Site icon இன்மதி

தமிழ்நாட்டில் மின்துறையில் உடனடியாக சீர்திருத்தங்கள் தேவை!

காற்றாலை, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் பெரிய ஆற்றல் உள்ளது. காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களில் கடந்த ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்ளில் முதலீடு செய்த சில தனியார் மின் உற்பத்தியாளர்கள் அந்தத் திட்டத்தை முடிப்பதற்கும் தொடங்குவதற்கும சவால்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தற்போதைய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்.

Read in : English

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1957ஆம் ஆண்டு இரு பெரிய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் ஒரே தனிநபர் வருமானத்தைக் கொண்டிருந்தன. ஆனால் அதன் பின்னர், இரண்டு மாநிலங்களும் தங்கள் வளர்ச்சிப் பாதையில் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் பல ஆண்டுகள் வேறுபட்டே இருந்தன. இப்போது, ​​தமிழ்நாடு உத்தரப் பிரதேசத்தை விட மூன்று மடங்கு செல்வம் உடைய மாநிலமாக உள்ளது. மேலும், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி என ஒவ்வொரு அளவுகோலிலும் இந்த இரு மாநிலங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. பொருளாதார ரீதியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியதில் மின்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது.

சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலனுக்காக அரசு இலவச மின்சாரம் போன்ற சலுகைகளைப் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு இங்குள்ள மக்களிடையே அதிகமாக இருந்தது. இதன் காரணமாக 1999-2000 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனி நபர் மின் நுகர்வு ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 484 kWh ஆக இருந்தது. இது தேசிய சராசரியை விட மிக அதிகமாகும்.

விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தின் விலை குறைவாகவும்தொழில்துறைக்கான மின்சாரம் அதிக விலைக்கும் கொடுக்கப்பட்டதால் விவசாய துறை வேகமாக வளர்ந்தது. அதேநேரம் தொழில்துறை இதில் சற்று பின்தங்கியது.

தமிழகம் தொழில்மயமாதலின் மேம்பட்ட நிலை அடைந்ததாலேயே மாநிலத்தின் செழிப்பு அதிகரித்தது என்று 2004ஆம் ஆண்டு மேத்யூ ஜோசப் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.  விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தின் விலை குறைவாகவும், தொழில்துறைக்கான மின்சாரம் அதிக விலைக்கும் கொடுக்கப்பட்டதால் விவசாய துறை வேகமாக வளர்ந்தது. அதேநேரம் தொழில்துறை இதில் சற்று பின்தங்கியது.

​​நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு முன்பே தமிழ்நாடு முழுவதுமே மின்மயமாக்கல் எட்டப்பட்டது என்பது அனைவரும் தெரிந்ததே. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு அதிகமாகத் தனியார் முதலீடுகள் வரத் தொடங்கின. இது தமிழ்நாட்டில் வலுவான மற்றும் போட்டியை ஏற்படுத்தும் ஒரு சூழலை ஏற்படுத்தியது.

இருப்பினும், தொலைநோக்குப் பார்வையின்மை, அரசியல் தலைமை மற்றும் மோசமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளிட்டவை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே மின்சாரத் துறையில் அதன் துறைசார்ந்த நன்மைகளைத் தமிழகம் இழந்து வருகிறது. இது பல்வேறு துறைகளையும் பாதித்துள்ளது. உதாரணமாக, சமீபத்தில் நாட்டின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது உத்தரப்பிரதேசம்.

நாட்டில் நிலவும் மின் துறை நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், “2022-23ல், 15வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்படும். அதில் 0.5 சதவீதம் மின் துறை சீர்திருத்தங்களுக்காக இருக்க வேண்டும். இதற்கான நிபந்தனைகள் ஏற்கனவே 2021-22ல் தெரிவிக்கப்பட்டுள்ளன” என்று அறிவித்திருந்தார்.

2022-23 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள இந்த சீர்திருத்த அறிவிப்பு, நீண்டகால மின்துறை சீர்திருத்தங்களின் தேவையை உணர்த்துகிறது. குறிப்பாகக் காலாவதியான கட்டமைப்புகள் மற்றும் சேவைகளால் கடனில் மூழ்கியுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார விநியோக அமைப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் மின் துறையின் செயல்பாடுகள் குறித்த சமீபத்திய சிஏஜி அறிக்கை, தரமற்ற நிலக்கரி கொள்முதல் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக விமர்சித்துள்ளது.

தற்போதைய திமுக அரசும் மாநில நிதி குறித்த தனது வெள்ளை அறிக்கையில், மாநிலத்தில் மின் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் கூறியிருந்தது. ஆனால் இதுவரை அதில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகள், சவால்கள் குறித்து துறை ரீதியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என திமுக அரசு உறுதியளித்திருந்தது. இருப்பினும் மின் துறையில் இதுவரை அதுபோன்ற நடவடிக்கை எடுத்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

முந்தைய ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்களில் காற்றாலை மற்றும் சூரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களில் சில தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. அவர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதில் சவால்களை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

கடந்த 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத்தின் (T&D) போது 18 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டிருந்தது. இது சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம். நடப்பு நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  மூலம் வழங்கப்படும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான மின்சாரம் போன்ற மானியங்கள் மற்றும் இழப்பை ஈடுகட்ட 2021-22 திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மட்டும் மொத்தம் ரூ.19,873 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 0.5 சதவீதம் மாநில ஜிடிபி நிதிப் பற்றாக்குறை வரம்பைப் பயன்படுத்துவதைத் தவிரத் தமிழ்நாட்டிற்கு வேறு வழியில்லை. ஏனெனில் ஏற்கனவே தமிழகம் அதன் நிதி பற்றாக்குறையைக் குறைக்க மாநில ஜிடிபி-இல் 3 சதவீதம் வரை கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாடு சந்தையில் இருந்து 11 சதவீதம் கடன் வாங்குகிறது, இதுதான் நாட்டிலேயே மிக அதிகமாகும். இதில் பெரும்பாலான நிதி 2021 சட்டமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே  செல்கிறது. 2021இல் மொத்தம் 23 மாநிலங்கள் 0.5 சதவீத மாநில ஜிடிபி கடனைப் பயன்படுத்தி தங்கள் மின் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால் தமிழ்நாடோ தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதகாகவே வாங்கும் கடனில் பெரும்பாலான நிதியைச் செலவிடுகிறது

தமிழகம் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் தங்கள் பில்களை உரிய முறையில் வசூலிக்க முடியும்.

தமிழகம் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் தங்கள் பில்களை உரிய முறையில் வசூலிக்க முடியும். அதன் மூலமே 2030இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நம்மால் அடைய முடியும். சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று விவசாயிகளுக்கு நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் மானியத்தை அளிப்பதாகும். தமிழ்நாடு கூடுதலாகக் கடன் வாங்க இப்போது இந்தச் சீர்திருத்தங்களைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் நோக்கம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ இல்லை. மாறாக நேரடியாக மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

தொடர்ந்து வளரும் பொருளாதாரம், மக்களுக்கு கிடைக்கும் விருப்ப வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் மலிவு விலைகள் போன்றவை மின்சாரம் மற்றும் மோசமான அரசியல் ஆகியவற்றால் தடுக்கப்படக்கூடாது. மின்துறையை இன்னும் வலிமையானதாகவும், போட்டித்தன்மையுடனும் மாற்றுவதற்கு தமிழ்நாடு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், மக்கள் மீதும், குறிப்பாக தொழில்துறையினரின் மீதும் சுமை அதிகரிக்கும். இதன் விளைவாக அதிக கட்டணங்கள், அடிக்கடி மின்வெட்டு, பணிநிறுத்தங்கள், மின் பரிமாற்றம் மற்றும் விநியோக இழப்புகள் அதிகரிப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் உள்ளது.

(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Share the Article

Read in : English

Exit mobile version