Read in : English
வித்தியாசமான உயிரினங்கள் வாழும் செம்மணல் தேரிக்காடு. தமிழகத்தில் விசித்திரமான சூழல் கொண்ட பூமி, செம்மணல் தேரிக்காடு. தாதுக்கள் நிறைந்தது. இந்தியாவில், வேறு எங்கும் பார்க்க முடியாத நிலப்பரப்பு. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, தளர்வுமிக்க சிவப்பு வண்ணத்தில் துலங்கும். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் பகுதியில் உள்ளது. வித்தியாசமான பௌதீகப் பண்புகளையும் படிக அமைப்பையும் கொண்டது. வேறுபட்ட ரசாயன கலவை நிறைந்ததாக காணப்படுகின்றது.
தாமிரபரணி நதியின் தென்கரைப் பகுதியில், கடம்பகுளம் கிராமத்துக்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, காயாமொழி, பரமன்குறிச்சி கிராமங்கள் உள்ளன. இவற்றின் மத்தியில் வங்கக்கடல் மன்னார் வளைகுடா மடியில் தெற்கு, தென்கிழக்கில் சாய்ந்தபடி விரிந்து கிடக்கிறது இந்த பூமி. இதன் பரப்பளவு 12000 ஏக்கர். கிட்டத்தட்ட, 50 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நெகிழ்வு நிறைந்தது இந்த நிலம். இதில் நடந்தால், பாதங்கள் புதையும். நடை வேகம் தளரும். திருநெல்வேலி – திருச்செந்துார் சாலையில், குரும்பூர் அருகே நாலுமாவடி, திசையன்விளை வழியாக, இந்த சிவப்பு மணல் தேரியை அடையலாம். அந்த பகுதியினர், தேரிக்காடு என இதை அழைக்கின்றனர்.
கடல் மட்டத்தை விட, 15 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காற்றின் வேகத்தால், 25 மீட்டர் உயரம் வரை சில நேரம் மணல் குவிந்துவிடும். பள்ளமான இடம், சில நிமிடங்களில் பல மீட்டர் உயர செம்மணல் குன்றாகிவிடும். அது நொடிக்கு நொடி இடம் மாறி நகர்ந்து வியப்பான தோற்றம் தரும்.
தென்மேற்கு பருவக்காற்று மே முதல் செப்டம்பர் வரை இங்கு வீசும். அப்போது மழைப் பொழிவும் அபூர்வமாக நடப்பதுண்டு. அந்த காலத்தில் மணல் குன்றுகள், நகர்ந்தபடியிருப்பதைக் காணலாம். அந்த நேரம் திசை கண்டுபிடித்து அதற்குள் பயணிப்பது சிரமம். திரும்பிய இடம் எல்லாம் மணல் குன்றாக காட்சி தரும். இந்த நிலப்பகுதி விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. ஆனால் பனையும், முந்திரியும் வளர்ந்து செழித்துள்ளன. கடும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல், சில இடங்களில் பனை கருகியுள்ளதையும் காணமுடியும். இந்தத் தேரியை சுற்றியுள்ள கிராம மக்கள், கடின உழைப்பால் பனை, முந்திரி மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வாழ்கின்றனர்.
மழை காலத்தில், தேரிக்காட்டு பள்ளங்களில் நீர் தேங்கும். அவை செயற்கை ஏரிபோல காட்சி தரும். அவற்றை, தருவை என்பர் உள்ளூர் மக்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் காலத்தில் அதைச் சுற்றிய பகுதியில் சிறிய காடு உருவாகும். அதைத் தருவைக்காடு என்பர். அந்தப் பகுதிகளில் தற்போது முருங்கை போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
இந்தச் செம்மணல் தேரி, கடல் சீற்றத்தால் உருவானது அல்ல என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கடல் பொங்கி மணல் மேடு ஏற்படவில்லை. அப்படியானால், சிவந்த மணல் மேடு உருவானதற்கு முறையாக பதில் இன்னும் கிடைக்கவில்லை.
இங்கு நடந்த ஆய்வில், மணல் மூன்று அடுக்குகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அடியில் உள்ள முதல் அடுக்கு, 8000 ஆண்டுகளுக்கு முந்தியது; அதன் மேல் இரண்டாம் அடுக்கு, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். மேல் தளம் 2000 ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் தென்படுகிறது. தென் மேற்கு பருவ காற்றால் அந்தப் பகுதியின் சூழல் மாறிக்கொண்டேயிருக்கிறது. மரங்கள், இருப்பிடங்களைக் கூட திடீர் என மணல் மூடி, புதிய சூழல் உருவாகியுள்ளதாக அங்கு ஆய்வு நடத்திய, ஐரோப்பிரான கால்டுவெல் தெரிவித்துள்ளார்.
காற்றின் போக்குக்கு ஏற்ப, செம்மணல் மேடு இடம் மாறுவதை தடுக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிகம் வளர்க்கலாம் என திருநெல்வேலி கலெக்டராக இருந்த இ.பி.தாமஸ், 1848 இல் ஒரு கருதுகோளை உருவாக்கினார். அவரது முயற்சியால் சிவப்பு மணல் தேரியில், அதிக அளவில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. பனை மரங்கள் அடர்ந்துள்ள குதிரைமொழி தேரி என்ற இடம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தாமிரபரணி நதிக்கரை ஆதிச்சநல்லுார் நாகரிகத்துக்கும், செம்மண் தேரிக்கும் இருந்த தொடர்பு பற்றியும் ஆய்வுகள் நடக்கின்றன.
செம்மண் தேரியில் அகழாய்வு செய்து சில அபூர்வ பொருட்களை எடுத்துள்ளனர், தொல்லியல் ஆய்வாளர்கள். சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைந்திருந்தன. அவற்றில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்றவை கிடைத்துள்ளன. அங்கு ஒரு நாகரிகம் நிலவியதை இது காட்டுகிறது.
தாமிரபரணி நதிக்கரை ஆதிச்சநல்லுார் நாகரிகத்துக்கும், செம்மண் தேரிக்கும் இருந்த தொடர்பு பற்றியும் ஆய்வுகள் நடக்கின்றன. மணல் தேரியில் பாலைவனச்சோலை போல், ஊற்று காணப்படுகிறது. இது புதுக்குடி என்ற பகுதியில் உள்ளது. கடும் கோடையிலும் அது சுவை நீரை சுரந்துகொண்டேயிருக்கிறது. அதன் கரையில், அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. ஏராளமானோர் அங்கு வழிபட வருகின்றனர்.
நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியென்பதால் செம்மணல் தேரியில் பனை, குடைமரம், கருவேலம், சவுக்கு, ஆவாரை, கொழிஞ்சி போன்ற தாவரங்கள் மிகுதியாய் வளர்கின்றன. எட்டி, வெள்ளைத் துவரை போன்ற மரங்கள் முன்பு செழித்திருந்திருந்நதாக அந்த பகுயினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கனிம வளங்களுடன் வித்தியாசமான சூழலைக் கொண்டுள்ள இந்த மணல் மேட்டில், அபூர்வமாக சில உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் முக்கியமானது, விசிறித் தொண்டை ஓணான் (Fan Throated Lisard). இதை அங்குள்ள மக்கள், சின்ன வாக்கா என்று அழைக்கின்றனர். தொண்டையில் விசிறி போன்ற அமைப்பை கொண்டுள்ள இந்த உயிரினம், மிகவும் வறண்ட சூழலிலும் வாழவல்லது. இதை ஆய்வு செய்த அறிஞர்கள் தனித்துவம் மிக்க உயிரினமாக அறிவித்துள்ளனர்.
இந்த சூழலில், சுருட்டை விரியன் பாம்பு, ஆறுப்புள்ளி பொரிவண்டு போன்றவை அதிகம் வாழ்கின்றன. பறவைகளில், பொன்முதுகு மரங்கொத்தி (Black Rumped wood pecker) மஞ்சள் சிட்டு (Common Lora), புள்ளி ஆந்தை (Spoted owl), பச்சை பஞ்சுருட்டான் (Green bee eater), நீலமுக பூங்குயில் (Blue Faced Malkoha), கவுதாரி (Grey franclin), கம்புள் கோழி என்ற வெண்மார்பு நீர்கோழி (White brcasted water hen), சிவப்பு வல்லுாறு (Kestrel), சோளக்குருவி (Rosy Starling) போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
தமிழகத்தில் வித்தியாசமான சூழல் நிலவும் இந்த பூமியில் கனிம வளம் நிறைந்துள்ளது. கார்னெட்டு, இல்மனைட்டு, இருட்டைல் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன. இங்கிருந்துதான் மணற்கொள்ளை அதிகம் நடக்கிறது.
அதிக வறட்சி நிலவும் சூழலில், நீர் பறவையான வெண்மார்பு நீர்கோழி, இந்த பகுதியில் வாழ்வதும் வியப்புக்குரிய ஒன்றாகும். அனல் வீசும் மணலில், கருஞ்சிவப்பு நுனி சிறகன் (Crimsontip), நீல வரியன் (Blue tiger), வெந்தய வரியன் (Plain tiger) ஆகிய வண்ணத்துப்பூச்சிகளும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் வித்தியாசமான சூழல் நிலவும் இந்த பூமியில் கனிம வளம் நிறைந்துள்ளது. கார்னெட்டு, இல்மனைட்டு, இருட்டைல் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன. இங்கிருந்துதான் மணற்கொள்ளை அதிகம் நடக்கிறது. வளம் மிக்க இந்த தாது மண், கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெருமளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மனம் போன போக்கில் மணலை அள்ளுவதால், அந்த பகுதியின் சூழல் சமநிலை குலைகிறது. உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இந்த நிலையை மாற்ற, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக வனத்துறை
Read in : English