Site icon இன்மதி

பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்

கடற்பசுக்களின் வாழிடங்கள் உள்ள 40 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவிலும், பாக். ஜலசந்தியிலும்தான் மிக அதிக எண்ணிக்கையில் அவை வசிக்கின்றன.

Read in : English

ஒருகாலத்தில் கடல்கன்னிகள் என்று தொன்மக் கற்பனையில் உலாவிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆவுளியா அல்லது கடற்பசு (டூகாங்கு) என அழைக்கப்படுகிறது. அந்தக் கடற்பசுவின் குட்டிகள் இரண்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் வலையில் வந்து மாட்டிக்கொண்டது. மீனவர்கள் இருவரும் படங்களில் மட்டுமே கடற்பசுவைப் பார்த்திருந்தார்கள்.

இது நடந்தது ஏப்ரல் மாதத்தில். ஒருநாள் ராமநாதபுரம் எஸ் துளசிராமனும், அவரது சகோதரர் எஸ். ஹரிஹரசுதனும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதுதான் கடற்பசுக் குட்டிகள் இரண்டு தங்கள் வலையில் மாட்டிக்கொண்டு திணறியதைக் கண்டார்கள். அவற்றைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் வலையை அறுத்து அந்தப் பாலூட்டிகளை அவற்றின் வசிப்பிடத்திற்குச் செல்லட்டும் என்று விடுவித்தனர். அபூர்வமான கடல்வாழ் பாலூட்டிகள் மீன்பிடி வலையில் சிக்கிக்கொண்டால் அவற்றை என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இருந்தது; ஏனெனில், அவர்கள் மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட அனுபவம் உண்டு.

ஹரிஹரசுதன் அந்த இரண்டு கடற்பசுக் குட்டிகளைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருந்தபோது, அதைத் தன் கைபேசியில் துளசிராமன் படமாகப் பதிவுசெய்து கொண்டிருந்தார். பின்பு இருவரும் அந்தக் காணொலிக்காட்சியை இந்திய வனவுயிர்க் கழகத்தின் ‘காம்பா’ டூகாங்கு மீட்புத் திட்டக் குழுவுக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த இரு சகோதரர்களின் கண்ணியமான செயல்பாட்டுக்குப் பாராட்டும் பரிசும் கிடைத்தன. இந்திய வனவுயிர்க் கழகத்தின் ‘காம்பா’ டூகாங்கு மீட்புத் திட்டமும், வனத்துறையும் அவர்களை இந்தியாவின் 75ஆம் சுதந்திரத் திருநாளான 2022 ஆகஸ்டு 15 அன்று தலா ரூ.10,000 வழங்கிக் கெளரவித்தது.

கடற்பசுவின் குட்டிகள் இரண்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் வலையில் வந்து மாட்டிக்கொண்டது. மீனவர்கள் இருவரும் படங்களில் மட்டுமே கடற்பசுவைப் பார்த்திருந்தார்கள்

கடற்பசுக்குட்டிகளைக் காப்பாற்றிய அனுபவம் பற்றிக் கேட்டபோது, “எங்கள் வலையின் நைலான் கயிறுகளை ஒவ்வொன்றாய் அறுத்தெறிய வேண்டியிருந்தது. வலைக்குள் அகப்பட்ட கடற்பசுக்கள் தப்பிக்க முயன்று கொண்டிருந்ததால், வலையை அறுப்பது சிரமமாகத்தான் இருந்தது.

சற்று அதிக நேரம் பிடித்தது; அந்தச் செயலை நாங்கள் கைப்பேசியில் படம்பிடித்தோம். இந்த மாதிரி அபூர்வமான கடல்வாழ் பாலூட்டியான கடற்பசுக்களைக் காப்பாற்றிய எங்கள் அனுபவம் மற்ற மீனவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான் அவற்றைப் படம் பிடித்தோம். நாங்கள் வலையை இழந்தோம்; ஆனால் கடற்பசுக்களைக் காப்பாற்றினோம் என்பதால் வலையை இழந்த வருத்தம் போய்விட்டது. இப்போது எங்களுக்குச் சந்தோசமாக இருக்கிறது” என்றார் ஹரிஹரசுதன்.

(வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

ஹரிஹரசுதனுக்கு ஆழ்கடல் மீன்பிடித்தல் என்பது புதுசுதான். ஆனால், அவரது சகோதரர் துளசிராமன் 12 வருட அனுபவம் கொண்ட மீனவர்.

மேலும் படிக்க:

வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்

அழிந்து வரும் பிணந்தின்னிக் கழுகுகள்!

“மீன்பிடிக்கும்போது சில ஆச்சரியங்கள் நிகழ்வது மீனவர்களாகிய எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. என்றாலும் இரண்டு குட்டி கடற்பசுக்கள் எங்கள் வலையில் மாட்டியது இதுதான் முதல்தடவை. முதலில் நாங்கள் பதற்றமடைந்தோம். பின்புதான் வலையில் மாட்டியது குட்டிக் கடற்பசுக்கள் என்பது எங்களுக்குப் புரிந்தது. அதுவோர் நல்ல அனுபவம்” என்றார் ஹரிஹரசுதன்.

ஆவுளியாக்கள் என்னும் கடற்பசுக்களின் வாழிடங்கள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழ்நாட்டின் மன்னார் வளைவிரிகுடாவிலும், பாக். ஜலசந்தியிலும்தான் மிக அதிக எண்ணிக்கையில் அவை வசிக்கின்றன. கடற்பசு ஒரு சைவ கடல்வாழ் பாலூட்டி. கடற்பசு ஒரு நாளைக்கு 30-40 கிலோ கடல்புல்லை உண்கிறது. இந்த உயிரினம் 1972 வன உயிர் (பாதுகாப்பு) சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகிறது.

இயற்கைப் பாதுகாப்பு பன்னாட்டுச் சங்கம் (ஐயூசிஎன்) டூகாங்குகளை அருகிவரும் உயிரினமாக அறிவித்திருக்கிறது. இந்திய வனவுயிர்க் கழகத்தின் ‘காம்பா’ டூகாங்கு மீட்புத் திட்டம் டூகாங்குகளையும், கடற்புல்லையும் பாதுகாக்கும் திட்டம். இந்தக் கடல்வாழ் பாலூட்டியின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியும், மன்னார் வளைவிரிகுடாவிலும் பாக் ஜலசந்தியிலும் குஜராத்தின் கச் வளைகுடாவிலும் அந்தமான்-நிகோபார் தீவுகளிலும் இருக்கும் அதன் வாசஸ்தலங்களைப் பற்றியும் ஆராய்ச்சிக்குழு ஒன்று ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஆய்வு டாக்டர் ஜே. ஏ. ஜான்சன் மற்றும் டாக்டர் நேரு பிரபாகரன் ஆகியோரின் விஞ்ஞான வழிகாட்டுதலில் நடந்துகொண்டிருக்கிறது. “உங்கள் வலையில் ஒரு கடற்பசு மாட்டிக்கொண்டால், தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள்.

அபூர்வமான கடல்வாழ் பாலூட்டியான கடற்பசுக்களைக் காப்பாற்றிய எங்கள் அனுபவம் மற்ற மீனவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான் அவற்றைப் படம் பிடித்தோம். நாங்கள் வலையை இழந்தோம்; ஆனால் கடற்பசுக்களைக் காப்பாற்றினோம்

அந்த இடத்தையும், அதைக் காப்பாற்றித் தப்பிக்கவிட்டதையும் வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய வனவுயிர்க் கழகத்தின் குழுவும் வனத்துறையும் ரூ.10,000 ரொக்கப்பரிசு கொடுத்து உங்களைக் கெளரவப்படுத்தும்” என்று இந்திய வனவுயிர்க் கழகக் குழுவின் உறுப்பினர் சின்மயா கானேகர் கூறியுள்ளார்.

ஆவுளியா என்றும், கடற்பசு என்றும் அழைக்கப்படும் இந்த டூகாங்கு மூன்று மீட்டர் நீளம் வரை வளரும்; வளர்ந்த நிலையில் 400 கிலோவரை எடை கொண்டதாக இருக்கும். எடையோடு வளரக்கூடியது. பெண் கடற்பசு ஒரு நேரத்தில் ஒரு குட்டியை ஈனும். கருவளர்ச்சிக் காலம் சுமார் ஓராண்டு நீடிக்கும். பிறந்தபின் குட்டி தாயோடு மேலும் ஓராண்டு அல்லது ஈராண்டு வசிக்கும்.

ஆண்விலங்குகள் மொத்தமாக ஓரிடத்தில் கூடி தங்களுக்கான துணைகளைத் தேடி கவனம் ஈர்க்கும் செயல்களில் ஈடுபடும்; அந்தப் பழக்கத்திற்குப் பெயர் ‘லெக்கிங்’ (மனித இனத்தில் ஒருகாலத்தில் வில்லொடித்து அல்லது காளையை அடக்கிப் பெண்ணை ஆண்மகன்கள் கவர முயல்கின்ற சுயம்வரம் போன்றது). அவற்றின் ஆயுள் சுமார் 70 ஆண்டுகள்.
“பாரம்பரிய மீனவர்களாலும் பெரிய அளவில் மீன்பிடிக்கும் மீனவர்களாலும் மீன்பிடித்தலுக்கும் மிகவும் சாதகமானது என்று கருதப்படும் நீர்ப்பரப்புகளில் டூகாங்குகள் உயிர்வாழ்கின்றன.

448 சதுர கிமீ ஏரியாவில் அமையவிருக்கும் டூகாங்குக் காப்பகம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையின் கிராமங்களை ஒட்டி 48 கிமீ ஓடும் கடற்கரைப் பகுதியின் எல்லையில் உருவாகிறது

எனினும், கடலடி மட்டத்தில் கொண்டைவலை வீசுதல், பார வீச்சிழுப்புவலை பயன்படுத்தல், சட்டத்திற்குப் புறம்பான ஜோடி இழுவைப் படகுகளிலிருந்து வலைவீசுதல் ஆகிய நவீன மீன்பிடித்தல் முறைகள் கடல்புற்களுக்கும் ஆவுளியாக்களுக்கும் ஆபத்தானவை. மீன்வலைப் பின்னல்களிலும், படகுகளின் தாக்குதல்களிலும் துடுப்புகளின் அசைவுகளிலும் ஆவுளியாக்கள் மாட்டிக்கொண்டு வீழ்ந்துவிடக் கூடியவை. மாமிசத்திற்காக அந்தப் பாலூட்டிகள் வேட்டையாடப்படுகின்றன” என்று சொல்கிறது இந்திய வனவுயிர்க் கழகத்தின் செய்திக்குறிப்பு. டூகாங்கு பாதுகாப்புக் காப்பகம் ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வன அமைச்சர் 2021 செப்டம்பர் 3 அன்று அறிவித்தார்.

448 சதுர கிமீ ஏரியாவில் அமையவிருக்கும் அந்தக் காப்பகம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையின் கிராமங்களை ஒட்டி 48 கிமீ ஓடும் கடற்கரைப் பகுதியின் எல்லையில் உருவாகிறது. “அந்தக் காப்பகம் கடல்நோக்கி 10 கிமீ தூரம் விரிவடைகிறது. இந்தப் பகுதியின் டூகாங்குகளையும், கடல்புற்களையும் பாதுகாப்பதற்காக, மீன்பிடித்தல் தொடர்பாக இப்போதிருக்கும் விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தக் காப்பகத்தின் நோக்கம்.

இந்தப் பகுதியிலுள்ள சதுப்புநிலக் காடுகள் உட்படத் தூய்மையான டூகாங்கு வசிப்பிடத்தைப் பாதுகாப்பது மீனவர் இனத்தின் தனிப்பொறுப்பு. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இந்தக் கடலோரப் பகுதியில் மட்டும் ஒன்பது டூகாங்குகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன” என்று கூறியது அந்தச் செய்திக்குறிப்பு.

Share the Article

Read in : English

Exit mobile version