Site icon இன்மதி

பொது சுகாதாரம், நீண்ட கோவிட் தொற்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி: மருத்துவ நிபுணர்கள் அலசுகிறார்கள்!

(Photo credit: Mufid Majnun -Unsplash)

Read in : English

கோவிட் தொற்று காலத்தில் தொடர்ந்து பொது சுகாதாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து தற்போது குறையத் தொடங்கியுள்ள சூழலில், 18-59 வயதினருக்கான கோவிட் பூஸ்டர் போடுவதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார்.இதையடுத்து பொது சுகாதார மருத்துவ நிபுணரும் தமிழ்நாட்டில் உறுப்பு தானத்துக்கான பதிவகத்தைத் தொடங்கியவருமான மருத்துவர் ஜே. அமலோற்பவநாதன், சர்வதேசப் புகழ் பெற்ற புற்றுநோய் சிறப்பு மருத்துவர் திரிவாடி கணேசனும் கோவிட் தொற்று சூழ்நிலை குறித்து உரையாடினார்கள். அதன் விவரம் இதோ:

மருத்துவர் அமல்: சார், நீங்கள் ஒரு ஆய்வாளர். பொதுவாக எழுப்பப்படும், விவாதத்தில் கேள்விகளை உங்களிடத்தில் வைக்க விரும்புகிறேன்.

கோவிட் சூழலைப் பொறுத்தவரை, முதலில் இரண்டு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒன்று சமூகப்பரவல். அதாவது அந்த வைரஸ் காட்டுத்தீயைப்போல பரவும்தன்மை. மரணங்களும், பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனப்பட்டது. காட்டுத்தீ அடங்குவதைப்போல அதுவும் அடங்கும் எனப்பட்டது.

இரண்டாவது, சமூகத்தில் 70% பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருந்தால், அந்தச் சமூகம் தானாகவே கூட்டு எதிர்ப்புத்திறனை அடைந்து பாதுகாப்பாக இருக்கும் என அறியப்பட்டது. மூன்று வருடங்களில் என்னவிதமான கற்றலை நாம் பெற்றிருக்கிறோம்? இவற்றில் மேலும் கற்பதற்கான விஷயங்கள் என்ன?

மேலும் படிக்க:

கொரோனா தொற்றுப் பரவல், மீண்டும் ஊரடங்கு வருமா?: டாக்டர் அமலோற்பவநாதன் நேர்காணல் 

ஊரடங்கினால் உருப்படியான பலன் ஏன் கிடைக்கவில்லை?

மருத்துவர் கணேசன்: இந்தியாவைப் பொறுத்தவரை, 2020-ஆம் ஆண்டில் ஒரு அலை இருந்தது. 2021-ஆம் ஆண்டில் இன்னும் பெரிய அலை வந்தது. இந்த ஜனவரி மாதத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. தொற்று அதிகரித்தாலும், மருத்துவமனை அனுமதி குறைவாகத்தான் இருந்தது. 50% முதல் 60% பேர் வரை, இரண்டு தவணை தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டனர் என்பதையும் பார்க்கமுடிகிறது.

மருத்துவர் அமல்: தமிழ்நாட்டில், முதல் தவணை தடுப்பூசி ஏறத்தாழ 90% போட்டு முடிக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் தவணை தடுப்பூசி 70% முடிக்கப்பட்டுவிட்டதென தெரியவருகிறது.

மருத்துவர் கணேசன்: அப்போது கொஞ்சம் பாதுகாப்பு இருக்கவே செய்கிறது. பலருக்கும் தொற்று ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டது. எனக்கும் கடந்த ஆண்டு தொற்று ஏற்பட்டது. எனக்கான ஆண்டிபாடி அளவுகள் அதிகமாக இருந்தன. இது தொற்றின் காரணமாகவும், தடுப்பூசியின் காரணமாகவும் ஒரு இணைவுச் செயல்பாடாகவே எனக்குத் தோன்றியது. இதன் மூலமாக ஒன்று தெரியவருகிறது. காட்டுத்தீபோல பரவும் முதல் கருத்தாக்கம் இந்தியாவைப் பொறுத்தவரை பொருந்திப்போகவில்லை.

அந்த நேரத்தில், நமக்கு இதைக்குறித்து அதிகமாகத் தெரியாது. அதுமட்டுமல்லாமல், மருத்துவமனைகள் அந்த நிலைக்கு, தயாராகயில்லை. கடந்த வருடம் கொஞ்சம் தயார்நிலை இருந்தது. ஆனால், அப்போதும் ஆக்சிஜனுக்கும், படுக்கைகளுக்கும் பற்றாக்குறை இருந்தது.

70% முதல் 80% வரை தடுப்பூசி அளிக்கப்பட்டிருந்தால், நோய்த்தொற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு காய்ச்சலைப்போல சமூகத்தில் இருந்துகொண்டே இருக்கும். கோவிட்டும் அதேபோன்ற ஒரு நிலையில் தொடரும் என்பது என் எதிர்பார்ப்பு.

“சிறந்த மருந்துகள் கிடைக்கத்தொடங்கிவிட்டன. உதாரணமாக, கொரோனா தொற்று அறியப்பட்டதும், தீவிரமான பாதிப்பை தவிர்ப்பதற்கான மருந்துகளும் கிடைக்கின்றன. ஆய்வுகள் மூலமாக, இந்த ஆண்டுதான் இந்த மருந்துகள் கிடைக்கத்தொடங்கியுள்ளன”– மருத்துவர் திரிவாடி கணேசன்

மருத்துவர் அமல்: தற்போது பாதிப்புகள் இருக்கிறது. கூட்டுத்தொற்று நிலை இருக்கிறது. ஆனால் அலை இல்லை. மருத்துவமனை அனுமதிகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், மோனோக்ளோனல் ஆண்டிபாடிகள் தேவை குறைந்துள்ளன. இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக தொற்று இருப்பதுதான் நிலைமையாக இருக்கிறது.

இதற்கு பள்ளிக்குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை இன்னும் தீவிரப்படுத்துவதுதான் நிலையாக இருக்கிறது. தொற்றின் தீவிரம் குறைந்து அதன் தொற்று வேகமும் குறைந்து வரும்போது, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

மருத்துவர் கணேசன்: இந்த நோயைத் தடுப்பதற்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படவேண்டும் என்பது நமக்குத் தெரியாது. தட்டம்மை போன்ற நோய்களுக்கு 90% தடுப்பூசி அவசியமாகிறது.

மருத்துவர் அமல்: ஆனால் தொற்றுகள் தற்போது மிதமானதாகவே இருந்து வருகிறது. தடுப்பூசி முகாம்களை நடத்தி, தடுப்பூசி பெறாதவர்களை தேடிப்போகவேண்டுமா? எதிர்ப்புத்திறன் அற்றவர்கள் மீது கவனத்தைக் குவித்து, அதில் செயல்படவேண்டாமா?

மருத்துவர் கணேசன்: ஆமாம் அது உண்மைதான். மூத்தவர்கள்., அதாவது, 60 வயதுக்கு மேலானவர்கள், சிறுநீரக, இதய நோய் செயல்பாட்டு குறைபாடுடைய நோயாளிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்படலாம். அவர்கள் மிகுந்த அபாயத்தில் இருப்பவர்கள். அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதல்ல.

வெளிநாடுகளில், அப்படியான அழுத்தங்கள் இல்லை. எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், குழந்தைகளுக்கு தற்போது தடுப்பூசி அவசியமில்லை. அரசின் கொள்கை தடுப்பூசி அளிப்பதுதான். இந்திய குழந்தை நல மருத்துவ தலைமையகமும், 2 முதல் 18 வரையிலான தடுப்பூசி இயக்கத்தை ஆதரிக்கிறது. இந்த விவரங்களில் பலரது கருத்துக்களும், சிந்தனையும் ஏற்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிப்பது எதற்காகவென்றால், அவர்கள் சுலபமாக தொற்றுக்கு ஆளாகிவிடுவார்கள் என்பதுதான். அவர்கள் இளவயதினராக இருப்பதால், அவர்களுக்கு நோய் பாதிப்பு இருக்காது. ஆனால் அவர்கள் வீட்டுக்குச் சென்றால், அவர்கள் வயதான குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்றைப் பரப்பும் அபாயம் உள்ளது. மூத்தவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், குழந்தைகளுக்கு அது அவசியமாக இருக்காது. இலக்கு பெரியவர்களை நோக்கியதாக இருக்கவேண்டும், நோயுற்றவர்களை நோக்கியதாக இருக்கவேண்டும்.

மருத்துவர் அமல்: இது ஒரு அறம்சார்ந்த கேள்வியை எழுப்புகிறது. அப்பாவோ, தாத்தாவோ தொற்றுக்கு ஆளாவார்கள் என்பதற்காக ஏன் குழந்தைக்கு தடுப்பூசி தரவேண்டும்?

மருத்துவர் கணேசன்: தனிப்பட்ட நபராக பார்த்தால், அது அறத்துக்கு எதிரானது. ஆனால் இது பொது சுகாதாரக் கொள்கை. இப்போது நம்மிடம் மருந்துகள் உள்ளன. ஆனால் அப்போது இல்லை. தடுப்பூசி மட்டுமே இருந்தது. நாம் நோயுற்றவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டியதாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிப்பது எதற்காகவென்றால், அவர்கள் சுலபமாக தொற்றுக்கு ஆளாகிவிடுவார்கள் என்பதுதான். அவர்கள் இளவயதினராக இருப்பதால், அவர்களுக்கு நோய் பாதிப்பு இருக்காது

மருத்துவர் அமல்: குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் ACE ரிசப்டார் செல்கள் குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் நோயுறுவது குறைவாகவே இருக்கும் என்பது நமது புரிதலாக இருந்தது. இப்போது நமது புரிதல் என்ன?

மருத்துவர் கணேசன்: குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. 100-இல் ஒரு குழந்தைக்குத்தான் தீவிரமாக இருக்கும். அவர்களுக்கு நிமோனியா அல்லது கால்களில் ரத்தக்கட்டு ஏற்படலாம். ஒரு வரம்பு வரைக்கும், இது அவர்களின் நோய் எதிர்ப்புத்திறனைச் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் இன்றும், சில குழந்தைகளுக்கு ஏன் இது ஏற்படுகிறது என்பதை நம்மால் அறியமுடியவில்லை.

மற்றொரு விஷயம் என்னவெனில், வைரஸ் எந்த அளவுக்கு தாக்குறது என்பதைப் பொறுத்ததாகும். இதைக்குறித்து நாம் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. தொடக்கத்தில் இருந்தே குழந்தைகள் தொற்றால் அதிகம் பாதிக்கப்படாததால், அதில் அதிகளவிலான ஆய்வுகளும் இல்லை. வெளிநாடுகளிலும், இந்தியாவிலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிப்பதற்கான தொடர் பரிந்துரைகள் உள்ளன. ஆனால் எனது தனிப்பட்ட கருத்தின்படி, அவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை.

அதற்கான காரணங்களும் இல்லை. பள்ளிகளில் அவர்கள் விளையாடும்போது அவர்களுக்கு தொற்று நேரலாம். கல்லூரிகளிலும் இதைப் பார்த்திருக்கிறோம். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அதையெல்லாம் மாற்றமுடியாது.

மருத்துவர் அமல்: சில தடுப்பூசிகள், மற்ற தடுப்பூசிகளுக்கான கடுமையான நடைமுறைகளைத் தாண்டாமல் வெளியாகின்றன. அவை ஏற்படுத்தும் மோசமான தாக்கங்கள் ஆவணப்படுத்தப்படுகிறதா? இதன் மீதான ஆய்வுகள் நடக்கின்றவனவா? பொதுத்தளங்களில் இதற்கான தரவுகள் உள்ளதா?

மருத்துவர் கணேசன்: தொடக்கத்தில், முதல் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மருந்துக் கட்டுப்பாட்டாளர் தளத்தில் இந்தத் தகவல்கள் இருந்தன. டெல்டா தொற்று ஏற்பட்டபோது, பக்கவிளைவுகள் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை.

இந்தியாவில், தரவுகளே இல்லை. வெளிநாடுகளில், ஓரளவுக்கு தரவுகள் இருக்கின்றன. சிக்கலான பாதிப்புகள் குறைவுதான். லட்சத்தில் ஒருவருக்கு அப்படியான சிக்கல்கள் இருக்கலாம். இந்தியாவில், எனக்குத் தெரிந்தவரை தகவல்கள் இல்லை.

இந்தியாவில், நம்மிடம் பெரும்பான்மையாக இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. ஆங்காங்கு ஒன்று, இரண்டு பேருக்கு தவிர்த்து பெரிய தாக்கங்கள் இந்த தடுப்பூசிகள் சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதனால் தீய விளைவுகள் அரிதானது என்றே கூறுவேன். கோவிட் அல்லாத பிற சில மருந்துகளையும் கூட, பக்கவிளைவுகள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருந்தாலும், நாம் பரிந்துரைக்கிறோம்.

மருத்துவர் அமல்: ஆனால் மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் வித்தியாசமானதுதானே. தடுப்பு மருந்துகளைப் பொறுத்தவரை, பெறுபவர் நோயாளி அல்ல. இயல்பானவர். தீங்கு செய்யும் விளைவுகள் குறித்து நமக்கு முழுதாக தெரியவராது. நம்மால் இழப்பீடும் வழங்கமுடியாது. அதனால்தான் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்பது என் நிலைப்பாடாக இருக்கிறது. தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவு பாதிப்புகளை நான் கண்டிருக்கிறேன். இதயத்துடிப்பு அதிகரித்தலைக் கண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல இவை அரிதான விஷயங்கள்தான்.

மருத்துவர் கணேசன்: இரத்தம் உறைதலைப் பொறுத்தவரை, ஆவணங்கள் இருக்கின்றன.

பொது சுகாதாரம்தான் இந்த தடுப்பூசிகளுக்கு பின்னுள்ள காரணங்களாக இருக்கிறது. பெரும்பாலானவர்களின் நலன்தான் முக்கிய கரிசனமாக இருக்கிறது. ஆறு மில்லியன் மக்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அதுவே குறைவான எண்ணிக்கைதான் பதிவாகியிருக்கிறது என சொல்லப்படுகிறது. அந்தச் சூழலில்தான் இப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மூன்று நாட்கள் இருக்கும் காய்ச்சல் என்பதால் மட்டும், நான் தடுப்பூசியையே நோயாளிகளுக்கு பரிந்துரைவில்லை. குடும்பத்தினருக்கு பரவ வாய்ப்பிருக்கும் என்பதற்காகவும் கூட இல்லை. முக்கியமான காரணம் என்னவெனில், லாங் கோவிட் சிண்ட்ரோம் எனப்படும் நாள்பட்ட கோவிட்தான்

“நீண்ட நாட்பட்ட கோவிட்டுக்கு நம்மிடம் மருந்துகளும் இல்லை. அதனால் கோவிட் எதிர்த்த போராட்டங்களுக்கு, நான் தடுப்பூசியையே பரிந்துரைப்பேன்” –மருத்துவர் ஜே. அமலோற்பவநாதன்

மருத்துவர் அமல்: கோவிட்டுக்கு எதிரான மூன்று விதமான பாதுகாப்பு விஷயங்கள் உள்ளன. மருந்துகள், மருந்துகள் அல்லாத வழிகள் மற்றும் தடுப்பூசிகள். எந்தளவுக்கு வைரஸ் உருமாற்றம் அடைந்தாலும், அவை நாசி வழியாகத்தான் உடலுக்குள் செல்கிறது. ஆக, முகக்கவசங்களும், சமூக விலகலும்தான் எப்போதுக்குமான தீர்வாக இருந்துவருகிறது. தடுப்பூசிகளை விடவும், முகக்கவசங்கள், கை கழுவுதல், சமூக விலகல் ஆகியவைதான் இன்னும் சிறந்ததாக இருக்கும் என்கிறீர்களா?

மருத்துவர் கணேசன்: முகக்கவசங்கள் நல்லதுதான். யாருக்கு தும்மல் இருக்கிறதோ, அவர்களெல்லாம் கண்டிப்பாக அணிந்துகொள்ளவேண்டும். சினிமா தியேட்டர்களிலும், மருத்துவமனைகளிலும் முகக்கவசங்கள் கட்டாயமாகின்றன. N95 முகக்கவசம் சிறந்தது என்றாலும், சாதாரண சர்ஜிக்கல் முகக்கவசங்களும் கூட நன்மை பயக்கும். வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. தொற்றும் தொடர்கிறது. மருந்துகள் இல்லாமல் தொடரும் வழிமுறைகள் கைவிடப்படக்கூடாது.

சிறந்த மருந்துகள் கிடைக்கத்தொடங்கிவிட்டன. உதாரணமாக, கொரோனா தொற்று அறியப்பட்டதும், தீவிரமான பாதிப்பை தவிர்ப்பதற்கான மருந்துகளும் கிடைக்கின்றன. ஆய்வுகள் மூலமாக, இந்த ஆண்டுதான் இந்த மருந்துகள் கிடைக்கத்தொடங்கியுள்ளன. அவை தேவையான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படலாம். சிறு வயது நோயாளிகளுக்கு அல்ல.

போதுமான படுக்கைகள் நம்மிடம் இல்லை. சீனாவைப்போல ஜீரோ தொற்று கொள்கை நமக்கு கடினமானது. ஒவ்வொரு மூன்று நாட்களும், அனைவரும் பரிசோதித்துக்கொள்ளவேண்டும் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை. இப்படியான சூழலில், இந்தியாவில், பொது கொள்கை தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கிறது.

மருத்துவர் அமல்: மூன்று நாட்கள் இருக்கும் காய்ச்சல் என்பதால் மட்டும், நான் தடுப்பூசியையே நோயாளிகளுக்கு பரிந்துரைவில்லை. குடும்பத்தினருக்கு பரவ வாய்ப்பிருக்கும் என்பதற்காகவும் கூட இல்லை. முக்கியமான காரணம் என்னவெனில், லாங் கோவிட் சிண்ட்ரோம் எனப்படும் நாள்பட்ட கோவிட்தான். 20% முதல் 30% இந்த அறிகுறி தோன்றுகிறது. இது கட்டுப்படுத்துவதற்கு கடினமானது. இதன் அறிகுறிகள் தெளிவானதாக இல்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, மெலிதான நீரிழிவு இருப்பவர்களுக்கு, அது இன்னும் தீவிரமானதாக மாறியுள்ளது. அந்த இரண்டையும், இணைத்துப் புரிந்துகொள்ளலாமா எனத் தெரியவில்லை.

தொற்று ஏற்பட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு, அறிகுறிகள் தெரியத்தொடங்குகின்றன. நீண்ட நாட்பட்ட கோவிட்டுக்கு நம்மிடம் மருந்துகளும் இல்லை. அதனால் கோவிட் எதிர்த்த போராட்டங்களுக்கு, நான் தடுப்பூசியையே பரிந்துரைப்பேன்.

மருத்துவர் கணேசன்: நாட்பட்ட கோவிட் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியப் பிரச்சனையாக உள்ளது. தமிழ்நாட்டில், எம்.எம்.சியிலும், ஸ்டான்லியிலும் கோவிட் கிளினிக்குகளை ஆரம்பித்துள்ளோம். ICMR அந்தத் தரவுகளை கவனித்து வருகிறது. இந்தியாவில் இதற்கான போதிய தரவுகள் இல்லை.

அமெரிக்காவில், சில தகவல்கள், ராணுவ மருத்துவ நிர்வாகம் அளித்துள்ளது. நாட்பட்ட கோவிட்டுக்கு பதிலாக, அதை நான் போஸ்ட் கோவிட் சீக்வலே என அழைப்பேன். அதுதான் நிதர்சனமானது. தொற்றுக்குப்பிறகு சிலருக்கு இது தோன்றுகிறது. அது போஸ்ட் வைரல் சிண்ட்ரோமை போன்றது.

சோர்வு, உடற்சோர்வு, கை, கால்களில் வலி, நீரிழிவு ஆகியவை இதன் சிக்கலான பாதிப்புகளாக இருக்கிறது.

இந்த வைரஸ் நம்மைவிட்டுச் செல்வதில்லை. தொண்டை பரிசோதனை மூலமாகவே இதை அறிகிறோம். சிறுநீரகத்திலும், கணையத்திலும் தொற்று இருக்கிறதா என நாம் அறியமுடியாது. அமெரிக்காவில், போஸ்ட் மார்ட்டத்தின்போது, அந்த உறுப்புகளில் தொற்று இருந்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள். எண்டோஸ்கோபியின்போது, அவர்கள் வைரஸின் துகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை எதிர்ப்பு மண்டலத்தை தாக்குகிறதா என்பது நமக்குத் தெரியாது. பாதிப்பை தவிர்ப்பதற்கான முக்கிய காரணமாக, நீண்ட கோவிட்டை தடுப்பதாகவே இருக்கும்.

மருத்துவர் அமல்: 20% தனிநபர்கள் மட்டுமல்ல. 20% மனித வளம் பாதிக்கப்படுகிறது. அது குடும்ப வருமானத்தின் மீது மிக அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

Share the Article

Read in : English

Exit mobile version