Site icon இன்மதி

கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி

கோலாரிலும், கோலார் தங்க வயல்களிலும் 60 விழுக்காடு தமிழர்கள் இருக்கிறார்கள். மேலும் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்பேசும் தெலுங்கர்கள் 20 விழுக்காடு இருக்கிறார்கள்.

Read in : English

கேஜிஎஃப் என்னும் கோலார் கோல்ட் ஃபீல்டு (கோலார் தங்க வயல்கள்), தமிழர்கள் வாழ்க்கைமீதும், வாழ்வளிக்கும் உழைப்பின்மீதும் தீராத்தாகம் கொண்டவர்கள் என்பதின் நிரந்தர சாட்சி

பொதுவாக, தமிழர்கள் மீது ஒரு நன்மதிப்பு கர்நாடகம் முழுக்க உண்டு. ”நிலவுக்கு அனுப்பப்பட்டால்கூட அங்கேயும் ஒரு மாநகரத்தை உருவாக்கும் மகாவலிமை கொண்டவர்கள் தமிழர்கள்” என்று சொல்லும் அளவுக்குத் தமிழினத்தைப் போற்றுபவர்கள் கன்னடர்கள்.

கன்னட சூப்பர்டூப்பர் ஹிட்டான ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ திரைப்படம் கலாச்சாரக் கீர்த்திமிகு தமிழ் உணர்வைப் பிரதிபலிக்கிறது; தமிழ்வம்சாவளி மக்களைத் தூக்கிப்பிடித்து அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டுகிறது படம். வசூலில் பாலிவுட் திரைப்படங்களையும் தாண்டி அந்தப் படம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சட்டப்பிரிவு 370 ஒழிக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்கொண்டு அடியோடு அழிக்கும் வாய்ப்பு இந்திய அரசுக்கு உருவாகியிருக்கிறது. அதற்காகத் தமிழர்கள் அங்கே சென்றால் நல்லது என்ற கருத்துக்களால் சமூக வலைத்தளங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

தமிழ் தொழிலாளர்கள் இல்லையென்றால், பாரத் சுரங்க நிறுவனத்தால் நூறாண்டு வயது கொண்ட கோலார் தங்க வயல்களை நடத்தியிருக்க முடியாது

“அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் தீவிரமாகப் பின்பற்றுவதால் இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று உழைத்து மற்றவர்களையும் முன்னேற்றி நாங்களும் முன்னேறுகிறோம்,” என்கிறார் தமிழ்வாணன். கோலாரில் பணிபுரியும் தொழிலாளர் ஒப்பந்தத்தாரர் அவர். கோலார் தங்க வயல்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுரங்கத்தொழிலாளர்களை சந்தூர் இரும்புச் சுரங்கங்களுக்குப் பணிநிமித்தம் கொண்டுசென்றதில் பெரும்பங்கு வகித்தவர் அவர்.

மேலும் படிக்க:

மெட்ரோ ரயில் மூலம் இனி கர்நாடகம், தமிழ்நாடு இணையும்

தெலங்கானா போலீஸ் என்கவுண்டர்: உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறதா `”ஜன கண மன’ திரைப்படம்?

கர்நாடகத்தில் அதிகமாக தமிழர்கள் வசிக்கும் நகரம்
கர்நாடகக் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல்கள் (கேஜிஎஃப்) மிக அதிகமான தமிழ் மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது. தமிழகம் தாண்டி நாட்டின் எந்தப் பகுதியிலும் இவ்வளவு அதிகமான தமிழ்மக்கள் வசிக்கவில்லை. அவர்கள் குடிவந்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆனால், “அந்தக் காலத்தை நாங்கள் கடந்துவிட்டோம். கோலாரை நாங்கள் எங்கள் வீடாக ஏற்றுக்கொண்டோம்.

எங்களில் சிலர் இங்கே தங்கச்சுரங்க வேலைகள் குறைந்தவுடன் பெல்லாரிக்குக் குடிபோய்விட்டனர். எங்கள் கன்னட சகோதரர்களும் எங்களை அவர்களில் ஒன்றாகப் பாவிக்க ஆரம்பித்துவிட்டனர். எந்த இடைஞ்சல்களும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சமூகம் வளர்ந்துகொண்டிருக்கிறது,” என்கிறார் கோலாரில் வசிக்கும் தமிழரான முருகராஜன்.

கேஜிஎஃப் சாம்பியன் தங்கச்சுரங்க வாயில். தமிழ்த் தொழிலாளிகள் தங்கச்சுரங்கத் தொழிலை அரசுக்கு லாபம் தரும் தொழிலாக மாற்றினார்கள்.

வழக்குரைஞர் விக்ரமாதித்தன் 1998-2004 காலகட்டத்தில் கேஜிஎஃப்-ஃபில் பாரத் தங்கச்சுரங்கங்கள் என்னும் நிறுவனத்தை மீட்டெடுக்கப் போராடியவர். அவர் கேஜிஎஃப்-ஃபின் அன்றைய பாஜக தலைவர். தொழிலாளர்களின் எண்ணிக்கையை 3,500-லிருந்து 2,500-ஆக குறைக்க ஒப்புக்கொண்டால், சுரங்கங்களை மீட்டெடுக்கத் தயார் என்று இந்திய அரசாங்கம் அப்போது சொன்னது. ஆனால் 19 தொழிற்சங்கங்கள் அதை நிராகரித்தன. ஆட்குறைப்பிற்குத் தொழிலாளர்கள் சம்மதித்தால், சுரங்கங்கள் மீட்டெடுப்பு முன்மொழிவு தொழில் மற்றும் நிதி மீளுருவாக்க வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது.

ஆனால் நிலைமை இழுபறியானது. ஆனால் 2002-லும், 2007-லும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்பது பரிதாபகரமானது. “பாரத் நிறுவனத்தை எளிதாக மீட்டெடுத்திருக்க முடியும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லமுடியாது. அரசு மறுசீரமைப்பு மற்றும் மீட்டெடுப்புத் திட்டத்தை இரண்டு தடவை அறிவித்தது. ஆனால் 19 தொழிற்சங்கங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

கேஜிஎஃப் சாப்டர் 2’ திரைப்படம் கலாச்சாரக் கீர்த்திமிகு தமிழ் உணர்வைப் பிரதிபலிக்கிறது; தமிழ்வம்சாவளி மக்களைத் தூக்கிப்பிடித்து அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டுகிறது

அதன் விளைவாக 2002-ல் கொண்டுவரப்பட்டது வீஆர்எஸ் (தன்னார்வ ஓய்வுத் திட்டம்). அதை 50 விழுக்காடு தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பெரும்பாலான தமிழ் தொழிலாளர்கள் 2007-ல் அதை ஏற்றுக்கொண்டு வாழ்வாதார இழப்புக்கு ஆளானார்கள்,” என்கிறார் அவர்.

அபூர்வமான தங்கச்சுரங்கத் தொழிலாளர்கள்
தமிழ் தொழிலாளர்கள் இல்லையென்றால், பாரத் சுரங்க நிறுவனத்தால் நூறாண்டு வயது கொண்ட கோலார் தங்க வயல்களை நடத்தியிருக்க முடியாது. “ஆயிரக்கணக்கான அடிகள் தாண்டி பூமிக்குள் இறங்கி 55 பாகை வெப்பநிலையில் உயிரைப் பணயம் வைத்து யார் வேலை செய்வார்கள்? செய்தார்கள் தமிழ் தொழிலாளிகள்; செல்வம் கொழித்தார்கள் முதலாளிகளும் அரசும். தேவைப்பட்ட மொத்தம் 3,500 பேருக்குப் பதில் 2,500 தொழிலாளர்கள் மட்டுமே போதும் என்று சொன்ன தொழில் மற்றும் நிதி மீளுருவாக்க வாரியம் மிச்சப்பட்டவர்களுக்கு விஆர்எஸ் என்ற பெயரில் கொடுத்த பணம் இருக்கிறதே அது 2007-ன் விலைவாசிப்படி மிகமிக அற்பம்,” என்கிறார் விக்ரமாதித்தன்.

இப்போதும்கூட ராபர்ட்சன் பேட்டையிலும், ஆண்டர்சன் பேட்டையிலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் அவரது போஸ்டர்கள் தவறாமல் ஒட்டப்படுகின்றன

கோலாரிலும், கோலார் தங்க வயல்களிலும் 60 விழுக்காடு தமிழர்கள் இருக்கிறார்கள். மேலும் வடஆற்காடுப் பகுதியில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்பேசும் தெலுங்கர்கள் 20 விழுக்காடு இருக்கிறார்கள். சுரங்கத் தொழிலாள வர்க்கத்தில் ஆகச்சிறந்தவர்கள் தமிழர்கள்தான் என்று பாரத் நிறுவனத்தின் மேனாள் நிர்வாக இயக்குநர் ஒருவர் சொல்லியிருக்கிறார். கோவா இரும்புச் சுரங்கம், பீகார் நிலக்கரிச் சுரங்கம், சந்தூர் மாங்கனீஸ் சுரங்கம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களை தமிழ் தங்கச்சுரங்கத் தொழிலாளிகளோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு தடவையும் சுரங்க ஆழத்திற்குள் இறங்கினால் மேலே திரும்புவது நிச்சயமில்லை என்ற அபாயத்திலேதான் தமிழ்த்தொழிலாளிகள் வேலை செய்கிறார்கள்.

சிலர் பல ஆண்டுகளாக இந்த வேலையில் இருக்கிறார்கள். சம்பளம் என்ற முறையிலோ, ஆபத்து மேலாண்மை நிதி என்ற முறையிலோ, அரசு வாரியம் கொண்டுவந்த சுரங்க மீளுருவாக்கத் திட்டம் தமிழ்த் தொழிலாளிகளுக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. அது ஒரு மிகப்பெரிய குறைபாடு.

Share the Article

Read in : English

Exit mobile version