Site icon இன்மதி

தமிழர்-தெலுங்கர் பாகுபாடு: சிக்கலில் வாரிசு!

Read in : English

நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே அரசியல் களத்தில் பெரும் பிரச்சினையாவது புதிதல்ல. ஆனால், இந்த முறை அவர் நடித்த‘வாரிசு’ ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாநிலங்களுக்கு இடையிலான மோதலாகப் புதிய வண்ணம் தீட்டப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனராக அறியப்படுபவர் வம்சி பைடிபல்லி. கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’ படத்தை தமிழிலும் தெலுங்கிலும் இயக்கியவர். இவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படமே ‘வாரிசு’. இது தமிழில் தயாரானாலும் தெலுங்கிலும் ‘டப்’ செய்து வெளியிடப்படவுள்ளது.

‘பொங்கல்’ வெளியீடாக வந்தால் அதனைத் தொடர்ந்துவரும் விடுமுறைக் காலத்தில் நல்ல வசூலை அள்ளிக் குவிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவதைப் போல, அதே நாளில் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் மகா சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. சமீபத்தில் மகா சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்களில் நேரடியான தெலுங்குப் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த அறிவிப்பால்‘வாரிசு’படம் வெளியாவதில் தடை உருவாகியுள்ளது.

பொங்கல் வெளியீடாக  ‘வாரிசு’ வந்தால் விடுமுறைக் காலத்தில் நல்ல வசூலை அள்ளிக் குவிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது

‘வாரிசு’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் பிரமாண்டமாக வெளியீட்டு வசூலைக் குவிக்கத் திட்டமிட்டுள்ளார். விஜய் படத்தை பொங்கலன்று வெளியிட்டால் அசல் தெலுங்கு படங்களான சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ , பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ம ரெட்டி’ஆகியவற்றுடன் மோதும் சூழல் ஏற்படும். அதனால் திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்று தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சங்கராந்தி மற்றும் தசராவின் போது அசல் தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற ஒப்பந்தம் 2019ல் போடப்பட்டதாகவும், அப்போது அதற்கு‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் சம்மதித்தார் என்று தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் படிக்க: துணிவு Vs வாரிசு: வெடிக்கும் சரவெடி!

தெலுங்கு தயாரிப்பாளர்களின் முடிவை எதிர்த்து தமிழ் தேசியக் கட்சிகள் அதே வழியில் தமிழ்நாட்டில் பதிலடி கொடுப்பதாக மிரட்டியுள்ளன. இது‘வாரிசு’ சினிமா வெளியீட்டுப் பிரச்சினையை தமிழருக்கும் தெலுங்கருக்குமான மோதலாக மாற்றியுள்ளது.

ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் தமிழ் திரைப்படங்களுக்கு எதிரான இனப்பாகுபாடு வெளிக்காட்டப்படுவதாக தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

“இது நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் பிரச்சினை அல்ல. அடுத்தடுத்து வரும் தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிராக ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடு. நேரடித் தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரைப்படங்களோ. மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழித் திரைப்படங்களோ எதுவாகிலும் தமிழ்நாட்டில் எவ்விதப் பாரபட்சப் போக்குகளும் கட்டுப்பாடுகளும் இல்லை”என்று கூறியுள்ளார்.

“கலைக்கு மொழி, இனம் இல்லை என்று கூறுகின்றனர். அதனை நாங்கள் இன்னும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்”என்ற வேல்முருகன் இந்த முடிவை தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற மறுத்தால் பிற மொழிப் படங்களை தமிழகத்தில் திரையிட முடியாது என்று எச்சரித்துள்ளார்.

‘வாரிசு’ படத்தை வெளியிட்டால் அசல் தெலுங்கு படங்களான  சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ , பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ம ரெட்டி’ஆகியவற்றுடன் மோதும் சூழல் ஏற்படும்

இதேபோன்ற எச்சரிக்கையை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஏற்கனவே விடுத்திருந்தார், தமிழகத்தில் பல தெலுங்கு படங்கள் தடையின்றி வெளியிடப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியதோடு, தமிழ்நாட்டில் ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘புஷ்பா’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் வெளியானபோது, பார்வையாளர்களின் வரவேற்பைப் பொறுத்துதான் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன என்றும், மொழிவாரியாகப் பாகுபாடு காட்டப்படவில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டிலுள்ள திரைப்படக் கலைஞர்கள் சங்கம் இன்றும் தங்களை ‘தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கம்’ என்றே அழைப்பதை சுட்டிக்காட்டிய சீமான், தெலுங்கு தயாரிப்பாளர்களின் இந்த முடிவு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தென்னிந்திய ஒருமைப்பாட்டை இன்னும் வலியுறுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: தி.மு.க. வின் பெரு வெற்றியிலும் பா.ம.க. வும், விஜயும் தவிர்க்கமுடியாத சக்திகளாகியது எப்படி?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை‘வாரிசு’ பட வெளியீட்டில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து உள்ளூர் அரசியல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

விஜய் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்பட விநியோக உரிமையை வாங்கிக்கொண்டு தமிழ் திரைப்பட உலகைத் தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் சி ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் படங்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொள்ளும் உதயநிதி, அதன் மூலம் விஜய் படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறார் என்றும் அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

விஜய்யின் வளர்ச்சியை உதயநிதி தடுக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாளேடான ‘நமது எம்ஜிஆர்’கூட அதே குற்றச்சாட்டை வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் நவம்பர் 20ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டதாக எழுதியுள்ளது.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து ‘வாரிசு’ வெளியீட்டில் உள்ளூர் அரசியல் ஏற்கனவே தொடங்கிவிட்டது

இந்த ஆலோசனையில் உதயநிதியுடன் தனக்கு ஏற்பட்டுள்ள மோதலைப் பற்றி விஜய் பேசியதாகவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்த்து விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுவது பற்றி விவாதம் நடந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் விஜய்படங்களின் விநியோக உரிமையை உதயநிதி பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், திரையரங்குகளின் எண்ணிக்கையை குறைத்து தனது சொந்த லாபத்தை ஏன் அவர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை செய்ததும் உண்மை என்றபோதும், அப்போது என்ன பேசப்பட்டது என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உள்ளூர் அரசியலாகத் தொடங்கி மாநிலங்களுக்கு இடையிலான அரசியலாக மாற்றம் பெறக் காரணமாயிருக்கிறது விஜய் நடித்த திரைப்படம். இதே பரபரப்பு படத்திலும் இருக்குமா என்பது‘வாரிசு’ வெளியான பின்புதான் தெரியும்.

Share the Article

Read in : English

Exit mobile version