Site icon இன்மதி

பிரபல நடிகர் பிரதாப் போத்தன்: இனிய பொன்நிலா இனியில்லை…

Read in : English

ஜூலை 15 வியாழக்கிழமை காலையில்எப்போதும்போல் ஃபேஸ்புக்கைத்திறந்தபோது, முதலில் கண்ணில் பட்ட பதிவுகளில் சில இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தன. ஐயோ பிரதாப் இறந்துவிட்டாரா என்றிருந்தது. அவருடன் எனக்கொன்றும் நேரிடையான பரிச்சயம் இல்லை. அவரது வெறித்தனமான ரசிகனும் அல்ல நான். ஆனாலும், ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டால் மனத்தில் எழும் ஆற்றாமையை உணரமுடிந்தது. ஆனால், தமிழ் சினிமா பிரதாப் போத்தன் என்றால் உருவாக்கி வைத்திருக்கும் கோணங்கித்தனமான பிம்பத்துடன் நிஜ பிரதாப் போத்தனை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆச்சரியமே எஞ்சும். 

ஒருவிதப் பைத்தியக்காரத்தனமான, கோமாளி சேஷ்டைகள் கூடிய ஓர் ஆள் என்பதான வேடங்களே அவர் நடித்திருந்த பலபடங்களில் அவருக்கு அமைந்திருந்தன. அப்படியான வேடங்கள் அவருக்கு அமைந்தனவா, அப்படியான வேடங்களில் விரும்பி நடித்தாரா என்பதைக் காலம்மாத்திரமே அறியும். திரைப்படத்துறையில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல பிரிவுகளிலும் பணியாற்றியானாலும் படங்களை இயக்குவதே அவருக்குப் பிடித்திருந்தது.  அதில் மாத்திரமே கதை சொல்ல முடியும் என்பதில் அவருக்கு இயக்கத்தின் மீது ஒருபிடிமானம். நடிப்பதில் நல்ல வருமானம் கிடைத்தது என்பதிலும் அவருக்கு மகிழ்ச்சியே.

மேலும் படிக்க:

பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?

ராக்கெட்ரி: நம்பி நாராயணனுக்கு மாதவன் செலுத்திய மரியாதை!

தமிழில் அவர் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்துக்குச் சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது கிடைத்தது. காதல் என்றாலே பித்துதான் அதிலும் பித்துப்பிடித்த இருவருக்கிடையே காதல் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு படத்தை இயக்கியவர் அவர்.

தமிழில் அவர் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்துக்குச் சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது கிடைத்தது.  

அவர் நடித்த மூடுபனி, வறுமையின் நிறம் சிகப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்றபடங்களில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு அவரது ஆளுமையில் தொற்றிக்கொண்டதோ? இல்லை, அவரது ஆளுமையில் இயல்பாக இருந்தவந்த ஓர் அம்சம் இத்தகைய வேடங்களை அவர் கச்சிதமாக நிறைவேற்ற உதவியதோ? இரண்டில் எது உண்மை? இரண்டும் உண்மையா? தெரியவில்லை. ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது என்று மட்டும் தோன்றுகிறது.

அவர் ஏற்றுநடித்திருந்த வேடங்களின் காரணமாக பிரதாப் போத்தன் கிறுக்குத்தனம்  நிறைந்த மனிதர் என்றே பொதுவான ரசிகர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மையில் பிரதாப் போத்தன் என்ற மனிதர் வாழ்க்கையைத் தான் நினைத்தபடியே வாழ்ந்திருக்கிறார். சரி தவறு, நல்லது கெட்டது என்ற எந்தப் பாகுபாடும் இன்றி வாழ்க்கை கற்பித்திருந்த நெறிகளைப் பற்றிய அலட்டல் இல்லாமல் அதேவேளையில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரக்கூடாது என்பதை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். வெற்றி, தோல்விகள் அவரது வாழ்க்கையில் மாறிமாறி வந்திருக்கின்றன. வெற்றி குறித்த கர்வமோ தோல்வி பற்றிய கவலையோ பீடித்திராத மனிதராகவே வாழ்ந்து முடித்திருக்கிறார்.

மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்)
இயக்கம் பிரதாப் போத்தன்

பெரிய அவஸ்தையின்றி ஒரு மலர் உதிர்வதைப் போல ஒரு மாலையில் சூரியன் அஸ்தமிப்பது போல அவரது உடம்பிலிருந்து உறக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. அவரது மரணம் அவரை நன்கு அறிந்தவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. முந்தைய நாள்வரை அனைவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். ஃபேஸ்புக் வழியே தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்த அவர் முதல்நாள் மரணம் தொடர்பான ஸ்டேட்டஸ் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். மறுநாள் மரித்திருக்கிறார். ஆகவே, அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஓர் அரசியல் ஆளுமைக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் பிரதாப் போத்தன். உடன்பிறந்தஆண்கள் இருவர், பெண்கள் இருவர். ஐந்து வயதிலேயே உதகமண்டலத்தில் கல்விக்காக விடுதியுடன் இணைந்த லாரென்ஸ் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டிருக்கிறார். மிகவும் கண்டிப்பான பள்ளி. பள்ளியில் இருந்து வெளியே வந்ததை மிகவும் சுதந்திரமாக உணர்ந்துள்ளார். சிறுவயதிலேயே பெற்றோர் அன்பையும் ஆதரவையும் அருகேயிருந்து அனுபவிக்க கொடுத்து வைக்காத ஒரு வாழ்க்கை அவருக்கு. அந்த ஏக்கம் அவரது குணாம்சத்தில் ஒரு குதர்க்கத்தைக்கொண்டு வந்திருக்கலாம். 15 வயதில் தந்தையை இழந்துள்ளார். தந்தையின் அரசியல் ஈடுபாடுகாரணமாக உருவான பகை இவரது வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. இவரது பள்ளி வாழ்க்கையின் வெளிப்பாடாக இவர் இயக்கிய மலையாளப்படம், கமல்ஹாசன் நடித்த டெய்சி. இது மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தந்தை அரசியலில் ஈடுபட்டிருந்தபோதும், இவருக்கு அரசியலில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால், உள்ளத்தில் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக உணர்வதாகவே தெரிவித்திருக்கிறார். திருமண வாழ்க்கையும் வெற்றிகரமான ஒன்றாக அமையவில்லை. முதலில் நடிகை ராதிகாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அது விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக, மற்றொரு திருமணம். அதன்மூலம் பிரியத்துக்குரிய மகளைப்பெற்றுள்ளார். ஆனால், திருமணவாழ்வு முறிந்துவிட்டது. அவரது துரதிர்ஷ்டம் அந்த மணவாழ்க்கையும் நிலைக்கவில்லை. அவைகுறித்த வருத்தம்இருந்துள்ளது. அதே நேரத்தில், ’ஐம் நாட் எ குட் ஹஸ்பெண்ட் மெட்டீரியல்’ என்று உண்மையை ஒத்துக்கொள்ளவும் செய்கிறார். 

தனக்குப் பிடித்த நாவல் என கேப்ரியல்கார்சியாமார்க்வெஸ்எழுதிய ’ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஒப் சாலிட்டியூட்’நாவலைக் கூறுகிறார். பாதிப்பை ஏற்படுத்திய படமாக இத்தாலியப் படமான பைசைக்கிள் தீவ்ஸை குறிப்பிடுகிறார்.

வாழ்க்கையில்பட்ட அடிகள் அவரைப் பண்பட்ட மனிதராக மாற்றியுள்ளன. வாழ்க்கையில் இதை அடைய வேண்டும் அதை அடைய வேண்டும் என்ற வெறியெல்லாம் அவருக்கு இருந்திருக்கவில்லை. வாழ்க்கை அவரை வஞ்சித்திருந்தபோதும், தான் ஒரு அதிர்ஷ்டக்காரன் என்றே பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். நல்ல இயக்குநர்களின் படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புக்கிடைத்தது. மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் அவர் நடித்த தகரா பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படம் தான், பரதன் இயக்கத்தில், தமிழில் நாசருக்கு மிகவும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த ஆவாரம்பூ ஆனது. தகரா படத்துக்கு முன்பாகவே பாலுமகேந்திரா அவரை அழியாத கோலங்கள் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.  

மூடு பனி (திரைப்படம்)

தொடர்ந்து நல்லநல்லஇயக்குநர்களது படங்களில் நடித்திருக்கிறார். அவர் இயக்கிய 12 படங்களும் ஒன்றுக்கொன்றுமாறுபட்டவை. ஒரேமாதிரி இன்னொரு படம் பண்ணுவதில் அவருக்கு விருப்பமில்லை. மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், ஆத்மா, சீவலப்பேரிபாண்டி, லக்கிமேன் மலையாளத்தில் இயக்கிய ரிதுபேதம், டெய்சி, ஒரு யாத்ரா மொழி உள்ளிட்டஒவ்வொன்றும் ஒவ்வொருவகை. இவ்வளவு மாறுபட்ட படங்களை உருவாக்கிய இயக்குநர் என்றாலும் அந்த அளவுக்குஅ ங்கீகாரம் இவருக்குக் கிடைத்ததா என்பது சந்தேகமே.

The Bourne Identity என்னும் நாவலைத் தழுவி கமல்ஹாசன் நடித்தவெற்றி விழா படத்தை உருவாக்கினார். தான் நாவலைப் பார்த்து காப்பி அடித்தேன் என்று இயல்பாகச் சொல்கிறார். அதை மறைக்கவில்லை. தமிழில் பிளாட்டினம் டிஸ்க் பெற்ற முதல் படம் என்னும் பெருமையை வெற்றி விழா பெற்றது. அந்த அளவு ஆடியோ விற்பனையில் சாதனை படைத்தது. திரைப்படங்களை மட்டும் இயக்கவில்லை. விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார். விளம்பர நிறுவனம் ஒன்றில் காப்பிரைட்டராகப் பணியாற்றியுள்ளார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது, மேடை நாடங்களில் நடித்துள்ளார். மேடை நாடகம் வழியேதான் சினிமா வாய்ப்பே கிடைத்துள்ளது. இவரது அண்ணன் ஹரி போத்தன் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக இருந்தபோதும், இவர் நடிகராக அவர் உதவவில்லை.

படப்பிடிப்பின் இடைவேளைகளில் வாசிப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. தனக்குப் பிடித்த நாவல் என கேப்ரியல்கார்சியாமார்க்வெஸ்எழுதிய ’ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஒப் சாலிட்டியூட்’நாவலைக் கூறுகிறார். பாதிப்பை ஏற்படுத்திய படமாக இத்தாலியப் படமான பைசைக்கிள் தீவ்ஸை குறிப்பிடுகிறார். இப்படியான ரசனை கொண்ட,  உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்திடும் சினிமா பிரபலத்தை உலகம் கோமாளியாகவும் பைத்தியக்காரராகவும் பார்த்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. அவரை நன்கறிந்த நண்பர்கள் அவரது வாழ்வின் சம்பவங்களைக்கொண்ட ஒரு நாவலை அவர் எழுதவேண்டும் என விரும்பியிருக்கிறார்கள்; அவருக்கு ஒரு நல்ல நகைச்சுவைப் படத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இரண்டுமே நிறைவேறவில்லை. ஆனாலும், பிரதாப் போத்தனை மறக்க இயலாதபடியான நல்ல நினைவுகளைவிட்டுச் சென்றிருக்கிறார். அவைகூறும் அவர் யாரென.

Share the Article

Read in : English

Exit mobile version