Site icon இன்மதி

உள்ளுரம்: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்ச்சி நாடகம்!

உள்ளுரம் ஓரங்க நாடகத்தின் சில காட்சிகள் (மோகன்தாஸ் வடகரா)

Read in : English

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் சூழ்நிலையில் ‘மரப்பாச்சி’ குழுவின் சார்பில் ‘உள்ளுரம்’ என்ற விழிப்புணர்வு நாடகத்தை இயக்கியுள்ளார் பேராசிரியர் அ.மங்கை.

பேராசிரியர் A மங்கை

எனது உடல், எனது உரிமை என்று உரக்கச் சொல்லி விழிப்புணர்ச்சியூட்டும் இந்த அரை மணி நேர இந்த ஒரு நபர் நாடகத்துக்கு சென்னை மாவட்ட இந்திய மாணவர் சங்கம் (SFI) ஏற்பாடு செய்திருந்தது.

பார்த்துவிட்டு, கைதட்டிவிட்டுச் சென்றுவிடுவதற்கு மட்டுமல்ல. பாலியல் வன்கொடுமை குறித்த விவாதத்தை அனைத்துத் தரப்பிலும் உண்டாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்பதால் நாடகத்தின் முடிவில் இப்பிரச்சினை குறித்த கருத்துப் பகிர்வும் விவாதமும் நடைபெற்றன.

நம் சமூகத்தின் நிம்மதியைக் குலைக்கும் குழந்தைகள் மீதான வன்கொடுமை நம்மை சமீப காலமாக உலுக்கி எடுக்கிறது. வளரிளம் பருவத்தில் நடக்கும் இந்த அத்துமீறல்கள் பல பிஞ்சுகளின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. செய்வது அறியாமல் கொதிக்கும் நம்பொறுப்பை அடுத்தவரிடம் ஒதுக்க முயல்கிறோம். பள்ளிகள் பெற்றோரைக் குற்றம்சாட்ட, பெற்றோர் #ஆசிரியர்களைக் கேள்வி கேட்க, பெரியவர்கள் இந்தத் தலைமுறையின் அடாவடியான நடையுடை பாவனைகளைக் கண்டிக்க, குற்றம் செய்த கணவனின் அப்பாவித்தனமான ஆணழகை மனைவி ஆதரிக்க, சட்டங்கள் இயற்றப்பட்டும் இச்செய்தி வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்று குழந்தைகள் வாய் பேசாது தவிர்க்க, அவர்கள் தாங்க முடியாமல் சொல்ல முன்வரும் போது அவர்களைத் துளைத் தெடுக்கும் பார்வைகள், பேச்சுகள் என்று நீளுகிறது இச்சூழல்.

நாடக நிகழ்வைக் குறுக்கி விவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இதனை அமைத்துள்ளோம்

இந்தச் சூழலில், பழமைவாத ஆணாதிக்கப் பார்வையைக் களைந்து பாலியல் நடத்தை, பாலுறவில் மையப்படுத்த வேண்டிய ஒப்புதல், உடல்சார் உணர்வுகளை வெளிப்படுத்தத் தேவையான பாதுகாப்பு மிக்க விடுதலை உணர்வு, உளநலம் குறித்த ஆழமான அக்கறை ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள ஒரு வெளி தேவை. அதனை உருவாக்கும் வகையில் ‘உள்ளுரம்’ என்ற நாடகத்தை ‘மரப்பாச்சி’ உருவாக்கியுள்ளது.

“மனநல ஆலோசகர், ஆசிரியர்கள், இதழாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள் கொண்ட குழுவுடன் நடத்திய விவாதம், ஊடகங்களில் வந்த குழந்தைகளின் வாக்குமூலகங்கள், உரையாடல்கள் இந்த நாடகத்துக்கான அடித்தளம் இட்டன. வில்லவன் ராமதாஸ், சுகிர்தராணி, இளம்பிறை, ராஜசங்கீதன், கவிதா கஜேந்திரன், ஸ்ரீஜித் சுந்தரம், மிருதுளா ஆகியோர் நாடகப் பிரதியை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்துள்ளனர். நாடக நிகழ்வைக் குறுக்கி விவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இதனை அமைத்துள்ளோம். தனிநபர் நிகழ்வாக உருவாகியுள்ள இந்த நாடகம் பல இடங்களிலும ஒரு சேர பயணிக்கும் வகையில் அன்பரசி, மிருதுளா, சதாஷி ஆகியோர் இந்த நாடகத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். மூன்று பேர் பயிற்சி பெற்றுள்ளதால், ஒரு பள்ளிக் கூடத்தில் ஒரே நேரத்தில் மூன்று இடங்•களில் சிறுசிறு மாணவர் குழுக்கள் மத்தியில் இந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்ட முடியும்” என்கிறார் மங்கை.

பாலியல் வன்கொடுமை நிகழும்போது குற்றவாளிகளுக்கான தண்டனை பற்றி மட்டுமே பேசிவிட்டுச் சென்று விடுகிறோம்பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை பற்றி பலர் அக்கறை செலுத்துவதில்லை.

பாலியல் வன்கொடுமை நிகழும்போது குற்றவாளிகளுக்கான தண்டனை பற்றி மட்டுமே பேசிவிட்டுச் சென்று விடுகிறோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை பற்றி பலர் அக்கறை செலுத்துவதில்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகள், அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். பெற்றோர்களும், அதை வெளியே சொன்னால் தங்களது குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார்கள். இந்த பயம் குற்றவாளிகளுக்குச் சாதகமாகிவிடுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த நாடகத்தை எங்காவது ஓரிடத்தில் மட்டுமே நடத்திவிட்டு போவது என்பது எங்களது நோக்கமல்ல. சிறுசிறு குழுக்களாக இருந்தாலும், பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் இந்த நாடகத்தை நடத்தி, இந்தப் பிரச்சினை குறித்து அவர்களிடம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். சென்னை சைதாப்பேட்டையில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நடைபெறும் கலை இரவு நிகழ்ச்சியில் இந்த நாடகத்தை மீண்டும் நிகழ்த்த உள்ளோம். அறிவொளி இயக்கம் போல இந்த நாடகத்தை பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களது விருப்பம்” என்கிறார் மங்கை. பாலியல் வன்கொடுமை நிகழும்போது குற்றவாளிகளுக்கான தண்டனை பற்றி மட்டுமே பேசிவிட்டுச் சென்று விடுகிறோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை பற்றி பலர் அக்கறை செலுத்துவதில்லை.

சைல்ட் லைன் தொலைபேசி சேவை: 1098

Share the Article

Read in : English

Exit mobile version