Read in : English
பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார். 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் என்றும் அறிவித்தார். இது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
அதையடுத்து வங்கிகளில் அந்தப் பணத்தைக் கொடுத்து மார்றுவதற்கு கூட்டம் அலைமோதியது. அந்த சமயத்தில் வங்கிகளில் போட்ட தங்களது பணத்தையே எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடினார்கள். சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் வர்த்தகம் இன்னமும் மீளவில்லை. மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மோடி கூறியதுபோல, நமது நாடு கறுப்புப் பணம் இல்லாத நாடாக மாறிவிட்டதா என்பது தெரியவில்லை. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த லாபம் என்ன என்று இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.
இதற்கிடையில் தமிழ்த் தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்-4 நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, பொங்கல் தினத்தன்று நகைச்சுவை ரியாலிட்டி ஷோ நடந்தது. Õவடிவேலு நடத்த பிரபலமான திரைப்படமான 23ஆம் புலிக்கேசிப் படத்தில் உள்ளதைப் போல வடிவேலு நடித்த புலிக்கேசி மன்னர் வேடத்தில் ஒரு குழந்தையும் அவரது மதி மந்திரியான மங்குனி அமைச்சர் வேடத்தில் மற்றொரு குழந்தையும் நகைச்சுவையாகப் பேசி நடித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லாமலே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுப் பயணங்கள், விவசாயிகள் பிரச்சினை, கருப்புப் பணத்தை மீட்டு எடுத்து மக்களுக்கு வழங்குதல்… இப்படி பல்வேறு விஷயங்களை அந்தக் குழந்தைகள் குறிப்பிட்டு பகடி செய்தனர்.
அந்தக் குழந்தைகளின் நகைச்சுவையான கிண்டல் பேச்சு பார்வையாளர்களிடம் கரவொலி ஏற்படுத்தியது. அத்துடன், இந்த நகைச்சுவைக் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பியதாக ஜீ தமிழ் தொலைக் காட்சி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக தொழில்நுட்பப் பிரிவு அந்தத் தொலைக்காட்சி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியது. Ðபாஜக நிர்வாகிகளும் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
கார்ட்டூன்கள் என்கிற கருத்துப்படங்கள் கிண்டல் செய்வதற்காகவே உருவான ஒரு ஊடக வடிவம். இந்தக் கருத்துப் படங்களில் அனைத்து அரசியல் தலைவர்களும் கிண்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
எம்ஜிஆர் முதல்வராகவும் பி.எச். பாண்டியன் சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்தபோது சட்டப்பேரவை குறித்து ஆனந்தவிகடனில் வெளியான கார்டூனுக்காக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர், இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அவருக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது.
அந்தக் காலத்தில் மகாத்மா காந்தியை கிண்டல் செய்து கார்ட்டூனிஸ்ட் சங்கர் வரைந்த ஓவியங்கள் பிரபலம். அதைப் பார்த்து, சிரித்துவிட்டு அதைக் கடந்து போய்விட்டார்கள். ஆனால், சிறிய கிண்டலைக்கூட சகித்துக் கொள்ள முடியாத மனோநிலை தற்போது நிலவுகிறது. தனிநபர் அவதூறுகூடாதுதான். ஆனால் விமர்சனம் செய்யக்கூடாதா என்ன?
இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த சர்ச்சை எழும் இந்த நேரத்தில், ஜீ டிவியின் நிறுவனர் சுபாஷ் சந்திரா கோயங்கா என்பதும் இவர் பாஜக மாநிலங்களவை உறுப்பினரும்கூட. என்பதும் ஞாபகத்துக்கு வருகிறது.
Read in : English