Read in : English
ஜெய்பீம் திரைப்படத்தில் நடந்தது போல, சமீபத்தில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று இருளர் பழங்குடியினரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
“குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, குறிப்பாக பழங்குடி இருளர்கள் மீது சுமத்தி, அவர்களைச் சித்தரவதை செய்து சிறையில் அடைப்பது என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. 1993ஆம் ஆண்டிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இதுவரை எதுவும் நிருபிக்கப்படவில்லை. பொய் வழக்குகள் போடும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, இருளர் பழங்குடியினரை காரணம் இன்றி கைது செய்து விட்டு, அவர்கள் மீது ஏதாவது குற்றம் சுமத்தி வழக்குப் பதிவு செய்கிறார்கள்” என்கிறார் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி
”ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்து விட்ட வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பழங்குடி இருளர்கள் நலத் திட்ட உதவிகளைப் பெறவும் அவர்களது குழந்தைகள் கல்வி வேலைவாய்ப்பு பெறவும் உதவும் வகையில் சாதிச் சான்றிதழ் வழங்கவும் வீட்டுனைப் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகளே எங்களை நாடி வந்து விவரங்களைக் கேட்டு வீட்டுமனை பட்டா வழங்கவும் சாதிச் சான்றிதழ் வழங்கவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இருளர் பழங்குடியினர் மீது போலீசார் பொய் வழக்குப் போடும் போக்கு தொடர்கிறது. இதைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1993ஆம் ஆண்டிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இதுவரை எதுவும் நிருபிக்கப்படவில்லை. பொய் வழக்குகள் போடும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இருளர் பழங்குடியினர் எதிர்கொள்ளும் பொய் வழக்குகள் குறித்து பேராசிரியர் பிரபா கல்விமணி கூறியதாவது:
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2018இல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொத்தடிமைகளாய் இருந்த இருளர் பழங்குடியினர் 16 பேரும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 15 குழந்தைகளுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 5 குடும்பத்தினர் மட்டும் விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் நீதிபதி சந்துரு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுடன் ஈரோடு, கரூர், தேனி மாவட்டங்களில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று குடும்பத்தினரும் சித்தலிங்கமடம் அருகில் முருகன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து, அதைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
ஆந்திராவிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவரான கணேசன் என்பவரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவை தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால், இதுவரை கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் அந்த 16 பேருக்கும் கிடைக்கவில்லை. எனவே, கணேசனைத் தேடி, பாண்டியன் அவரது மூத்த சகோதரர் ராமச்சந்திரன், அவரது மைத்துனர் குமார் ஆகியோர் தங்களது குடியிருப்பிலிருந்து 1.3.2022ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மூன்று இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
மயிலம் கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் கடை அருகில் வைத்து மயிலம் போலீசார் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டடத்தில் வைத்து அவர்கள் அன்று இரவு முழுவதும் சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் மீது திருட்டு வழக்குப் போடப்பட்டு விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதாவது, மார்ச் 2ஆம் தேதி அதிகாலை கூட்டேரிப்பட்டு, மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்துத் திருடியதாகவும் அய்யனாரப்பன் கோயிலில் திருட முயற்சிக்கும்போது ஊர் மக்களிடம் பாண்டியன் (29), ராமச்சந்திரன் (40), குமார் (35) ஆகியோர் பிடிபட்டதாகவும், கார்த்தி (23), சங்கர்(34), விஜி (36), செல்வம் (28) ஆகிய நான்கு பேர் தப்பிவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்ட செய்தி சில பத்திரிகைகளில் வெளியானது.
கடந்த ஆண்டு மயிலம், வெள்ளிமேடுபேட்டை, விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையங்களில் உள்ள 8 திருட்டு வழக்குகளும் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. அத்துடன், கடந்த ஆண்டு ஐவேலி, கோரைக்கேணி, பொம்பூர் கோயில்களில் நடந்துள்ள திருட்டு வழக்குகளிலும் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் எவர் மீதும் எந்தக் காவல் நிலையத்திலும் இதற்கு முன்பு வழக்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ðபாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிப்பதற்காக மார்ச் 2ஆம் தேதி விழுப்புரம் வந்துள்ளனர். அப்போது சித்தலிங்கமடத்தில் உள்ள சங்கரின் மனைவி விருதாம்பாள் வீட்டில் சோதனை என்ற பெயரில் நுழைந்த போலீசார் இரண்டு ஆம்ளிபையர் மற்றும் இரண்டு ஜோடி கம்மல், காது மாட்டல்க¬ளை எடுத்துச் சென்று விட்டதாகவும் போலீஸ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இருளர் பழங்குடியினர் மீது பொய் வழக்குகளை வாபஸ் பெறவும் பொய் வழக்குகள் போடுவதற்குக் காரணமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருவெண்ணைநல்லூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். இருளர் பழங்குடியினருக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்கிறார் பேராசிரியர் பிரபா கல்விமணி>.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 14.5.2019இல் பொம்பூரைச் சேர்ந்த இருளர் பழங்குடியினரான மோகன் என்பவர் போலீசாரால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மோகனுக்கு புகார் எழுத உதவிய தன்மீதும் இரா. முருகப்பன் மீதும் இருவர் மீதும் இருளர்களைத் தாக்கியதாக பொய் வழக்குப் போட்டு கைது செய்தனர்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இதேபோல, கீழ்மலையனூர் ஆனந்தன், கெங்கபுரம் மாரி, ஊரல் பட்டணம் முத்து ஆகியோர் தாக்கப்பட்ட வழக்குகளில் நிவாரணம் வழங்கவும நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“2011இல் தி.கே. மண்டபத்தைச் சேர்ந்த 13 இருளர் பழங்குடியினர் மீது திருக்கோவிலூர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன், 5 இருளர் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இந்தப் பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த மனித உரிமை ஆர்வலர் பி.வி. ரமேஷ், புகார் எழுதி உதவிய பிரபா கல்விமணி ஆகியோர் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகியும்கூட பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை” என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ப. இளங்கோவன், பொதுச் செயலாளர் சு. ஆறுமுகம், பொருளாளர் மு. நாகராஜன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு சில மாதங்களுக்கு முன்பு எழுதிய மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் பூசாரிப்பாளையம், கீரனூர், காட்டுநெமிலி ஆகிய கிராமங்களிலிருந்து பாபு, மா. வேலு, வெ.வேலு, ராமு. விஜயகுமார், சங்கர், மணிகண்டன் ஆகிய ஏழுபேரையும், செப்டம்பர் 2ஆம் தேதியன்று கும்பகோணம் சுந்தரப் பெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையிலிருந்து மணி, ராசா, சுப்பிரமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்து அனைவர் மீதும் எலவனாசூர்கோட்டை, திருநாலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்கு•களில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பெரிச்சிப் பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் (34), அசோக்குமார் (40), வெற்றிவேல் (29) ஆகியோர் மீது திருப்பூர் மாவட்டம் அலக்கியம் காவல் நிலையத்தில் 25.7.2021அன்று திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட இருளர் பழங்குடியினருக்காக உயர்நீதிமன்றம் வரை சென்று அவர்களுக்கு ஜாமீன் பெறப்பட்டுள்ளது.
28.8.2021லிருந்து பொய்யாக திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு திண்டிவனம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூர்த்திக்கு நீதி கிடைக்க வேண்டும்.
காலங்காலமாக இருளர்கள், குறவர்கள் போன்ற நலிந்த பிரிவினர் மீது சுமத்தப்படும் திருட்டு வழக்குகளுக்கு முடிவு கட்டும் வகையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி த¬லையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Read in : English