Read in : English
தமிழகத்தில் இன்று தொழில் நடத்த வணிக நிறுவனம் தொடங்குவது எளிது. அதற்கு ஆலோசனை சொல்ல அரசும், பல நிறுவனங்களும் உள்ளன ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலை துவங்குவது அவ்வளவு எளிது அல்ல. முறையான ஆலோசனை கிடைக்காது. நிதி திரட்ட முடியாது. அந்தச் சூழ்நிலையிலும் மிகக் கடினமாக முயன்று, தொழிலை நடத்தியவர்கள் பலர் உண்டு. கால வேகத்தில் அந்தத் தொழில் தாக்குப் பிடிக்காமல்கூட போயிருக்கலாம். மாற்றங்களை உள்வாங்கி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் தொழிலை தகவமைத்து, நிலைபெற்றவர்கள் தமிழகத்தில் மிகக் குறைவு. அதில் ஒருவர் குப்புசாமி. இப்போது அவருக்கு 86 வயது.அலங்கார மீன் உற்பத்தியில் துவங்கி, இன்று பயோடெக்னாலஜி துறையில் மருத்துவ ஆய்வுகளுக்கு குறிப்பிட்டவகை மீன்களை பல்கலைக்கழகங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் குப்புசாமி.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் அவரது மீன் விருத்தி (Breeding) தொழிலகம் உள்ளது. இளைஞர் போல் துடிப்புடன் செயல்படும் அவர் வணிக லில் ஆர்வமுள்ளோருக்கு தயங்காமல் ஆலோசனை தருகிறார். மனத்தடையின்றி அனுபவங்களை பகிரும் அவருடன் இன்மதி.காம் இணைய இதழுக்காக நடத்திய உரையாடல்:
ஆடு, பன்றி என கால்நடைகள் வளர்த்தேன். கோழிகளும் வளர்த்தேன். அவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு தருவதாக புகார்கள் வந்ததால், தொடர முடியவில்லை
கேள்வி: அலங்கார மீன் வளர்ப்பு வணிக மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
குப்புசாமி: தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் என் இளமை காலத்தில் ஏற்பட்டிருந்தது. இண்டர்மீடியட் படித்திருந்தேன். கால்நடைத் துறையில் சிறிய பணி ஒன்றும் கிடைத்தது. அந்தப் பணி அனுபவத்தால், ஆடு, பன்றி என கால்நடைகள் வளர்த்தேன். கோழிகளும் வளர்த்தேன். அவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு தருவதாக புகார்கள் வந்ததால், தொடர முடியவில்லை. அவற்றை வளர்த்தாலும் விற்ற உடன் பணம் வராது. கசாப்பு கடைக்காரரிடம் காத்திருந்து பணத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். இதனால் வேறுவழிகளில் தொழில் செய்வது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
மேலும் படிக்க:
சாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்
தமிழக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா!
கேள்வி: என்ன யோசனை?
குப்புசாமி: அண்டை அயலாருக்குத் தொந்தரவு தராமல் தொழில் நடத்த வேண்டும். அதே நேரம் பணமும் முறையாக வர வேண்டும். ஒருநாள், சென்னையில் அப்போதைய மூர் மார்க்கெட் அருகே பெரியமேடு மசூதி வாசலில் நின்று கொண்டிருந்தேன். மசூதி வாசலில் ஒரு பெரிய தணணீர் தொட்டியிருந்தது. தொழுகைக்கு சென்றவர்கள், அதில் கை,கால் முகம் அலம்பியதைக் கண்டேன். அந்தத் தொட்டியில் அழகிய மீன்கள் விடப்பட்டிருந்தன. அதைப் பலரும் விரும்பி ரசித்து, பொரி போன்ற உணவுகளைப் போடுவதைக் கண்டதும், வண்ண மீன்களை வளர்த்து விற்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இன்று பயோடெக்னாலஜி துறையில் மருத்துவ ஆய்வுகளுக்கு குறிப்பிட்ட வகை மீன்களை பல்கலைக்கழகங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் குப்புசாமி.
கேள்வி: அதை உடனடியாக செயல்படுத்த முடிந்ததா?
குப்புசாமி: இல்லை. வகை வகையாக மீன்கள் வேண்டுமே. அதற்காகத் தேடி அலைந்தேன். கொசுவை ஒழிக்க, ஒருவகை மீனை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வீட்டுக் கிணறுகளில் விட்டு வளர்த்தனர். அதைக் கவனித்தேன். அந்த மீன்களை ஆதாரமாகக் கொண்டு தொழிலைத் துவங்கினேன். மூர் மார்க்கெட் எதிரிலே ஒரு கடை எடுத்து விற்பனையகம் நடத்த துணிந்தேன். கால்நடைத் துறையில் பணியாற்றியதால், தொடர்ந்து பலவகை வண்ண மீன் குஞ்சுகளைக் கண்டறிவது சுலபமாக இருந்தது.
அலங்கார மீன் உற்பத்தியில் துவங்கி, இன்று பயோடெக்னாலஜி துறையில் மருத்துவ ஆய்வுகளுக்கு குறிப்பிட்ட வகை மீன்களை பல்கலைக்கழகங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் குப்புசாமி.
கேள்வி: அலங்கார வண்ண மீன்களை எங்கு உற்பத்தி செய்தீர்கள்?
குப்புசாமி: என் வீடு, தாம்பரத்தில் இருந்தது. அங்கு உற்பத்திக் கூடம் அமைத்திருந்தேன். வகை வகையான வண்ண மீன்களை அங்கு உற்பத்தி செய்து, மூர் மார்கெட் கடையில் விற்றேன். யாருக்கும் தொந்தரவு ஏற்படவில்லை. அப்படியும் சிலருக்குப் பொறுக்க முடியவில்லை. கலெக்டரிடம் புகார் கொடுத்து விட்டனர். விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம், விவரமாக எடுத்து சொன்னேன். புரிந்து கொண்டனர். ஆனாலும் அந்தப் புகார் மனதைப் பாதித்தது. எனவே, மனிதக் குடியிருப்பு அற்ற பகுதியான, மணமங்கலம் ஏரி அருகே இந்த இடத்தை வாங்கி, மீன் பெருக்கும் பண்ணைத் தொழிலகத்தை அமைத்தேன்.
பின், நந்தனம் கால்நடைத் துறை அலுவலகத்தில், உணவுக்கான மீன் விற்பனை மையம் ஒன்றை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்தார். அதற்கு அருகிலே, அலங்கார வண்ண மீன் குஞ்சுகள் விற்க வசதியாக, ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். அதில் இணைந்து தொழிலை வளர்த்தேன். நுட்பங்களை பலருக்கும் கற்றுக் கொடுத்துள்ளேன்.
கேள்வி: அந்தக் காலத்தில் மணிமங்கலத்தில் எந்த வசதியும் இருந்திருக்க வாய்ப்பில்லையே?
குப்புசாமி: உண்மைதான். எந்த அடிப்படை வசதியும் அப்போது இல்லை. பனைமரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. என் மனத்திடத்தின் துணை கொண்டே தொழிலகத்தைத் துவங்கினேன். அந்த நாட்களில், கால்நடைத் துறை, தமிழகக் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பை மேம்படுத்த, குஞ்சு பொரிப்பு மற்றும் விற்பனை மையங்களை ஏற்படுத்தி வந்தது. அந்தப் பணியை முன்னின்று செய்துவந்தேன். பல இடங்களில் அப்போது மின்சார வசதியில்லை.
செங்கல்பட்டு மாவட்டம் கோழிவாக்கம் கிராமத்தில் ஒரு குஞ்சு பொரிப்பு மையம் துவங்கினோம். அங்கும் மின் வசதியில்லை. மண்ணெண்ணெய் அரிக்கன் விளக்கு துணை கொண்டு இன்குபேட்டர் அமைப்பு ஏற்படுத்தி, கோழிக்குஞ்சு உற்பத்தியை வெற்றிகரமாக செய்தேன். இதனால் சவாலான பணிகளை நிறைவேற்றும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்தனர் அதிகாரிகள். அந்த அனுபவங்களைக் கொண்டு தொழிலகம் அமைத்தேன்.
கேள்வி: இந்த தொழிலகம் எவ்வளவு காலமாக இயங்குகிறது?
குப்புசாமி: கிட்டத்தட்ட, 35 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது. வண்ண மீன் குஞ்சு உற்பத்தி என்ற நிலையில் இருந்து மாறியுள்ளோம். இப்போது பல்கலைக்கழக ஆய்வகங்களுக்கு, குறிப்பிட்ட வகை மீன்களை கொடுத்து வருகிறோம். என் மகன்கள் வெற்றிகரமாக இதை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் மருத்துவ ஆய்வுக்காக இங்கிருந்து குறிப்பிட்ட வகை மீன்களை அனுப்புகிறோம்.
Read in : English