Site icon இன்மதி

நீட்: தமிழுக்கென்று தனிக்கவனம் தேவை – நிபுணர்கள் கருத்து

File photo of counselling

Read in : English

உச்சநீதிமன்றம் நீட் தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும், தேசிய தேர்வு  முகமை தமிழில் தேர்வு நடத்த தயார்நிலையில் இருக்க வேண்டும்.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமல்படுத்தப்பட்டால் மருத்துவ சேர்க்கையில் தாமதம் ஏற்படும். ஏற்கனவே, கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கு சீட்டுகள் ஒதுக்கப்பட பயன்பட்ட மெரிட் மதிப்பெண்கள் பட்டியலை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திருத்தம் செய்ய கோருகிறது
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய தலையிட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தடை செய்யவே அதிக வாய்ப்பிருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும், நீட் தேர்வுகளை நடத்திட தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில், நீட் தேர்வுகள் எதிர்காலத்தில் எவ்வாறு நடத்தப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.  சிபிஎஸ்இ-க்கு  தமிழில் அட்வான்ஸ்ட் அறிவியல் பாடத்தில் கேள்விகளை உருவாக்கும் திறன் குறைபாடு இருப்பதை, திங்கட்கிழமை வந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ள நிலையில், ஆணையத்தின் தயக்கத்தை நியாயப்படுத்தியுள்ளது
 தேசிய தேர்வு முகமையின் கீழ், மாணவர்கள் ஆறு முறைக்கு மேல் தேர்வு எழுத முடியும் என்பதோடு, தேர்வு நடத்தும் பொறுப்பு தனியார் அமைப்புகளிடம் கொடுக்கப்பட இருப்பதாக கூறும் எழிலன் நாகநாதன், “ உச்சநீதிமன்றம் தடை விதிக்காவிடினும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சூழலை சாதகமாக்கிக் கொள்ளும்” என்கிறார். அது நிகழ வேண்டுமென்றால், 2018-ம் ஆண்டு நீட் தேர்வின் பிழைகளிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தும் எழிலன் மேலும் கூறுகையில் “சிபிஎஸ்இ-க்கு தமிழில் தனித்திறன் இருக்கலாம். ஆனால், அட்வான்ஸ்ட் சயின்ஸ் தேர்வுகளை தமிழில் நடத்துவதற்கு திறன் கிடையாது.” என்கிறார்.
தமிழ் வளர்ச்சியில் தொழில்முறையாக நிரூபணமான திறன் படைத்த தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின், நிபுணர்களை அணுகுவதுதான் இதை தீர்க்கும் சரியான அணுகுமுறையாகும்.  ” தமிழ் வழி மருத்துவ படிப்பு மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவ நூல்கள் கிடைக்கின்றன. சிபிஎஸ்இ தமிழக அரசிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் அல்லது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அகராதிகளில் உள்ள சொற்களின் பயன்பாட்டை உறுதி செய்திருக்க வேண்டும்.” என்கிறார் பிரெசிடென்சி கல்லூரியின் தமிழ் பேராசிரியர் எம்.முத்துவேல்
 தமிழ் போன்ற செம்மொழி பொருத்தமான சொல்லை பொருத்துவதற்கென்று தனி நுட்பத்தை கொண்டுள்ளது. ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்வதற்கு கலாச்சார புரிதலுள்ள அணுகுமுறையும் அவசியம்.  எடுத்துக்காட்டாக,  ஆங்கிலத்தில் வார்ம் வெல்கம்,  என்பதை வெப்ப பிரதேசமான தமிழகத்தில் வரவேற்பதற்காகப் பயன்படுத்துவது பொருந்தாது. மாறாக, வெப்பமான வானிலையை எதிர்பார்த்துக் காத்து கிடக்கும் ஐரோப்பியர்களுக்கு அது இனிமையான வரவேற்பாக இருக்கும். 

ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்வதற்கு கலாச்சார புரிதலுள்ள அணுகுமுறையும் அவசியம்.

பேப்பருக்கு, தாள் என்ற தமிழ் சொல் வழக்குக்கு வந்த கதையை சொல்கிறார். பேப்பர் என்ற சொல்லுக்கு நைல் நதிக்கரையில் உள்ள தாவரத்தின் தண்டுப் பகுதியை குறிக்கும் பேப்பிரஸ் (Papyrus) என்ற  சொல்தான் வேர்ச்சொல். அதே வகை தாவரத்தின் அடித்தண்டு பகுதியை இங்கு தாள் என்பர், அது தாளாடி என்ற பயிர் காலத்தை குறிக்கும். ஆக, தமிழாக்கத்தில் தமிழக மக்களின் அனுபவங்களை கணக்கில் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், கிராமப்புற மாணவர்கள் தங்கள் அனுபவங்களோடு பொருத்தி பார்க்கும்படி தொழில்நுட்ப கலைச்சொற்கள் இருக்க வேண்டும் என்றும் முத்துவேல் வலியுறுத்துகிறார்
தமிழில் பரிசோதனை என்பது கண்டிப்பான தேவை என்கிறார் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நல்லி யுவராஜ். “அதுமட்டும்தான் கிராமப்புறத்திலிருந்து தமிழ்வழி கல்வி பயின்று  வரும் திறமைசாலி மாணவர்களை மருத்துவ கல்லூரிக்குள் நுழைவதை உறுதி செய்யும்.  அங்கே நுழைந்தால் போதும், தனித்திறன் படைத்தவர்களாக மிளிர்வார்கள். தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவர்களில் பலர் கிராமப்புறத்தில் தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்னும் மருத்துவர் நல்லி, மருத்துவ கல்விக்கு இடம் கிடைத்ததும் மாணவர்களும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். “தமிழ் மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்குவதில் நானும் பங்காற்றியிருக்கிறேன். ஆனால், சர்வதேச மருத்துவ உலகில் சமகாலத்திற்கு ஏற்றவாறு தகவமைத்து பொருத்தி கொள்ள ஆங்கிலம் அவசியம் பயன்படும்.” என்று தன் அனுபவத்திலிருந்து பேசுகிறார்.

 

 

Share the Article

Read in : English

Exit mobile version