றங்களில் இயங்கி வந்த தன் ரசிகர்களையே முன்னணிப் படைத்தளபதிகளாக மாற்றியிருக்கிறார் கமல். இருந்தாலும் கூட, எம்.ஜி.ஆருடன் ஒப்பிடும் தன்மை இங்கேயே நின்றுவிடுகிறது. ”எம்.ஜி.ஆருக்கு அப்போது அரசியல் விருப்பங்களில்லை. புதிய கட்சியை அவர் தொடங்கியாக வேண்டும் என நினைத்தது நாங்கள்தான். ரசிகர்களையோ, திமுகவினரையோ நாங்கள் ஒருங்கிணைப்பதற்கு தேவையே இருக்கவில்லை. ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் எம்.ஜி.ஆருக்கான ரசிகர் படை ஏற்கனவே இருந்தது” என நினைவுகூர்கிறார் முன்னாள் சென்னை மேயரும், அஇஅதிமுகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான சைதை துரைசாமி.

1972 அக்டோபரில், திமுக தலைவரும், அன்றைய முதல்வருமான மு.கருணாநிதி, கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, மக்களின் உணர்வுகள் எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. ”போராடுவதற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தார்கள். ’எம்.ஜி.ஆர் வாழ்க’என்று சொன்னாலோ, வாகனங்களின் ஜன்னல்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாகனங்கள் சாலையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.  போர்க்களம் போன்றதொரு சூழ்நிலை அது. அண்ணாவின் உண்மையான வாரிசாக, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் விருப்பமாக இருந்தது. கட்சியின் பெயரே அனகாபுத்தூர் ராமலிங்கத்தால் (எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர்) பதிவுசெய்யப்பட்டது. அக்டோபர் 17-ல் கொடியேற்றப்பட்டு, கட்சி தொடங்கப்பட்டது” என்றார் துரைசாமி.

“1972 நவம்பரிலிருந்து, எங்கள் தொண்டர்கள் தொகுதிகளைச் சென்று பார்க்கத்தொடங்கிவிட்டனர். கூட்டம் சேர்வதென்பது இயல்பான ஒரு விஷயமாகவே இருக்கும். கட்சியில் சேர்வதற்கான உறுப்பினர் விண்ணப்பத்தைப் பெறுவதில் அவர்களுக்குள் போட்டி ஏற்படும் நிலையில் இருந்தது” என்றார் துரைசாமி. ஆர்.எம் வீரப்பன், கே.ஏ கிருஷ்ணசுவாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள் என மையக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள்தான், கட்சியின் அமைப்பைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை நடத்தினார்கள். தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடம்தான் எனினும், அஇஅதிமுகவின் தொண்டர்களை கமலின் அணுகுவதற்கான சிறிய வாய்ப்புகள் கூட இருப்பதாகத் தெரியவில்லை . மய்யம் தொண்டர்களாகட்டும், அதன் தலைமைக் குழு உறுப்பினர்களாகட்டும், அரசியல் பின்புலங்கள் இல்லாதவர்களே. அரசியலுக்கு வெளியில் இருக்கும் துறையைச் சேர்ந்தவர்கள் மய்யத்தில் இருப்பதால், அரசியலுக்கும் வெளியில் மய்யம் வளர்வதற்கான வாய்ப்புகளைக் காட்டுவதாக இருக்கிறது.

ரசிகர்களின் உணர்வுகள்

மார்ச் 3-ல் இருந்து,  எல்டாம்ஸ் ரோட்டிலிருக்கும் கட்சி அலுவலகத்தை ஒட்டிய சுவர்கள், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அமைக்கப்படும் பூத்துகளாக மாறிவிட்டன. கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் இரண்டாம் தலைமுறை உறுப்பினரான எஸ்.பாலாஜி, அந்த உறுப்பினர் சேர்க்கை பகுதியில் ஒருவராக இருந்தார். கே.பாலசந்தரின் இயக்கத்தில் “வறுமை நிறம் சிவப்பு” கதாபாத்திரத்தில் நடித்த கமலஹாசனின் நடிப்பை பார்த்து வியந்து 1980ல் நற்பணி இயக்கத்தில் சேர்ந்தவர் பாலாஜியின் அப்பா. பல ரசிகர்கள், கமலுடன் தங்களின் தொடர்பை, அவரது திரைப்படப் பெயர்களை வைத்துத்தான் அடையாளப்படுத்துவார்கள்.

இருபது வருடங்களுக்குப் பிறகு, பாலாஜிக்கும் அப்படியான ஒரு தருணம் அமைந்தது. ’அன்பே சிவம்’ படத்தைப் பார்த்துவிட்டு, அதைப் புரிந்துகொள்ள மூன்று முறை பார்க்கவேண்டியிருந்ததாகச் சொல்கிறார் பாலாஜி. பாலாஜி தனியார் வங்கிப் பணியாளர். காலையில் 7 மணிக்குத் தொடங்கும் அவரது கலெக்‌ஷன் வேலை மூன்று மணி நேரம்தொடர்கிறது. 10மணிக்கு இந்த உறுப்பினர் பதிவு கேம்ப்புக்கு வரும் அவர், உறுப்பினர்களை சேர்ப்பது, படிவம் நிரப்புவது அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது என எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்குகிறார். 5 மணிக்கு அலுவலகம் செல்கிறார். வேலை முடிந்து வீட்டிற்குப் போய், மகனுடன் விளையாடுகிறார். ”இப்போல்லாம் பல மணி நேரம் இங்கதான் இருக்கேன். சும்மா பொழுதுபோக்குக்காக கடைசியா எப்போ நேரம் செலவழிச்சேன்னு எனக்கே தெரியல. ஆனா, அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. எனக்கு பெருமையாதான் இருக்கு. ஏன்னா, அவருதான் அடுத்த முதலமைச்சர். அதற்கான முதல் படியாதான், இந்த உறுப்பினர் சேர்க்கையப் பார்க்குறேன்” என்றார்.

இந்த உறுப்பினராக சேர வருகிற பலரும் வயதானவர்கள். பலருக்கு இணைய சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இதுவரை இந்த கேம்ப்பில் சுமார் 8000 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். கட்சி அலுவலகத்துக்கு முன்னிருக்கும் கேம்ப், தினமும் இயங்கிவருகிறது. இது மட்டுமில்லாமல், கேம் நடத்துவதற்கு மாவட்டத் தலைவர்கள் வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள். பொது இடங்கள், சமூகக் கூடங்கள், பூங்காக்கள் என போலீஸ் அனுமதியுடன் இதைச் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். பதிவு செய்திருக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்சி இன்னும் வெளியிடவில்லை. தொடக்கத்தில் இருந்த உற்சாகம் குறைந்ததும், உறுப்பினர் பதிவில் கொஞ்சம் தேக்கநிலை இருக்கிறது. ஆனால், கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர் சேர்க்கை வேலைகளில் தீவிரம் காட்டுகிறார்கள்.

தென் சென்னை மய்யம் தலைவர், கிருபாகரன் சந்திரசேகர் 37 வயதான மென்பொறியாளர். மதுரையில் அப்படியொரு உற்சாகக் கூட்டத்துக்கு நடுவில் மய்யத்தில் பெயரையும் கொடியையும் வெளியிட்டார். ”என் பேர அவர் கூப்பிட்டார். இயக்கத்தோட தென் சென்னை பகுதிக்கு நான்தான்  தலைமை தாங்கப் போறேன்னு அப்போதான் தெரியும். ரொம்ப ஆச்சரியமாவும் பயமாவும் இருந்தது. ஏன்னா எனக்கு அரசியல் தெரியாது” என்று சிரிக்கிறார் கிருபாகரன். கமலஹாசன் நற்பணி மன்றம்/அனைத்திந்திய கமல்ஹாசன் ரசிகர்கள் நற்பணி சங்கத்துக்கு, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். 10 லட்சம் ரசிகர்கள் அதில் இருக்கிறார்கள். அதே அமைப்புதான், ரசிகர் மன்றமாக இருந்து நற்பணி மன்றமாக மாறி, வளரும் ஒரு அரசியல் அமைப்பாக மாறி வருகிறது.

எல்லா ரசிகர்களும், ரசிகர்களின் குடும்பமும் மய்யத்தில் உறுப்பினர்களாகியிருக்கிறார்கள் . ”கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் திராவிடக் கட்சிகளின் அரசியலை ஆதரிப்பவர்கள். கட்சி மாறினால் வரும் வெறுப்பிற்கு பயந்து அவர்கள் மாறாமல் இருந்தாலும், தங்களின் குடும்பங்களில் இருப்பவர்களை இதில் சேர்த்திருக்கிறார்கள்” எனக் கூறினார் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.

மய்யத்தின் அரசியல் என்ன?

ஒவ்வொரு வார இறுதியிலும், காலை 10 மணி முதல் 5 மணி வரை, பொது இடங்களில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து, மக்களுக்காக காத்திருக்கிறார்கள். நாகேஸ்வர ராவ் பூங்காவில், ஏப்ரல் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், கமலஹாசனை ஹிந்துக்களுக்கு எதிரானவர் என திட்டிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணின் பேச்சை புறக்கணித்துவிட்டதாகச் சொல்கிறார் ஓம் பிரகாஷ். ”எல்லா கருத்துக்கும் எதிரானவங்க இருக்கதான் செய்வாங்க. நாங்க யாரையும் வற்புறுத்தல. விருப்பம் இருக்கிற மக்களை சேர்க்கிறதுதான் எங்களுடைய முதன்மையான வேலை” என்கிறார் அவர்.

மய்யத்தில் சேர விரும்புபவர்கள், கமலின் ரசிகர்கள், ஊழலற்ற ஆட்சி அமைந்திட விரும்புபவர்கள் என பலரையும் குறித்த ஒரு பட்டியல் தயாரிப்பு வேலையைச் செய்கிறார்கள் தொண்டர்கள். ”பொத்தாம் பொதுவாக சென்று எவர் கதவையும் தட்டுவதில்லை. ஒவ்வொரு பகுதியிலும், பலருக்கு தெரியக்கூடிய முக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து பேசுகிறோம். இது எங்களின் மீது நம்பிக்கையைக் கூட்டுகிறது. கவனிப்பதற்கு தயாராகிறார்கள்” என்றார்.

மற்ற கட்சிகளில் இருந்து வரும் உறுப்பினர்களை, மய்யம் குறிவைக்கவில்லை என்றாலும், மாநில, தேசிய கட்சிகளிலிருந்து வரும் உறுப்பினர்களை ஊக்குவிக்கிறது மய்யம். ”அரசியலுக்கு கமல் வேண்டும். சினிமாவில் ரஜினி ரசிகர்களாகவே இருப்போம்” என்று சொல்லிவிட்டு மய்யத்தில் இணையும் ரஜினி ரசிகர்களும் இருக்கிறார்கள் என்கிறார் சென்னை மய்யம் தொண்டர் ஒருவர். கமல்ஹாசனின் மேம்பட்ட குழுவில் சேர்வதற்கு பல தரப்பிலிருந்தும் நபர்களை வரவேற்பதாக சொல்கிறது மய்யம்.

கட்சி உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. அரசியலில் அவர்களுக்கு பிடித்த பிரிவைக் கேட்கிறது அந்த கேள்வி. புள்ளியியல், சூழலியல், சட்டம், பெண் முன்னேற்றம், தண்ணீர் மேலாண்மை, விவசாய தொழில்நுட்பம் என 19 பிரிவுகள் அடங்கிய பட்டியல் அது. தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுப்பதுதான் திட்டம் என்று சொல்லப்பட்டாலும், அந்த வேலைகள் இன்னும் தொடங்கவில்லை. கட்சியின் வலைதளமும், மற்ற வகை தொடர்பு விவரங்களும் ஆங்கிலத்திலும், தமிழிலும் இருக்கிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சுற்றறிக்கைகளும், சில நேரங்களில் வெற்றிலை பாக்குகளும் தரப்படுகின்றன. ஓட்டு கேட்கும் நேரத்தில் மட்டுமே வரும் அரசியல்வாதிகளைப் பற்றிய புகார்களை அவர்கள் கேட்கிறார்கள். ”6 மாதங்களுக்கு கமலஹாசனைக் கவனியுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், உறுப்பினராக இருக்கவேண்டாம்” இன்றைய சூழலில் அவரைத் தவிர நம்பிக்கையான ஒருவர் இல்லை என்னும் உறுதியில்தான் நான் மக்களிடம் இப்படிச் சொல்கிறேன் என்கிறார் திருச்சி மய்யம் தலைவர் என்.சுரேஷ்.

இப்போது மய்யத்தை நோக்கி ஈர்க்கப்பட்டவர்களும், தமிழகத்தில் ஆம் ஆத்மி தொடங்கியபோது ஏற்பட்ட சலனத்தையும் கவனித்தவர்களுக்கு, இரண்டும் சகோதரக் கட்சிகளாகவே தெரியும். ”மக்கள் நலனும், ஊழல் ஒழிப்புமே இரண்டு கட்சிகளின் கொள்கை என்றாலும், நகரங்களும் கிராமங்களும் கலந்த தமிழ்நாட்டில் எங்களுடைய வழி தனி வழி” என்றார் தலைமைக் குழு உறுப்பினர் ஒருவர்.

கட்சி உறுப்பினர்கள் சாதாரண டீ ஷர்ட்டுகளில் இருந்தாலும், பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் வழிகளில் வித்தியாசம் இருந்தாலும், புதிய தலைமுறையின் கட்சியாக இதை உருவாக்கும் குறிக்கோள் ஒன்றுதான். கமலஹாசன் இடதுசாரித்தன்மை கொண்டவராக அறியப்பட்டாலும், மய்யம் தொடங்கிய பிறகு நடுநிலைமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். திராவிட இயக்கங்களின் தன்மையுடன், தமிழர் பெருமையுடன், காந்தியின் எண்ணங்களுடன் பயணிக்கிறார். கட்சியின் எதிர்காலத்தை இவ்வளவு விரைவாக கணிக்கமுடியாது என்றாலும், மய்யத்தின் நிலைப்பாடுகளை தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள். “கட்சி, மக்களின் நன்மைக்காகவும், தேவைகளுக்காகவும் நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும் என விரும்புகிறோம்” என 15 பேர்கொண்ட தலைமைக் குழுவில் ஒருவர் தெரிவித்தார்.

“கட்சி, மக்களின் நன்மைக்காகவும், தேவைகளுக்காகவும் நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும் என விரும்புகிறோம்” – 15 பேர்கொண்ட தலைமைக் குழுவில் ஒருவர்

நல்லாட்சியும், ஊழல் ஒழிப்புமே கோட்பாடு என கட்சி பயணித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், தன் அரசியலில்சாதி இருக்காது என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன். 69 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்து, அதில் திருத்தங்கள் செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது மய்யம்.

தண்ணீர், விவசாயம், தொழிற்சாலை, ஆர்.டி.ஐ, கட்சியின் கொள்கை அமைப்பு என இவற்றிற்கெல்லாம் நிபுணர்களின் உதவிகளைப் பெறுகிறது மய்யம். பொது கூட்டங்களிலும், சமூக வலைதளத்தின் வழியாகவும் இதை அவ்வப்போது கமல் தெரிவித்திருக்கிறார்.

விவசாயம், தண்ணீர், விவசாயம் என மிகப்பெரிய விஷயங்களை கையிலெடுத்திருந்தாலும், புதிய செயலியும், கூட்டங்களும் கொசுக்கள், சுகாதாரம், ஊழல் குறித்த விவாதங்களுக்கு ஊக்கமாக அமையலாம். வேரில் பிரச்சனைகள் இருப்பதாலும், மக்களிடம் ஒருவித தொழில்முறையிலான அணுகுமுறையைக் கடைபிடிப்பதாலும், உள்ளாட்சி தேர்தல் மய்யத்துக்கு ஒரு பயனுள்ள சோதனை முயற்சியாக இருக்கலாம்.

Share the Article

Read in : English