Read in : English
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள திம்மநாயக்கன்பாளையம் கிராம மக்கள், ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாமலும், சொந்த வீடு என்பதால் வீட்டை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர முடியாமலும் என்ன செய்வது என்று செய்வது அறியாமல் திரிசங்கு நிலையில் திகைத்து நிற்கின்றனர்.
திம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. சுமார் 500 பேர் வசிக்கிறார்கள். இந்த ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். பெரும்பலானவர்கள் சொந்த வீடுகளில் வசிக்கிறார்கள்.
ஈக்கள் எல்லா ஊர்களிலும் இருக்கக்கூடியதுதான். உணவு பதார்த்தங்கள் இருந்தால் அந்த இடத்துக்கு ஈக்கள் வந்துவிடும். ஆனால் இந்த ஊரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈக்களின் தொல்லை தாங்க முடியாத அளவுக்குப் பெருகிவிட்டது. இதனால் பகல் நேரங்களில் வீட்டைப் பூட்டி வைத்திருக்க வேண்டியது உள்ளது. அப்படி இருந்தும் வீட்டில் காபி அல்லது டீ குடிக்க எடுத்து வரும் முன்பே ஈக்கள் அதில் விழுந்து விடுகின்றன.
பகல் நேரங்களில் சாப்பிடும்போது, சாப்பாட்டில் ஈக்கள் விழுந்துவிடுகின்றன. குடி தண்ணீரிலும் ஈக்கள் விழுந்து, தண்ணீரை குடிக்க முடியாமல் செய்து விடுகின்றன. ஈக்கள் விழுந்த சாப்பாட்டைச் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் அவலமும் ஏற்பட்டு வருகிறது என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாமலும், சொந்த வீடு என்பதால் வீட்டை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர முடியாமலும் என்ன செய்வது என்று செய்வது அறியாமல் திரிசங்கு நிலையில் திகைத்து நிற்கின்றனர்
பகல் முழுவதும் ஈக்கள் பிரச்சினை இருப்பதால், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியதாக உள்ளது. இரவு நேரங்களில் தான் அவர்களால் நிம்மதியாக வெளியே வர முடிகிறது. ஈக்கள் பிரச்சினை தொடர்கதையாகி வருவதைத் தாங்க முடியாத மூன்று குடும்பங்கள் கடந்த ஓராண்டில் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதாக இந்த ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க:
பெருநகரங்களில் காங்கிரீட் காடுகளையும் வண்ணமயமாக்கும் வண்ணத்துப்பூச்சிகள்!
நீலகிரி வரையாடுகள் வசிக்கும் சோலைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
“இந்த கிராமத்துல புதிதாக நாங்கள் வீடு கட்டி இருக்கிறோம் ஆனால் இந்தப் பகுதியில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான ஈக்கள் கடந்த ஐந்து வருடங்களாக சுற்றி வருகின்றன. இதனால் நோய் தொற்று ஏற்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும்கூட எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை” என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த அனிதா.

மேல்புறத்தில் இடமிருந்து: திம்மநாயக்கன்பாளையத்தில் குடியிருக்கும் அனிதா, ரேவதி, கிட்டன், சுகந்தி
“நாங்கள் நகரப்பகுதியில் இருந்து விலகித் தனியாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக குழந்தைகளுடன் இந்த ஊரில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியுள்ளோம் ஆனால் இந்த பகுதியில் ஈக்கள் தொல்லையினால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை எந்த நேரமும் ஈக்கள் தொந்தரவு எங்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் வீட்டிற்கு வரும்போது மருந்து தெளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு செல்கின்றனர் ஆனால் நாங்களே மருந்து தெளித்தாலும் ஈக்களை ஒழிக்க முடியவில்லை” என்று கவலையுடன் கூறுகிறார் ரேவதி.
ஈக்கள் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இப்பகுதியில் இருக்கின்ற பஞ்சாயத்து அதிகாரிகளிடத்தில் தெரிவித்தோம் அவர்கள் வந்து ஒரே ஒரு தடவை மருந்து தெளித்து விட்டு சென்றனர் பின்பு அவர்கள் இங்கு வரவே இல்லை ஈக்களை ஒழிப்பதற்காக, ஒரு கவரில் மாத்திரை வடிவில் ஒரு மருந்து கொடுத்தார்கள் அந்த மருந்தை வீட்டின் முன்புற வாசலில் கட்டி வைக்க சொல்லி சென்றார்கள். நாங்களும் கட்டி வைத்தோம்.
அதனாலும் பிரச்சினை நிரந்தரமாகத் தீரவில்லை. ஈக்கள் தொந்தரவு இருப்பதை அறிந்த எங்களது உறவினர்கள் எங்களது ஊருக்கு வரவே தயங்குகிறார்கள். இந்த ஊரில் மட்டும் இவ்வளவு ஈக்கள் தொல்லையா என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் சுகந்தி
ஈக்கள் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு கண்டு அந்த ஊர் மக்களை நிம்மதியாக வாழ வைக்க மாவட்ட நிர்வாகமும் சலக்கரசன் பஞ்சாயத்து பேரூராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது
“ஈக்கள் பிரச்சினை தீராத பிரச்சினையாகி விட்டது. இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு மாவட்ட நிர்வாகவும் சூலூர் செலக் கரிசல் பஞ்சாயத்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த ஊரைச் சேர்ந்த கிட்டான் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக் கழிவுகளிலிருந்து இந்த ஈக்கள் வருகிறது என்றும் இப்பகுதியில் உள்ள சிலர் குற்றம்சாட்டுகின்றனர்
“பொதுவாகவே வெயில் காலங்களில் ஈக்கள் அதிக அளவில் இருக்கும் என்றும் மழை நேரங்களில் ஈக்கள் தொந்தரவு இருக்காது. ஒரே பகுதியில் மட்டும் அதிக அளவில் ஈக்கள் இருக்கின்றது என்றால் கால சூழ்நிலை இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த ஊரின் பிரச்சினையை ஆராய்ந்து பார்த்துதான் இதற்கு நிரந்தரத் தீர்வைக் கண்டறிய முடியும்” என்கிறார் பூச்சியியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன்.
இந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக் கழிவுகளிலிருந்து இந்த ஈக்கள் வருகிறது என்றும் இப்பகுதியில் உள்ள சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழிப்பண்ணைகளிலிருந்துதான் ஈக்கள் வருகின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ஈக்கள் பிரச்சினை இந்த ஊரின் தீராத பிரச்சினையாக உள்ளது.
இப்பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு கண்டு அந்த ஊர் மக்களை நிம்மதியாக வாழ வைக்க மாவட்ட நிர்வாகமும் சலக்கரசன் பஞ்சாயத்து பேரூராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.
Read in : English
