Read in : English
சென்னையிலுள்ள ஜார்ஜ் கோட்டையின் வரலாறை நாம் அறிவோம். ஆனால் 2500 ஆண்டுகளுக் முன், சென்னையில் 24 கோட்டைகளைக் கட்டி, 24 கோட்டங்களை நிர்மாணித்து ஆட்சி செய்த சென்னை குறும்பர் ராஜாக்களை பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த குறும்ப ராஜா வம்சத்தை குறித்து கொலோனில் உள்ள மெக்கன்சி ஆவணங்களிலிருந்துதான் நாம் அறியமுடிகிறது.
இந்த ஆவணங்கள் குறும்பர் ராஜாக்களின் காலத்தைப் பற்றியும், அவர்களின் நிர்வாக திறமை, போர்கள், வீரம் ஆகியவற்றை பற்றியும் விரிவாக பேசுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த அவர்கள் சமண மதத்தை பின்பற்றினார்கள்.
குறும்பர்களின் ஆட்சி:
மெக்கன்சி ஆவணங்களிலிருந்து குறும்ப அரசர்கள் புழலில் பெரிய கோட்டையை கட்டி அதிலிருந்துகொண்டு மிகவும் திறமையுடன் ஆட்சிநடத்தினார்கள் என்று அறியமுடிகிறது.
குறும்பர்களின் தொழில் :
குறும்பர்கள் ஆடு வளர்ப்பது, கம்பளி ஆடைகள் நெய்வது போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். பின்னாட்களில் ஆதொண்டை சக்கரவர்த்தி என்ற குறும்ப ராஜா தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளாளர்களை குடியமர்த்தினான். அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டிருந்தார்கள். இந்த சூழலில் குறும்பர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் அடிக்கடி சண்டை மூண்டன.
வியாபார கோட்டைகளும், கப்பல் வர்த்தகமும்:
அந்த காலத்தில் குறும்ப அரசர்களின் ஆளுகையின் கீழிருந்த மக்கள் பல்வேறு தொழில்களில் கைதேர்ந்தவர்களாயிருந்தார்கள். இதனால் அவர்களின் கப்பல் வர்த்தகம் தழைத்தோங்கியது. வர்த்த ரீதியில் குறும்ப ராஜ்ஜியம் காவேரிபூம்பட்டிணத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அங்கிருந்து தொழில் நிமித்தம் வந்த செட்டிகள் பெரும் வர்த்தக கோட்டைகளை கட்டி நிர்வகித்துவந்தனர்.
இந்த கோட்டைகள் பட்டிபுலம், (செங்கை மாவட்டத்துக் கேளம்பாக்கம் உள்பட்டத்தில் உள்ள ஊர்), சாலகுப்பம், சாலபாக்கம், மெய்யூர், கடலூர் (செய்யூர் வட்டத்தில் உள்ள ஊர் – செங்கை மாவட்டம்), மரக்காணம் போன்ற இடங்களில் அமைந்திருந்தன.
குறும்பரும், சயின மதமும்:
ஆரம்பத்தில் குறும்பர்களுக்கென்று எந்தவொரு மதமும் இருக்கவில்லை. அப்படியிருக்க ஒரு சமண சன்னியாசி அங்கு வந்து சமண மதத்தை பரப்பினான். அந்த சன்னியாசியால் குறும்ப ராசாவுக்காக புழலில் கட்டப்பட்ட சமண கோவில் இன்றும் உள்ளது. வேறு இடங்களிலும் குறும்ப ராசாகளின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட சமண கோவில்கள் காணக்கூடியதாக இருக்கிறது.
சமண கோவில்கள்:
குறும்பர்களால் கட்டபட்ட பல கோவில்கள் பலவும் காலத்தால் சிதைந்து போயிற்று. சிலக் கோவில்கள் வயல் காடுகளில் இருந்ததனால் காலநிலை மாற்றம் காரணமாக சீர்குலைந்து போயின. இன்னும் சில கோவில்கள் பிராமணர்களின் துவேசத்தினால் இடிக்கப்பட்டன.
ஊணவு மற்றும் பழக்கவழக்கங்கள்:
குறும்பர்களின் உணவு பழக்கம் ஏறக்குறைய இப்போதிருக்கும் சமண மதத்தினர் பின்பற்றியதை போன்றே இருந்தது. பிள்ளை பிறந்தவுடன் குறும்ப பெண்கள் பெருங்காயம் உண்ணுவது, ஐந்தாம் நாள் தலை முழுகுவது போன்ற பழக்கவழக்கங்களை கடைபிடித்தனர். அவர்கள் திருமண முறை தற்காலத்தில் சமண மதத்தினர் கடைபிடிப்பதை போலவே இருந்தது. குறும்பர்களில் யாராவது இறந்தால் இறந்த வீட்டுக்கு செல்லுவோர் அனைவரும் சவரம் செய்திருக்க வேண்டும்.
ஆட்சி பரிபாலனமும், அண்டைநாடுகளுடனான உறவும்:
இவ்விதமாக சிறப்புடன் ஆட்சி செய்துவந்த குறும்ப வம்சத்தினருடன் அண்டைநாட்டு அரசர்கள் போரிட்டுவந்தனர். ஆனால் குறும்பர்கள் அவர்களையெல்லாம் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்தினர். சோழ பாண்டிய மன்னர்களும் குறும்ப ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்திருக்கின்றனர். அவர்களையெல்லாம் உயிரை துச்சமென மதிக்கும் குறும்பர்கள் தோற்கடித்து வெற்றிகண்டனர். அவ்வாறு தோற்கடிக்கப்பட்டவர்கள் புழல் கோட்டை வாசலுக்கு எதிர்புறம் விலங்குகள் மாட்டப்பட்டு அடைக்கபட்டனர். அதனுடன் நில்லாமல் குறும்பர்கள் தாங்கள் தோற்கடித்த மக்கள் அனைவரையும் சமண மதத்தை தழுவ செய்தனர்.
தஞ்சாவூர் மன்னன் யாதொண்டைச் சோழர் – குறும்ப ராசன் போர்:
இவ்வாறிருக்க தஞ்சாவூரை ஆண்ட சோழ குல மன்னன் யாதொண்டை சோழன் தேர், யானை, குதிரை, காலாட் படைகளுடன் புழல் கோட்டையை நோக்கி படையெடுத்து வந்தான். ஆனால் குறும்ப ராசாவுடைய படைகள் மிகுந்த வீரத்துடன் போரிட்டு யாதொண்டை சோழனுடைய படைகளை துரத்தியடித்தன. மிகுந்த வேதனையுற்ற சோழ மன்னன் புழல் கோட்டையிலிருந்து தூரமான ஒரு இடத்திற்கு வந்து தனது படைகளுடன் தங்கினான்.
தோல்வியுற்ற சோழர் மன்னன் கண்ட கனவு
இவ்வாறு யாதொண்டை சோழன் வந்து தங்கிய இடம் இன்றும் சோழன்பேடு என்று அழைக்கப்படுகிறது. அங்கு வந்து தங்கிய சோழன் உடனே தன்னுடை இராஜ்ஜியத்திற்கு போகவேண்டுமென்று தெய்வத்தை நொந்துகொண்டு உறங்கினார். அப்போது அவர் ஒரு கனவு கண்டார். அந்த கனவு அவரின் அடுத்த நடவடிக்கையை தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது.
Read in : English