Site icon இன்மதி

தமிழர்களை விட மலையாளிகள் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

India Today's Happiness Index ranks Kerala and Tamil Nadu in one and third places respectively.

Read in : English

`இந்தியா டுடே’ சஞ்சிகை  அதன் சமீபத்திய இதழில், வருமானம், சுகாதாரம், ஆட்சி நிர்வாகம், எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் போன்ற பல்வேறு  அளவுகோல்களின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை தரவரிசைப் படுத்தி இருக்கிறது. அவற்றில் தனித்துத் தெரியும் ஓர் அளவுகோல் மகிழ்ச்சிக் குறியீடு ஆகும். கேரள மாநிலம்தான் இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் என அந்தக் குறியீடு தெரிவிக்கிறது. அதற்கு தொலைவில் இரண்டாவது இடத்தில் இருப்பது குஜராத்.  நெருக்கமாக அதற்கு அடுத்து வருவது தமிழ்நாடு. ஒரு சராசரி மலையாளி, ஒரு சராசரி தமிழனைவிட அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கேரளாவில் தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதையும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்திகளையும், கேரளத்தில் நிலவும் போதைப் பொருள் பழக்கத்தைப் பற்றியும் பார்க்கத்தான் நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமே தவிர வேறு வகையில் சிந்திப்பதற்கு அல்ல.Pic credit: Pixabay

‘இந்தியா டுடே’ இதழில் இணைந்து வந்துள்ள கட்டுரையானது, மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவது கடினமானது என்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் மகிழ்ச்சியின்மைக்கு நிச்சயமான காரணங்கள் இருப்பதை யூகிக்கலாம் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் காரணங்கள் அறிவுக்குப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. உதாரணமாக , கடன் பிரச்சினை நமது மகிழ்ச்சியை போக்கிவிடும்.  அப்படித்தான் வேலை இல்லாமல் இருப்பதும், போதிய வருமானம் இல்லாமல் இருப்பதும்.  மோசமான உடல்நிலை இருப்பதும். நிச்சயம் நம்மை மகிழ்ச்சி அற்றவர்களாக ஆக்கிவிடும்.

அதே போல, மோசமான ஆட்சி நிர்வாகம் நம்மை எரிச்சலடையச் செய்யும். நல்ல சாலைகள் இல்லாமல் இருப்பது போன்ற மோசமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் நமக்கு எரிச்சலூட்டும். தெருவில் இறங்கி நடந்து செல்லும்போது நம்மை யாரேனும் வழிப்பறி செய்ய நேரலாம் என்றால், அந்த பயமே  நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சட்டம், ஒழுங்கு நிலை சீர்கெடுவதும் கூட நம்மை பாதுகாப்பற்றவர்களாக ஆக்கும். அதுவே நாம் மகிழ்ச்சியாக இருப்பதைத் தடுக்கும்.

இந்தக் குறியீடுகளில் ஒரு மாநிலம் சிறப்பாக இருக்கும் எனில், அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது என இந்த சர்வே குறிப்பிடுகிறது. மகிழ்ச்சி அற்ற நிலைக்குப் போதிய காரணங்கள் இல்லை என்றால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என இந்த சர்வே கருதுகிறது.

இருண்ட வானிலை விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இடைவிடாத மழையையும், மேகமூட்டத்துடன் கூடிய வானத்தையும் கொண்ட வானிலை பிரிட்டன் மக்களின் மனநிலைக்கு காரணமாகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ஏற்பட்ட மன அழுத்தமானது, பிரிட்டிஷ் மக்களது துன்ப துயரங்களின் குறியீடே தவிர, அவரது மன நலக் குறைவு அதற்குக் காரணம் அல்ல.

காலனி நாடுகளில் இருந்து கொள்ளையடித்த செல்வத்தில் வாழும் பிரிட்டிஷ்காரர்கள், வருத்தமாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று மலையாளியான சசி தரூர் கூறியிருக்கிறார். சாமானிய மக்கள் தங்களைத் தாங்களே நேசித்துக் கொள்ள வேண்டியது அவசியம். யோகாவும், தியானமும்  அவர்களது மன நலத்தை பராமரிக்கும்.

எனினும், இந்தியா டுடே சர்வேயானது அகநிலை அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை. அநேகமாக அது இங்கிலாந்து நாட்டைத்தான் மிகவும் மகிழ்ச்சியான நாடு என தரவரிசைப்படுத்தி இருக்கும்.

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

எப்படிப் பார்த்தாலும், வானிலையைப் பொருத்தவரையில் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை. இரண்டு மாநிலங்களுமே வெய்யில் அதிகமுள்ள மாநிலங்கள்தான். என்றாலும் கேரளாவில்  பருவமழை தவறாமல் வழக்கமாக பெய்யும் நிலை அதிகம். ஆனால் தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் குளிர்காலத்தில் மழை வெள்ளம் பெரும் சேதம் ஏற்படுத்துகிறது.

  வேலைக்காக ஒரு மலையாளி கேரளாவை விட்டு வெளி மாநிலத்துக்கு சென்றால், வெகு சீக்கிரமே மேலும் பல மலையாளிகளை அவர் அங்கு வேலைக்குக் கொண்டு போய்விடுவார்.

இரு மாநிலங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. வேலைக்காக ஒரு மலையாளி கேரளாவை விட்டு வெளி மாநிலத்துக்கு சென்றால், வெகு சீக்கிரமே மேலும் பல மலையாளிகளை அவர் அங்கு வேலைக்குக் கொண்டு போய்விடுவார். வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கிராமங்களிலும் நகரங்களிலும் அருகமைந்த பகுதிகளைச் சேர்நத மலையாளிகளுக்கு இடையே வலுவான சமூகப் பிணைப்புகள் உண்டு. உள்ளூரில் உள்ள இடதுசாரித் தோழர் சமூகத்துக்கு பாலமாக செயல்படுகிறார். சாதி, மதங்களைக் கடந்து உறவுகளை ஏற்படுத்தி சேவை செய்கிறார். இதுதான் கேரளாவுக்கு வெளியிலும்கூட மலையாளிகளை  ஒன்றாக வைத்திருக்கிறது.

  சக்தி வாய்ந்த உள்ளாட்சி அமைப்புகள், முக்கியமான விஷயங்களை செயல்படுத்துவதற்கு மலையாளிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளன. இது சமூகத்தினர் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி உள்ளது.

சக்தி வாய்ந்த உள்ளாட்சி அமைப்புகள், முக்கியமான விஷயங்களை செயல்படுத்துவதற்கு மலையாளிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளன. இது சமூகத்தினர் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டியதை மத்திய சட்டம் கட்டாயம் ஆக்கியிருந்தபோதிலும், மாநில மட்டத்துக்கு அப்பால் அதிகாரத்தை பரவலாக்குவதற்கு  தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரம் சாதகமாக இல்லை. மாநில அரசுகளின் அதிகாரங்களை எடுத்துக் கொள்கிறது என வாதிட்டு ராஜீவ் காந்தியின் பஞ்சாயத்து ஆட்சி சட்ட மசோதாவை  இரண்டு திராவிடக் கட்சிகளுமே எதிர்த்தன.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது ஆட்சியின்போதுதான் உள்ளூர் பஞ்சாயத்தின் அதிகார வரம்பில் இருந்து கிராமப் பள்ளிகள் வெளியே கொண்டு வரப்பட்டன.

திராவிடக் கட்சிகளின்  ஏறக்குறைய இருபதாண்டு கால ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலே நடத்தவில்லை. தண்ணீர், சாலைகள், துப்புரவு போன்ற முக்கியமான அரசின் செயல்பாடுகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற மாநில அரசின் அமைப்புகளின் கைகளுக்குப் போய்விட்டன. உள்ளூர் கர்ணம் அல்லது ஊர்த் தலைவருக்கு பதிலாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) நியமிக்கப்பட்டார். கர்ணம் உள்ளூர் பஞ்சாயத்தின் அங்கமாக இருந்த நிலை போய், VAO என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு  பதில் சொல்ல வேண்டியவர் ஆனார்.

தென்னிந்தியாவில் வலிமை வாய்ந்த மாவட்ட ஆட்சியர்கள் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் கால பாரம்பரியம். மாநிலத்தில் அந்தப் பாரம்பரியம் இன்னும் தழைத்துத் தொடர்கிறது.  திராவிடக் கட்சிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பான அமைச்சர்களை வைத்திருக்கின்றன. இதன் மூலம் மாவட்ட அரசு நிர்வாகத்தின் மீது வலுவான அரசியல் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அமைச்சர்கள் வலுவான உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைக்க விரும்புவதில்லை. இதன் விளைவாக சென்னையில் மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மூன்று அடுக்கு முறை செயல்படவில்லை. மாவட்ட ஊராட்சி அமைப்பு பலவீனமாகவும் செயலற்றதாகவும் இருக்கிறது. ஏனெனில், பெரிதும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலத்தில், நகராட்சி அமைப்புகள் மாவட்ட பஞ்சாயத்தின் அதிகார வரம்புக்கு வெளியே இருக்கின்றன.

இன்றைய கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் இருக்கலாம்,  ஆனால் அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று அதற்கு அர்த்தம் அல்ல. கிராம சபை அல்லது மாவட்ட நிர்வாகம்தான் மேற்பார்வை செய்கிறது. சிறிய பணிகள், ஒப்பந்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் போன்றவைதான் கிராம பஞ்சாயத்துகளிடம் விடப்பட்டுள்ளன. வேறு அதிகப் பணிகள் இல்லை.

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கான பரவலான எதிர்ப்புக்குக் காரணம் விழிப்புணர்வை உருவாக்கும் சமூகப் பிணைப்புகள் இல்லாமல் இருப்பதுதான் என்று நலவாழ்வு வல்லுநர் ஒருவர் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் மோசமான நிலைதான் இதற்கு நேரடிக் காரணம்.

  தூய்மை, நலவாழ்வு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை மகிழ்ச்சிக்கான அளவுகோல்களாக ‘இந்தியா டுடே’ மகிழ்ச்சிக் குறியீடு பட்டியலிட்டுள்ளது. கேரளாவில் வலுவான, சக்திவாய்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் விளைவாக கிராமமும் சரி நகரமும் சரி  இந்த அளவுகோல்களில்  உயர் தரத்தில் உள்ளன என்பது நிச்சயம்

தூய்மை, நலவாழ்வு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை மகிழ்ச்சிக்கான அளவுகோல்களாக ‘இந்தியா டுடே’ மகிழ்ச்சிக் குறியீடு பட்டியலிட்டுள்ளது. கேரளாவில் வலுவான, சக்திவாய்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் விளைவாக கிராமமும் சரி நகரமும் சரி  இந்த அளவுகோல்களில்  உயர் தரத்தில் உள்ளன என்பது நிச்சயம். மத்திய அரசு  தூய்மைப் பணியை வலுவாக பிரச்சாரம் செய்யத் துவங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பே  கேரளா தூய்மைப் பணி உயர் தரத்தை எட்டுவதற்கு வலுவான உள்ளாட்சி அமைப்புகள் உதவி புரிந்துள்ளன.

மன அழுத்தத்தை எதிர்த்து நிற்பதற்கு, குடும்பத்துடன் வலுவான பிணைப்புகளை உருவாக்கி, உள்ளூர் சமூகத்தினருடன் ஒன்றிணைய வேண்டும் என தனி மனிதர்களுக்கு உளவியல் நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். இதனால்தான் ஒரு கிராமம் ஒருவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. இதனால்தான் மலையாளிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version