Read in : English
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலைசெய்துகொண்டதாகச் செய்தி வெளியாகி மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் அடிப்படையான விஷயங்களைக்கூட இன்னும் கண்டறியவில்லை போல. ஏனெனில், இது தொடர்பாகக் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இதுவரை என்ன கண்டறிந்திருக்கிறது என்றோ என்ன முடிவுக்கு வந்திருக்கிறது என்றோ எந்தத் தகவலும் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை.
மாணவியின் மரணம் தொடர்பாக விசாரிக்கப் பணிக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இது ஒரு தற்கொலை என்ற முடிவுக்குவந்திருக்கிறதா? நடந்தது தற்கொலை எனில், அதற்கான சான்றுகள் உள்ளன எனக் காவல் துறை கருதுகிறதா? தற்கொலை இல்லை எனில், இந்த வழக்கில் கொலைக்கான சாத்தியம் உள்ளது என்னும் கோணத்தில் என்ன வகையான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
எந்தவிதமான விவரமும் தகவலும் காவல் துறையால் அளிக்கப்பட்டிருக்காத நிலையில், ஊடகம், குறிப்பாக யூடியூப் அலைவரிசைகள் சம்பவ இடத்துக்குச் சென்று தாங்கள் அறிந்த விவரங்களை, தொடர்ந்து சில வாரங்களாக, வெளியிட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, நிகழ்ந்த மரணம் தற்கொலைதானா எனச் சந்தேகத்தைக் கிளப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின.
காவல் துறை முழு விவரத்தை வெளியிடாதபோது, இந்தச் சம்பவத்தில் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் உள்ள யாரோ இருக்கலாமோ அவர்களைக் காவல் துறை மறைக்க முயல்கிறதோ என்னும் சந்தேகத்துக்கு அது வழிவகுக்கிறது. சமூக ஊடகங்கள் இந்தச் சம்பவத்தில் அதிக அக்கறை காட்ட இது ஒரு உந்து சக்தியாகத் தோன்றுகிறது. அது தொடர்பாகக் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பள்ளி நிர்வாகத்தினரின் நடத்தை தொடர்பான விஷயங்களைச் சொல்லலாம். புலன் விசாரணையிலிருந்து தப்பிக்க முயலும் வகையிலான பள்ளி நிர்வாகத்தினரின் தொடர்புகள் உள்ளன என்பதைச் சொல்வதற்காக அவர்களுக்கு உயர்மட்டத்துடனும் காவல் துறையுடனும் இருக்கும் தொடர்புகள் தூர்வாரப்படுகின்றன.
எந்தவிதமான விவரமும் தகவலும் காவல் துறையால் அளிக்கப்பட்டிருக்காத நிலையில், ஊடகம், குறிப்பாக யூடியூப் அலைவரிசைகள் சம்பவ இடத்துக்குச் சென்று தாங்கள் அறிந்த விவரங்களை, தொடர்ந்து சில வாரங்களாக, வெளியிட்டு வருகின்றன
கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தின் பின்னணியில் சாதிய உள்நோக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பள்ளி வளாகத்தில் ஜூலை 17 அன்று நிகழ்த்தப்பட்ட கலவரத்துடன் தொடர்புகொண்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையின்போது, பட்டியலினத்தோரைக் குறிவைத்துக் கைதுசெய்ததாகக் காவல் துறை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஒரு பத்திரிகைக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த வழக்கை அனைத்துக் கோணங்களிலும் தாங்கள் புலனாய்வுசெய்வதாகக் குறிப்பிட்டுள்ளது. மாண்புமிகு சென்னை சென்னை உயர்நீதிமன்றம் இந்த விசாரணையைக் கண்காணித்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் இது தொடர்பாக அவர்களது சொந்தக் கருத்துகளையும் அறிக்கைகளையும் கொணொலிக் காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், புலன் விசாரணையில் ஈடுபட்டும் வருகிறார்கள் என்றெல்லாம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படியான நடவடிக்கையால் புலனாய்வுத் துறையினரின் புலன்விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க:
கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்?
கள்ளக்குறிச்சி வழக்கு: மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை?
புலன்விசாரணையைப் பாதிக்கும் படியான எந்தவிதமான அறிக்கையையும் காணொலியையும் எவரும் ஊடகங்களிலோ சமூக ஊடகங்களிலோ வெளியிட வேண்டாம் என்றும் அந்த அறிக்கை கோருகிறது. அப்படி யாராவது தனிநபரோ நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அவர்களது யூடியூப் அலைவரிசையும் இணையதளக் கணக்கும் சட்டரீதியாக முடக்கப்படும் என்று தெரிவிக்கும் அந்த அறிக்கை, இது தொடர்பாக யாருக்காவது உரிய தகவல் கிடைத்தால் உடனடியாகக் காவல்துறையிடம் அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஒரு கைப்பேசி எண்ணையும் தந்திருக்கிறது.
இப்படியான தடை உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானதாகவும் அடிப்படையான பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானதாகவும் தெரிகிறது. இதனால் பல கேள்களும் எழும்புகின்றன. சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான விலாவாரியான செய்திகள் மூன்று வாரங்களாக வெளியிடப்பட்டுவருகின்றன. ஆனால், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இத்தனை நாள்களுக்குப் பிறகு இப்போது தான் எதிர்வினையாற்றுகிறது. எந்தத் தனிமனிதரோ ஊடக நிறுவனமோ புலனாய்வுத் துறையின் புலனாய்வுக்கு ஊறுவிளைவித்தால், இப்படியொரு பொதுவான தடை உத்தரவை வெளியிடுவதைவிட த் தங்களது அதிகாரத்தின் படி சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்க முடியுமே?
ஊடகங்கள் காவல்துறையைவிட விரைவாகப் புலனாய்வுசெய்கிறதெனில், காவல்துறையே அதைச் செய்திருக்க முடியுமே. ஊடகங்களின் ஏதாவது ஒரு செய்தியறிக்கை அல்லது காணொலி குறித்து அது உண்மையானதா, பொய்யானதா, சிக்கலைத் தூண்டிவிடும் வகையிலானதா என்ற முடிவுக்குக் காவல் துறையால் வரமுடியவில்லை என்றால், காவல் துறை அதன் புலனாய்வை முடுக்கி, அது குறித்த உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுதான் சரியான செயலாக இருக்கும். ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல் துறையிடம் வந்து சொல்லுங்கள் என்று பொதுச் சமூகத்திடம் கூறினால், அதற்கான அமைப்பு இன்னும் சரியான அளவில் விசாரணை நடத்தவில்லையோ என்ற தோற்றத்தையே உருவாக்கும்.
இப்படியான தடை உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானதாகவும் அடிப்படையான பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானதாகவும் தெரிகிறது. இதனால் பல கேள்களும் எழும்புகின்றன. சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான விலாவாரியான செய்திகள் மூன்று வாரங்களாக வெளியிடப்பட்டுவருகின்றன
அரசு நிறுவனங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் என்பவை குருடர் யானையைப் பார்த்தது போலத்தான். உரத்த குரலெழுப்பும் தன்மை, உண்மையைக் கண்டறிவதில் இருக்கும் குறைபாடு, முழுமைபெறாத நம்பகத்தன்மை ஆகியவை காரணமாக அவை தரும் தகவல்களை முழுமையானவையாகக் கொள்ள முடியாது. அப்படிச் சொல்லும் அதே நேரத்தில், கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்களில் போதுமான தகவல்கள் வெளிவந்துள்ளன, அவை காவல் துறைக்கு ஒரு நெருக்கடியைத் தந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
சில குறிப்பிட்ட ஊடகங்களில் விருப்பத்துடனோ பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்துடனோ பொய்யான தகவல் பரப்பப்பட்டால் அப்படியான ஊடகங்களை முறையாகக் கையாள வேண்டுமே ஒழிய இப்படி ஒட்டுமொத்தமாக ஊடகத்தைப் போர்வை போட்டு மூட முயல்வது சரியாக இருக்குமா? குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் இந்த நடவடிக்கை ஒரு பொதுவிதியாக மாறிவிட்டால், தனிநபராலோ ஊடகத்தாலோ எந்த வழக்கு தொடர்பாகவும் எந்த விசாரணையையும் மேற்கொள்ள இயலாமல் போய்விடும். ஏனெனில், அப்படியான விசாரணை தங்கள் விசாரணைக்கு ஊறுவிளைவிக்கும் என்று அதிகாரிகள் எப்போதும் சொல்லும் நிலை வந்துவிடும். அந்த வகையில் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் இந்த உத்தரவு ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும்.
Read in : English











